சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Urdu   Cyrillic/Russian  
திருநின்ற சருக்கம்

Back to Top
சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
12.210   திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்  
பண் -   (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )

12.210 திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்   ( )
திருநாவுக் கரசுவளர்
திருத்தொண்டின் நெறிவாழ
வருஞானத் தவமுனிவர்
வாகீசர் வாய்மைதிகழ்
பெருநாமச் சீர்பரவல்
உறுகின்றேன் பேருலகில்
ஒருநாவுக் குரைசெய்ய
ஒண்ணாமை உணராதேன்.
[1]
தொன்மைமுறை வருமண்ணின்
துகளன்றித் துகளில்லா
நன்மைநிலை ஒழுக்கத்தின்
நலஞ்சிறந்த குடிமல்கிச்
சென்னிமதி புனையவளர்
மணிமாடச் செழும்பதிகள்
மன்னிநிறைந் துளதுதிரு
முனைப்பாடி வளநாடு.
[2]
புனப்பண்ணை மணியினொடும்
புறவின்நறும் புதுமலரின்
கனப்பெண்ணில் திரைசுமந்து
கரைமருங்கு பெரும்பகட்டேர்
இனப்பண்ணை உழும்பண்ணை
எறிந்துலவி எவ்வுலகும்
வனப்பெண்ண வரும்பெண்ணை
மாநதிபாய் வளம்பெருகும்.
[3]
காலெல்லாந் தகட்டுவரால்
கரும்பெல்லாங் கண்பொழிதேன்
பாலெல்லாங் கதிர்ச்சாலி
பரப்பெல்லாங் குலைக்கமுகு
சாலெல்லாந் தரளநிரை
தடமெல்லாஞ் செங்கழுநீர்
மேலெல்லாம் அகில்தூபம்
விருந்தெல்லாந் திருந்துமனை.
[4]
கடைஞர்மிடை வயற்குறைத்த
கரும்புகுறை பொழிகொழுஞ்சா
றிடைதொடுத்த தேன்கிழிய
இழிந்தொழுகு நீத்தமுடன்
புடைபரந்து ஞிமிறொலிப்பப்
புதுப்புனல்போல் மடையுடைப்ப
உடைமடையக் கரும்படுகட்
டியினடைப்ப ஊர்கள்தொறும்.
[5]
கருங்கதலிப் பெருங்குலைகள்
களிற்றுக்கைம் முகங்காட்ட
மருங்குவளை கதிர்ச்செந்நெல்
வயப்புரவி முகங்காட்டப்
பெருஞ்சகடு தேர்காட்ட
வினைஞர்ஆர்ப் பொலிபிறங்க
நெருங்கியசா துரங்கபல
நிகர்ப்பனவாம் நிறைமருதம்.
[6]
நறையாற்றுங் கமுகுநவ
மணிக்கழுத்தி னுடன்கூந்தல்
பொறையாற்றா மகளிரெனப்
புறம்பலைதண் டலைவேலித்
துறையாற்ற மணிவண்ணச்
சுரும்பிரைக்கும் பெரும்பெண்ணை
நிறையாற்று நீர்க்கொழுந்து
படர்ந்தேறு நிலைமையதால்.
[7]
மருமேவு மலர்மேய
மாகடலின் உட்படியும்
உருமேகம் எனமண்டி
உகைத்தகருங் கன்றுபோல்
வருமேனிச் செங்கண்வரால்
மடிமுட்டப் பால்சொரியுங்
கருமேதி தனைக்கொண்டு
கரைபுரள்வ திரைவாவி.
[8]
மொய்யளிசூழ் நிரைநீல
முழுவலயங் களின்அலையச்
செய்யதளிர் நறுவிரலிற்
செழுமுகையின் நகஞ்சிறப்ப
மெய்யொளியின் நிழற்காணும்
ஆடியென வெண்மதியை
வையமகள் கையணைத்தால்
போலுயர்வ மலர்ச்சோலை.
[9]
எயிற்குலவும் வளம்பதிகள்
எங்குமணந் தங்கும்வயல்
பயிர்க்கண்வியல் இடங்கள்பல
பரந்துயர்நெற் கூடுகளும்
வெயிற்கதிர்மென் குழைமகளிர்
விரவியமா டமும்மேவி
மயில்குலமும் முகிற்குலமும்
மாறாட மருங்காடும்.
[10]
மறந்தருதீ நெறிமாற
மணிகண்டர் வாய்மைநெறி
அறந்தருநா வுக்கரசும்
ஆலால சுந்தரரும்
பிறந்தருள உளதானால்
நம்மளவோ பேருலகில்
சிறந்ததிரு முனைப்பாடித்
திறம்பாடுஞ் சீர்ப்பாடு.
[11]
இவ்வகைய திருநாட்டில்
எனைப்பலவூர் களுமென்றும்
மெய்வளங்கள் ஓங்கவரும்
மேன்மையன ஆங்கவற்றுள்
சைவநெறி ஏழுலகும்
பாலிக்குந் தன்மையினால்
தெய்வநெறிச் சிவம்பெருக்குந்
திருவாமூர் திருவாமூர்.
[12]
ஆங்குவன முலைகள்சுமந்
தணங்குவன மகளிரிடை
ஏங்குவன நூபுரங்கள்
இரங்குவன மணிக்காஞ்சி
ஓங்குவன மாடநிரை
யொழுகுவன வழுவிலறம்
நீங்குவன தீங்குநெறி
நெருங்குவன பெருங்குடிகள்.
[13]
மலர்நீலம் வயல்காட்டும்
மைஞ்ஞீலம் மதிகாட்டும்
அலர்நீடு மறுகாட்டும்
அணியூசல் பலகாட்டும்
புலர்நீலம் இருள்காட்டும்
பொழுதுழவர் ஒலிகாட்டும்
கலநீடு மனைகாட்டும்
கரைகாட்டாப் பெருவளங்கள்.
[14]
தலத்தின்கண் விளங்கியஅத்
தனிப்பதியில் அனைத்துவித
நலத்தின்கண் வழுவாத
நடைமரபிற் குடிநாப்பண்
விலக்கின்மனை ஒழுக்கத்தின்
மேதக்க நிலைவேளாண்
குலத்தின்கண் வரும்பெருமைக்
குறுக்கையர்தங் குடிவிளங்கும்.
[15]
அக்குடியின் மேல்தோன்றல்
ஆயபெருந் தன்மையினார்
மிக்கமனை அறம்புரிந்து
விருந்தளிக்கும் மேன்மையினார்
ஒக்கல்வளர் பெருஞ்சிறப்பின்
உளரானார் உளரானார்
திக்குநில வும்பெருமை
திகழவரும் புகழனார்.
[16]
புகழனார் தமக்குரிமைப்
பொருவில்குலக் குடியின்கண்
மகிழவரு மணம்புணர்ந்த
மாதினியார் மணிவயிற்றில்
நிகழுமலர்ச் செங்கமல
நிரையிதழின் அகவயினில்
திகழவருந் திருவனைய
திலகவதி யார்பிறந்தார்.
[17]
திலகவதி யார்பிறந்து
சிலமுறையாண் டகன்றதற்பின்
அலகில்கலைத் துறைதழைப்ப
அருந்தவத்தோர் நெறிவாழ
உலகில்வரும் இருள்நீக்கி
ஒளிவிளங்கு கதிர்போல்பின்
மலருமருள் நீக்கியார்
வந்தவதா ரஞ்செய்தார்.
[18]
மாதினியார் திருவயிற்றின்
மன்னியசீர்ப் புகழனார்
காதலனார் உதித்ததற்பின்
கடன்முறைமை மங்கலங்கள்
மேதகுநல் வினைசிறப்ப
விரும்பியபா ராட்டினுடன்
ஏதமில்பல் கிளைபோற்ற
இளங்குழவிப் பதங்கடந்தார்.
[19]
மருணீக்கி யார்சென்னி
மயிர்நீக்கும் மணவினையுந்
தெருணீர்ப்பன் மாந்தரெலாம்
மகிழ்சிறப்பச் செய்ததற்பின்
பொருணீத்தங் கொளவீசிப்
புலன்கொளுவ மனமுகிழ்த்த
சுருணீக்கி மலர்விக்குங்
கலைபயிலத் தொடங்குவித்தார்.
[20]
தந்தையார் களிமகிழ்ச்சி
தலைசிறக்கும் முறைமையினால்
சிந்தைமலர்ந் தெழும்உணர்வில்
செழுங்கலையின் திறங்களெல்லாம்
முந்தைமுறை மையிற்பயின்று
முதிரஅறி வெதிரும்வகை
மைந்தனார் மறுவொழித்த
இளம்பிறைபோல் வளர்கின்றார்.
[21]
அந்நாளில் திலகவதி
யாருக்காண் டாறிரண்டின்
முன்னாக ஒத்தகுல
முதல்வேளாண் குடித்தலைவர்
மின்னார்செஞ் சடையண்ணல்
மெய்யடிமை விருப்புடையார்
பொன்னாரும் மணிமவுலிப்
புரவலன்பால் அருளுடையார்.
[22]
ஆண்டகைமைத் தொழிலின்கண்
அடலரியே றெனவுள்ளார்
காண்டகைய பெருவனப்பிற்
கலிப்பகையார் எனும்பெயரார்
பூண்டகொடைப் புகழனார்
பாற்பொருவின் மகட்கொள்ள
வேண்டியெழுங் காதலினால்
மேலோரைச் செலவிட்டார்.
[23]
அணங்கனைய திலகவதி
யார்தம்மை யாங்கவர்க்கு
மணம்பேசி வந்தவரும்
வந்தபடி அறிவிப்பக்
குணம்பேசிக் குலம்பேசிக்
கோதில்சீர்ப் புகழனார்
பணங்கொளர வகல்அல்குல்
பைந்தொடியை மணம்நேர்ந்தார்.
[24]
கன்னிதிருத் தாதையார்
மணமிசைவு கலிப்பகையார்
முன்னணைந்தார் அறிவிப்ப
வதுவைவினை முடிப்பதன்முன்
மன்னவற்கு வடபுலத்தோர்
மாறேற்க மற்றவர்மேல்
அன்னவர்க்கு விடைகொடுத்தான்
அவ்வினைமேல் அவரகன்றார்.
[25]
வேந்தற்குற் றுழிவினைமேல்
வெஞ்சமத்தில் விடைகொண்டு
போந்தவரும் பொருபடையும்
உடன்கொண்டு சிலநாளில்
காய்ந்தசினப் பகைப்புலத்தைக்
கலந்துநெடுஞ் சமர்க்கடலை
நீந்துவார் நெடுநாள்கள்
நிறைவெம்போர்த் துறைவிளைத்தார்.
[26]
ஆயநா ளிடைஇப்பால்
அணங்கனையாள் தனைப்பயந்த
தூயகுலப் புகழனார்
தொன்றுதொடு நிலையாமை
மேயவினைப் பயத்தாலே
இவ்வுலகை விட்டகலத்
தீயஅரும் பிணியுழந்து
விண்ணுலகில் சென்றடைந்தார்.
[27]
மற்றவர்தாம் உயிர்நீப்ப
மனைவியார் மாதினியார்
சுற்றமுடன் மக்களையும்
துகளாக வேநீத்துப்
பெற்றிமையால் உடனென்றும்
பிரியாத உலகெய்தும்
கற்புநெறி வழுவாமல்
கணவனா ருடன்சென்றார்.
[28]
தாதையா ரும்பயந்த
தாயாரும் இறந்ததற்பின்
மாதரார் திலகவதி
யாரும்அவர் பின்வந்த
காதலனார் மருணீக்கி
யாரும்மனக் கவலையினால்
பேதுறுநற் சுற்றமொடும்
பெருந்துயரில் அழுந்தினார்.
[29]
ஒருவாறு பெருங்கிளைஞர்
மனந்தேற்றத் துயரொழிந்து
பெருவானம் அடைந்தவர்க்குச்
செய்கடன்கள் பெருக்கினார்
மருவார்மேல் மன்னவற்கா
மலையப்போங் கலிப்பகையார்
பொருவாரும் போர்க்களத்தில்
உயிர்கொடுத்துப் புகழ்கொண்டார்.
[30]
வெம்முனைமேற் கலிப்பகையார்
வேல்வேந்தன் ஏவப்போய்
அம்முனையில் பகைமுருக்கி
அமருலகம் ஆள்வதற்குத்
தம்முடைய கடன்கழித்த
பெருவார்த்தை தலஞ்சாற்றச்
செம்மலர்மேல் திருவனைய
திலகவதி யார்கேட்டார்.
[31]
எந்தையும்எம் அனையும்அவர்க்
கெனைக்கொடுக்க இசைந்தார்கள்
அந்தமுறை யால்அவர்க்கே
உரியதுநான் ஆதலினால்
இந்தவுயிர் அவருயிரோ
டிசைவிப்பன் எனத்துணிய
வந்தவர்தம் அடியிணைமேல்
மருணீக்கி யார்விழுந்தார்.
[32]
அந்நிலையில் மிகப்புலம்பி
அன்னையும்அத் தனும்அகன்ற
பின்னையுநான் உமைவணங்கப் பெறுதலினால் உயிர்தரித்தேன்
என்னையினித் தனிக்கைவிட்
டேகுவீர் எனில்யானும்
முன்னம் உயிர் நீப்பனென
மொழிந்திடரின் அழுந்தினார்.
[33]
தம்பியார் உளராக
வேண்டுமென வைத்ததயா
உம்பருல கணையவுறு
நிலைவிலக்க உயிர்தாங்கி
அம்பொன்மணி நூல்தாங்கா
தனைத்துயிர்க்கும் அருள்தாங்கி
இம்பர்மனைத் தவம்புரிந்து
திலகவதி யாரிருந்தார்.
[34]
மாசின்மனத் துயரொழிய
மருணீக்கி யார்நிரம்பித்
தேசநெறி நிலையாமை
கண்டறங்கள் செய்வாராய்க்
காசினிமேல் புகழ்விளங்க
நிதியளித்துக் கருணையினால்
ஆசில்அறச் சாலைகளும்
தண்ணீர்ப்பந் தரும்அமைப்பார்.
[35]
காவளர்த்தும் குளந்தொட்டும்
கடப்பாடு வழுவாமல்
மேவினர்க்கு வேண்டுவன
மகிழ்ந்தளித்தும் விருந்தளித்தும்
நாவலர்க்கு வளம்பெருக
நல்கியும்நா னிலத்துள்ளோர்
யாவருக்குந் தவிராத
ஈகைவினைத் துறைநின்றார்.
[36]
நில்லாத உலகியல்பு
கண்டுநிலை யாவாழ்க்கை
அல்லேன்என் றறத்துறந்து
சமயங்க ளானவற்றின்
நல்லாறு தெரிந்துணர
நம்பர்அரு ளாமையினால்
கொல்லாமை மறைந்துறையும்
அமண்சமயம் குறுகுவார்.
[37]
பாடலிபுத் திரமென்னும்
பதிஅணைந்து சமண்பள்ளி
மாடணைந்தார் வல்லமணர்
மருங்கணைந்து மற்றவர்க்கு
வீடறியும் நெறியிதுவே
எனமெய்போல் தங்களுடன்
கூடவரும் உணர்வுகொளக்
குறிபலவுங் கொளுவினார்.
[38]
அங்கவரும் அமண்சமயத்
தருங்கலைநூ லானவெலாம்
பொங்கும்உணர் வுறப்பயின்றே
அந்நெறியிற் புலன்சிறப்பத்
துங்கமுறும் உடற்சமணர்
சூழ்ந்துமகிழ் வார்அவர்க்குத்
தங்களின்மே லாந்தரும
சேனரெனும் பெயர்கொடுத்தார்.
[39]
அத்துறையின் மீக்கூரும்
அமைதியினால் அகலிடத்தில்
சித்தநிலை அறியாத
தேரரையும் வாதின்கண்
உய்த்தவுணர் வினில்வென்றே
உலகின்கண் ஒளியுடைய
வித்தகராய் அமண்சமயத்
தலைமையினில் மேம்பட்டார்.
[40]
அந்நெறியின் மிக்கார்
அவரொழுக ஆன்றதவச்
செந்நெறியின் வைகும்
திலகவதி யார்தாமும்
தொன்னெறியின் சுற்றத்
தொடர்பொழியத் தூயசிவ
நன்னெறியே சேர்வதற்கு
நாதன்தாள் நண்ணுவார்.
[41]
பேராத பாசப்
பிணிப்பொழியப் பிஞ்ஞகன்பால்
ஆராத அன்புபெற
ஆதரித்த அம்மடவார்
நீராரும் கெடிலவட
நீள்கரையில் நீடுபெருஞ்
சீராரும் திருவதிகை
வீரட்டா னஞ்சேர்ந்தார்.
[42]
சென்றுதிரு வீரட்டா
னத்திருந்த செம்பவளக்
குன்றை அடிபணிந்து
கோதில் சிவசின்னம்
அன்று முதல்தாங்கி
ஆர்வமுறத் தம்கையால்
துன்று திருப்பணிகள்
செய்யத் தொடங்கினார்.
[43]
புலர்வதன்முன் திருவலகு
பணிமாறிப் புனிறகன்ற
நலமலிஆன் சாணத்தால்
நன்குதிரு மெழுக்கிட்டு
மலர்கொய்து கொடுவந்து
மாலைகளும் தொடுத்தமைத்துப்
பலர்புகழும் பண்பினால்
திருப்பணிகள் பலசெய்தார்.
[44]
நாளும்மிகும் பணிசெய்து
குறைந்தடையும் நன்னாளில்
கேளுறும்அன் புறவொழுகுங்
கேண்மையினார் பின்பிறந்தார்
கோளுறுதீ வினைஉந்தப்
பரசமயங் குறித்ததற்கு
மூளுமனக் கவலையினால்
முற்றவரும் துயருழந்து.
[45]
தூண்டுதவ விளக்கனையார்
சுடரொளியைத் தொழுதென்னை
ஆண்டருளின் நீராகில்
அடியேன்பின் வந்தவனை
ஈண்டுவினைப் பரசமயக்
குழிநின்றும் எடுத்தருள
வேண்டுமெனப் பலமுறையும்
விண்ணப்பஞ் செய்தனரால்.
[46]
தவமென்று பாயிடுக்கித்
தலைபறித்து நின்றுண்ணும்
அவமொன்று நெறிவீழ்வான்
வீழாமே அருளுமெனச்
சிவமொன்று நெறிநின்ற
திலகவதி யார்பரவப்
பவமொன்றும் வினைதீர்ப்பார்
திருவுள்ளம் பற்றுவார்.
[47]
மன்னுதபோ தனியார்க்குக்
கனவின்கண் மழவிடையார்
உன்னுடைய மனக்கவலை
ஒழிநீஉன் உடன்பிறந்தான்
முன்னமே முனியாகி
எமையடையத் தவம்முயன்றான்
அன்னவனை இனிச்சூலை
மடுத்தாள்வம் எனஅருளி.
[48]
பண்டுபுரி நற்றவத்துப்
பழுதினள விறைவழுவும்
தொண்டரைஆ ளத்தொடங்கும்
சூலைவே தனைதன்னைக்
கண்தருநெற் றியரருளக்
கடுங்கனல்போல் அடுங்கொடிய
மண்டுபெருஞ் சூலைஅவர்
வயிற்றினிடைப் புக்கதால்.
[49]
அடைவில்அமண் புரிதரும
சேனர்வயிற் றடையும்அது
வடஅனலுங் கொடுவிடமும்
வச்சிரமும் பிறவுமாம்
கொடியவெலாம் ஒன்றாகும்
எனக்குடரின் அகங்குடையப்
படருழந்து நடுங்கிஅமண்
பாழியறை யிடைவீழ்ந்தார்.
[50]
அச்சமயத் திடைத்தாம்முன்
அதிகரித்து வாய்த்துவரும்
விச்சைகளால் தடுத்திடவும்
மேன்மேலும் மிகமுடுகி
உச்சமுற வேதனைநோய்
ஓங்கியெழ ஆங்கவர்தாம்
நச்சரவின் விடந்தலைக்கொண்
டெனமயங்கி நவையுற்றார்.
[51]
அவர்நிலைமை கண்டதற்பின்
அமண்கையர் பலர்ஈண்டிக்
கவர்கின்ற விடம்போல்முன்
கண்டறியாக் கொடுஞ்சூலை
இவர்தமக்கு வந்ததினி
யாதுசெயல் என்றழிந்தார்
தவமென்று வினைபெருக்கிச்
சார்பல்லா நெறிசார்வார்.
[52]
புண்தலைவன் முருட்டமணர்
புலர்ந்துசெயல் அறியாது
குண்டிகைநீர் மந்திரித்துக்
குடிப்பித்தும் தணியாமை
கண்டுமிகப் பீலிகொடு
கால்அளவுந் தடவிடவும்
பண்டையினும் நோவுமிகப்
பரிபவத்தால் இடருழந்தார்.
[53]
தாவாத புகழ்த்தரும
சேனருக்கு வந்தபிணி
ஓவாது நின்றிடலும்
ஒழியாமை உணர்ந்தாராய்
ஆஆநாம் என்செய்கோம்
என்றழிந்த மனத்தினராய்ப்
போவார்கள் இதுநம்மால்
போக்கரிதாம் எனப்புகன்று.
[54]
குண்டர்களுங் கைவிட்டார்
கொடுஞ்சூலை கைக்கொண்டு
மண்டிமிக மேன்மேலும்
முடுகுதலால் மதிமயங்கிப்
பண்டையுற வுணர்ந்தார்க்குத்
திலகவதி யார்உளராக்
கொண்டவர்பால் ஊட்டுவான்
தனைவிட்டார் குறிப்புணர்த்த.
[55]
ஆங்கவன்போய்த் திருவதிகை
தனையடைய அருந்தவத்தார்
பூங்கமழ்நந் தனவனத்தின்
புறத்தணையக் கண்டிறைஞ்சி
ஈங்கியான் உமக்கிளையார்
ஏவலினால் வந்ததெனத்
தீங்குளவோ எனவினவ
மற்றவனும் செப்புவான்.
[56]
கொல்லாது சூலைநோய்
குடர்முடக்கித் தீராமை
எல்லாரும் கைவிட்டார்
இதுசெயல்என் முன்பிறந்த
நல்லாள்பால் சென்றியம்பி
நான்உய்யும் படிகேட்டிங்
கல்லாகும் பொழுதணைவாய்
என்றார்என் றறிவித்தான்.
[57]
என்றவன்முன் கூறுதலும்
யான்அங்குன் னுடன்போந்து
நன்றறியார் அமண்பாழி
நண்ணுகிலேன் எனும்மாற்றம்
சென்றவனுக் குரையென்று
திலகவதி யார்மொழிய
அன்றவனும் மீண்டுபோய்ப்
புகுந்தபடி அவர்க்குரைத்தான்.
[58]
அவ்வார்த்தை கேட்டலுமே
அயர்வெய்தி இதற்கினியான்
எவ்வாறு செய்வன்என
ஈசரருள் கூடுதலால்
ஒவ்வாஇப் புன்சமயத்
தொழியாஇத் துயரொழியச்
செவ்வாறு சேர்திலக
வதியார்தாள் சேர்வனென.
[59]
எடுத்தமனக் கருத்துய்ய
எழுதலால் எழுமுயற்சி
அடுத்தலுமே அயர்வொதுங்கத்
திருவதிகை அணைவதனுக்
குடுத்துழலும் பாயொழிய
உறியுறுகுண் டிகையொழியத்
தொடுத்தபீ லியும்ஒழியப்
போவதற்குத் துணிந்தெழுந்தார்.
[60]
பொய்தருமால் உள்ளத்துப்
புன்சமணர் இடங்கழிந்து
மெய்தருவான் நெறியடைவார்
வெண்புடைவை மெய்சூழ்ந்து
கைதருவார் தமையூன்றிக்
காணாமே இரவின்கண்
செய்தவமா தவர்வாழுந்
திருவதிகை சென்றடைவார்.
[61]
சுலவிவயிற் றகம்கனலுஞ்
சூலைநோ யுடன்தொடரக்
குலவியெழும் பெருவிருப்புக்
கொண்டணையக் குலவரைபோன்
றிலகுமணி மதிற்சோதி
எதிர்கொள்திரு வதிகையினில்
திலகவதி யார்இருந்த
திருமடத்தைச் சென்றணைந்தார்.
[62]
வந்தணைந்து திலகவதி
யார்அடிமே லுறவணங்கி
நந்தமது குலஞ்செய்த
நற்றவத்தின் பயன்அனையீர்
இந்தவுடல் கொடுஞ்சூலைக்
கிடைந்தடைந்தேன் இனிமயங்கா
துய்ந்துகரை யேறுநெறி
உரைத்தருளும் எனவுரைத்து.
[63]
தாளிணைமேல் விழுந்தயருந்
தம்பியார் தமைநோக்கி
ஆளுடைய தம்பெருமான்
அருள்நினைந்து கைதொழுது
கோளில்பர சமயநெறிக்
குழியில்விழுந் தறியாது
மூளும்அருந் துயர்உழந்தீர்
எழுந்திரீர் எனமொழிந்தார்.
[64]
மற்றவ்வுரை கேட்டலுமே
மருணீக்கி யார்தாமும்
உற்றபிணி உடல்நடுங்கி
எழுந்துதொழ உயர்தவத்தோர்
கற்றைவே ணியர்அருளே
காணுமிது கழலடைந்தோர்
பற்றறுப்பார் தமைப்பணிந்து
பணிசெய்வீர் எனப்பணித்தார்.
[65]
என்றபொழு தவரருளை
எதிரேற்றுக் கொண்டிறைஞ்ச
நின்றதபோ தனியாரும்
நின்மலன்பேர் அருள்நினைந்து
சென்றுதிரு வீரட்டம்
புகுவதற்குத் திருக்கயிலைக்
குன்றுடையார் திருநீற்றை
அஞ்செழுத்தோ திக்கொடுத்தார்.
[66]
திருவாளன் திருநீறு
திலகவதி யார்அளிப்பப்
பெருவாழ்வு வந்ததெனப்
பெருந்தகையார் பணிந்தேற்றங்
குருவார அணிந்துதமக்
குற்றவிடத் துய்யுநெறி
தருவாராய்த் தம்முன்பு
வந்தார்பின் தாம்வந்தார்.
[67]
நீறணிந்தார் அகத்திருளும்
நிறைகங்குல் புறத்திருளும்
மாறவருந் திருப்பள்ளி
எழுச்சியினில் மாதவஞ்செய்
சீறடியார் திருவலகுந்
திருமெழுக்குந் தோண்டியுங்கொண்
டாறணிந்தார் கோயிலினுள்
அடைந்தவரைக் கொடுபுக்கார்.
[68]
திரைக்கெடில வீரட்டா
னத்திருந்த செங்கனக
வரைச்சிலையார் பெருங்கோயில்
தொழுதுவலங் கொண்டிறைஞ்சித்
தரைத்தலத்தின் மிசைவீழ்ந்து
தம்பிரான் திருவருளால்
உரைத்தமிழ்மா லைகள்சாத்தும்
உணர்வுபெற உணர்ந்துரைப்பார்.
[69]
நீற்றால்நிறை வாகிய மேனியுடன்
நிறையன்புறு சிந்தையில் நேசமிக
மாற்றார்புரம் மாற்றிய வேதியரை
மருளும்பிணி மாயை அறுத்திடுவான்
கூற்றாயின வாறு விலக்ககிலீர்
எனநீடிய கோதில் திருப்பதிகம்
போற்றாலுல கேழின் வருந்துயரும்
போமாறெதிர் நின்று புகன்றனரால்.
[70]
மன்னும்பதி கம்அது பாடியபின்
வயிறுற்றடு சூலை மறப்பிணிதான்
அந்நின்ற நிலைக்கண் அகன்றிடலும்
அடியேன்உயி ரோடருள் தந்ததெனாச்
செந்நின்ற பரம்பொரு ளானவர்தம்
திருவாரருள் பெற்ற சிறப்புடையோர்
முன்னின்ற தெருட்சி மருட்சியினால்
முதல்வன்கரு ணைக்கடல் மூழ்கினரே.
[71]
அங்கங்கள் அடங்க உரோமமெலாம்
அடையப்புள கங்கண் முகிழ்த்தலரப்
பொங்கும்புனல் கண்கள் பொழிந்திழியப்
புவிமீது விழுந்து புரண்டயர்வார்
இங்கென்செயல் உற்ற பிழைப்பதனால்
ஏறாத பெருந்திடர் ஏறிடநின்
தங்குங்கரு ணைப்பெரு வெள்ளமிடத்
தகுமோவென இன்னன தாமொழிவார்.
[72]
பொய்வாய்மை பெருக்கிய புன்சமயப்
பொறியில்சமண் நீசர் புறத்துறையாம்
அவ்வாழ்குழி யின்கண் விழுந்தெழுமா
றறியாது மயங்கி அவம்புரிவேன்
மைவாச நறுங்குழல் மாமலையாள்
மணவாளன் மலர்க்கழல் வந்தடையும்
இவ்வாழ்வு பெறத்தரு சூலையினுக்
கெதிர்செய்குறை யென்கொல் எனத்தொழுதார்.
[73]
மேவுற்றஇவ் வேலையில் நீடியசீர்
வீரட்டம் அமர்ந்த பிரானருளால்
பாவுற்றலர் செந்தமி ழின்சொல்வளப்
பதிகத்தொடை பாடிய பான்மையினால்
நாவுக்கர சென்றுல கேழினும்நின்
நன்னாமம் நயப்புற மன்னுகஎன்
றியாவர்க்கும் வியப்புற மஞ்சுறைவா
னிடையேயொரு வாய்மை எழுந்ததுவே.
[74]
இத்தன்மை நிகழ்ந்துழி நாவின்மொழிக்
கிறையாகிய அன்பரும் இந்நெடுநாள்
சித்தந்திகழ் தீவினை யேன்அடையுந்
திருவோஇது என்று தெருண்டறியா
அத்தன்மைய னாய இராவணனுக்
கருளுங்கரு ணைத்திற மானஅதன்
மெய்த்தன்மை யறிந்து துதிப்பதுவே
மேல்கொண்டு வணங்கினர் மெய்யுறவே.
[75]
பரசுங்கரு ணைப்பெரி யோன்அருளப்
பறிபுன்தலை யோர்நெறி பாழ்படவந்
தரசிங்கருள் பெற்றுல குய்ந்ததெனா
அடியார்புடை சூழதி கைப்பதிதான்
முரசம்பட கந்துடி தண்ணுமையாழ்
முழவங்கிளை துந்துபி கண்டையுடன்
நிரைசங்கொலி எங்கும் முழங்குதலால்
நெடுமாகடல் என்ன நிறைந்துளதே.
[76]
மையற்றுறை யேறி மகிழ்ந்தலர்சீர்
வாகீசர் மனத்தொடு வாய்மையுடன்
மெய்யுற்ற திருப்பணி செய்பவராய்
விரவுஞ்சிவ சின்னம் விளங்கிடவே
எய்துற்ற தியானம் அறாவுணர்வும்
ஈறின்றி எழுந்திரு வாசகமும்
கையில்திக ழும்உழ வாரமுடன்
கைத்தொண்டு கலந்து கசிந்தனரே.
[77]
மெய்ம்மைப்பணி செய்த விருப்பதனால்
விண்ணோர்தனி நாயக னார்கழலில்
தம்மிச்சை நிரம்ப வரம்பெறும்அத்
தன்மைப்பதி மேவிய தாபதியார்
பொய்ம்மைச்சம யப்பிணி விட்டவர்முன்
போதும்பிணி விட்டரு ளிப்பொருளா
எம்மைப்பணி கொள்கரு ணைத்திறமிங்
கியார்பெற்றனர் என்ன இறைஞ்சினரே.
[78]
இன்ன தன்மையில் இவர்சிவ
நெறியினை யெய்தி
மன்னு பேரருள் பெற்றிடர்
நீங்கிய வண்ணம்
பன்னு தொன்மையிற் பாடலி
புத்திர நகரில்
புன்மை யேபுரி அமணர்தாம்
கேட்டது பொறாராய்.
[79]
தரும சேனர்க்கு வந்தஅத்
தடுப்பருஞ் சூலை
ஒருவ ராலும்இங் கொழிந்திடா
மையின்அவர் உயப்போய்ப்
பெருகு சைவராய்ப் பெயர்ந்துதம்
பிணியொழித் துய்ந்தார்
மருவு நம்பெருஞ் சமயம்வீழ்ந்
ததுவென மருள்வார்.
[80]
மலையும் பல்சம யங்களும்
வென்றுமற் றவரால்
நிலையும் பெற்றஇந் நெறிஇனி
அழிந்ததென் றழுங்கிக்
கொலையும் பொய்ம்மையும் இலமென்று
கொடுந்தொழில் புரிவோர்
தலையும் பீலியும் தாழவந்
தொருசிறை சார்ந்தார்.
[81]
இவ்வ கைப்பல அமணர்கள்
துயருடன் ஈண்டி
மெய்வ கைத்திறம் அறிந்திடில்
வேந்தனும் வெகுண்டு
சைவ னாகிநம் விருத்தியும்
தவிர்க்கும்மற் றினிநாம்
செய்வ தென்னென வஞ்சனை
தெரிந்துசித் திரிப்பார்.
[82]
தவ்வை சைவத்து நிற்றலின்
தருமசே னருந்தாம்
பொய்வ குத்ததோர் சூலைதீர்ந்
திலதெனப் போயிங்
கெவ்வ மாகஅங் கெய்திநஞ்
சமயலங் கனமும்
தெய்வ நிந்தையும் செய்தனர்
எனச்சொலத் தெளிந்தார்.
[83]
சொன்ன வண்ணமே செய்வது
துணிந்ததுன் மதியோர்
முன்னம் நாஞ்சென்று முறைப்படு
வோமென முயன்றே
இன்ன தன்மையில் இருட்குழாஞ்
செல்வது போல
மன்ன னாகிய பல்லவன்
நகரில்வந் தணைந்தார்.
[84]
உடையொ ழிந்தொரு பேச்சிடை
யின்றிநின் றுண்போர்
கடைய ணைந்தவன் வாயில்கா
வலருக்கு நாங்கள்
அடைய வந்தமை அரசனுக்
கறிவியும் என்ன
இடைய றிந்துபுக் கவருந்தம்
இறைவனுக் கிசைப்பார்.
[85]
அடிகண்மார் எல்லாரும்,
ஆகுலமாய் மிகவழிந்து
கொடிநுடங்கு திருவாயில்
புறத்தணைந்தார் எனக்கூற
வடிநெடுவேல் மன்னவனும்
மற்றவர்சார் பாதலினால்
கடிதணைவான் அவர்க்குற்ற
தென்கொல்எனக் கவன்றுரைத்தான்.
[86]
கடைகாவல் உடையார்கள்
புகுதவிடக் காவலன்பால்
நடையாடுந் தொழிலுடையார்
நண்ணித்தாம் எண்ணியவா
றுடையாரா கியதரும
சேனர்பிணி யுற்றாராய்ச்
சடையானுக் காளாய்நின்
சமயம்அழித் தாரென்றார்.
[87]
விரையலங்கல் பல்லவனும்
அதுகேட்டு வெகுண்டெழுந்து
புரையுடைய மனத்தினராய்ப்
போவதற்குப் பொய்ப்பிணிகொண்
டுரைசிறந்த சமயத்தை
அழித்தொழியப் பெறுவதே
கரையில்தவத் தீர்இதனுக்
கென்செய்வ தெனக்கனன்றான்.
[88]
தலைநெறியா கியசமயந்
தன்னையழித் துன்னுடைய
நிலைநின்ற தொல்வரம்பில்
நெறியழித்த பொறியிலியை
அலைபுரிவாய் எனப்பரவி
வாயால்அஞ் சாதுரைத்தார்
கொலைபுரியா நிலைகொண்டு
பொய்யொழுகும் அமண்குண்டர்.
[89]
அருள்கொண்ட உணர்வின்றி
நெறிகோடி அறிவென்று
மருள்கொண்ட மன்னவனும்
மந்திரிகள் தமைநோக்கித்
தெருள்கொண்டோர் இவர்சொன்ன
தீயோனைச் செறுவதற்குப்
பொருள்கொண்டு விடாதென்பால்
கொடுவாரும் எனப்புகன்றான்.
[90]
அரசனது பணிதலைநின்
றமைச்சர்களும் அந்நிலையே
முரசதிருந் தானையொடு
முன்சென்று முகில்சூழ்ந்து
விரைசெறியுஞ் சோலைசூழ்
திருவதிகை தனைமேவிப்
பரசமயப் பற்றறுத்த
பான்மையினார் பாற்சென்றார்.
[91]
சென்றணைந்த அமைச்சருடன்
சேனைவீ ரருஞ்சூழ்ந்து
மின்தயங்கு புரிவேணி
வேதியனார் அடியவரை
இன்றுநுமை அரசன்அழைத்
தெமைவிடுத்தான் போதுமென
நின்றவரை நேர்நோக்கி
நிறைதவத்தோர் உரைசெய்வார்.
[92]
நாமார்க்குங் குடியல்லோம்
என்றெடுத்து நான்மறையின்
கோமானை நதியினுடன்
குளிர்மதிவாழ் சடையானைத்
தேமாலைச் செந்தமிழின்
செழுந்திருத்தாண் டகம்பாடி
ஆமாறு நீரழைக்கும்
அடைவிலமென் றருள்செய்தார்.
[93]
ஆண்டஅர சருள்செய்யக்
கேட்டவரும் அடிவணங்கி
வேண்டியவர்க் கொண்டேக
விடையுகைத்தார் திருத்தொண்டர்
ஈண்டுவரும் வினைகளுக்கெம்
பிரானுளனென் றிசைந்திருந்தார்
மூண்டசினப் போர்மன்னன்
முன்னணைந்தங் கறிவித்தார்.
[94]
பல்லவனும் அதுகேட்டுப்
பாங்கிருந்த பாயுடுக்கை
வல்அமணர் தமைநோக்கி
மற்றவனைச் செய்வதினிச்
சொல்லுமென அறந்துறந்து
தமக்குறுதி அறியாத
புல்லறிவோர் அஞ்சாது
நீற்றறையில் இடப்புகன்றார்.
[95]
அருகணைந்தார் தமைநோக்கி
அவ்வண்ணஞ் செய்கவெனப்
பெருகுசினக் கொடுங்கோலான்
மொழிந்திடலும் பெருந்தகையை
உருகுபெருந் தழல்வெம்மை
நீற்றறையின் உள்ளிருத்தித்
திருகுகருந் தாட்கொளுவிச்
சேமங்கள் செய்தமைத்தார்.
[96]
ஆண்டஅர சதனகத்துள்
அணைந்தபொழு தம்பலத்துத்
தாண்டவமுன் புரிந்தருளுந்
தாள்நிழலைத் தலைக்கொண்டே
ஈண்டுவருந் துயருளவோ
ஈசனடி யார்க்கென்று
மூண்டமனம் நேர்நோக்கி
முதல்வனையே தொழுதிருந்தார்.
[97]
வெய்யநீற் றறையதுதான்
வீங்கிளவே னிற்பருவந்
தைவருதண் தென்றல்அணை
தண்கழுநீர்த் தடம்போன்று
மொய்யொளிவெண் ணிலவலர்ந்து
முரன்றயாழ் ஒலியினதாய்
ஐயர்திரு வடிநீழல்
அருளாகிக் குளிர்ந்ததே.
[98]
மாசில்மதி நீடுபுனல்
மன்னிவளர் சென்னியனைப்
பேசஇனி யானையுல
காளுடைய பிஞ்ஞகனை
ஈசனைஎம் பெருமானை
எவ்வுயிருந் தருவானை
ஆசையில்ஆ ராவமுதை
அடிவணங்கி இனிதிருந்தார்.
[99]
ஓரெழுநாள் கழிந்ததற்பின்
உணர்வில்அம ணரையழைத்துப்
பாருமினி நீற்றறையை
எனவுரைத்தான் பல்லவனுங்
காரிருண்ட குழாம்போலும்
உருவுடைய காரமணர்
தேருநிலை இல்லாதார்
நீற்றறையைத் திறந்தார்கள்.
[100]
ஆனந்த வெள்ளத்தின்
இடைமூழ்கி யம்பலவர்
தேனுந்து மலர்ப்பாதத்
தமுதுண்டு தெளிவெய்தி
ஊனந்தான் இலராகி
உவந்திருந்தார் தமைக்கண்டு
ஈனந்தங் கியதிலதாம்
என்னஅதி சயம்என்றார்.
[101]
அதிசயம்அன் றிதுமுன்னை
அமண்சமயச் சாதகத்தால்
இதுசெய்து பிழைத்திருந்தான்
எனவேந்தற் குரைசெய்து
மதிசெய்வ தினிக்கொடிய
வல்விடம்ஊட் டுவதென்று
முதிரவரும் பாதகத்தோர்
முடைவாயால் மொழிந்தார்கள்.
[102]
ஆங்கதுகேட் டலுங்கொடிய
அமண்சார்பாற் கெடுமன்னன்
ஓங்குபெரு மையலினால்
நஞ்சூட்டும் எனவுரைப்பத்
தேங்காதார் திருநாவுக்
கரசரைஅத் தீயவிடப்
பாங்குடைய பாலடிசில்
அமுதுசெயப் பண்ணினார்.
[103]
நஞ்சும்அமு தாம்எங்கள்
நாதனடி யார்க்கென்று
வஞ்சமிகு நெஞ்சுடையார்
வஞ்சனையாம் படியறிந்தே
செஞ்சடையார் சீர்விளக்குந்
திறலுடையார் தீவிடத்தால்
வெஞ்சமணர் இடுவித்த
பாலடிசில் மிசைந்திருந்தார்.
[104]
பொடியார்க்குந் திருமேனிப்
புனிதர்க்குப் புவனங்கள்
முடிவாக்குந் துயர்நீங்க
முன்னைவிடம் அமுதானால்
படியார்க்கும் அறிவரிய
பசுபதியார் தம்முடைய
அடியார்க்கு நஞ்சமுதம்
ஆவதுதான் அற்புதமோ.
[105]
அவ்விடத்தை ஆண்டஅர
சமுதுசெய்து முன்னிருப்ப
வெவ்விடமும் அமுதாயிற்
றெனஅமணர் வெருக்கொண்டே
இவ்விடத்தில் இவன்பிழைக்கில்
எமக்கெல்லாம் இறுதியெனத்
தெவ்விடத்துச் செயல்புரியுங்
காவலற்குச் செப்புவார்.
[106]
நஞ்சுகலந் தூட்டிடவும்
நஞ்சமயத் தினில்விடந்தீர்
தஞ்சமுடை மந்திரத்தால்
சாதியா வகைதடுத்தான்
எஞ்சும்வகை அவற்கிலதேல்
எம்முயிரும் நின்முறையும்
துஞ்சுவது திடமென்றார்
சூழ்வினையின் துறைநின்றார்.
[107]
மற்றவர்தம் மொழிகேட்டு
மதிகெட்ட மன்னவனும்
செற்றவனை இனிக்கடியும்
திறமெவ்வா றெனச்செப்ப
உற்றவரு மந்திரசா தகநாங்கள்
ஒழித்திடநின்
கொற்றவயக் களிறெதிரே
விடுவதெனக் கூறினார்.

[108]
மாபாவிக் கடைஅமணர்
வாகீசத் திருவடியாங்
காபாலி அடியவர்பாற்
கடக்களிற்றை விடுகென்னப்
பூபாலர் செயன்மேற்கொள்
புலைத்தொழிலோன் அவர்தம்மேற்
கோபாதி சயமான
கொலைக்களிற்றை விடச்சொன்னான்.
[109]
கூடத்தைக் குத்தியொரு
குன்றமெனப் புறப்பட்டு
மாடத்தை மறித்திட்டு
மண்டபங்கள் எடுத்தெற்றித்
தாடத்திற் பரிக்காரர்
தலையிடறிக் கடக்களிற்றின்
வேடத்தால் வருங்கூற்றின்
மிக்கதொரு விறல்வேழம்.
[110]
பாசத்தொடை நிகளத்தொடர்
பறியத்தறி முறியா
மீசுற்றிய பறவைக்குலம்
வெருவத்துணி விலகா
ஊசற்கரம் எதிர்சுற்றிட
உரறிப்பரி உழறா
வாசக்கட மழைமுற்பட
மதவெற்பெதிர் வருமால்.
[111]
இடியுற்றெழும் ஒலியில்திசை
இபமுட்கிட அடியில்
படிபுக்குற நெளியப்படர்
பவனக்கதி விசையில்
கடிதுற்றடு செயலிற்கிளர்
கடலிற்படு கடையின்
முடிவிற்கனல் எனமுற்சினம்
முடுகிக்கடு கியதே.
[112]
மாடுற்றணை இவுளிக்குலம்
மறியச்செறி வயிரக்
கோடுற்றிரு பிளவிட்டறு
குறைகைக்கொடு முறியச்
சாடுற்றிடு மதில்தெற்றிகள்
சரியப்புடை அணிசெற்
றாடுற்றகல் வெளியுற்றதவ்
வடர்கைக்குல வரையே.
[113]
பாவக்கொடு வினைமுற்றிய
படிறுற்றடு கொடியோர்
நாவுக்கர செதிர்முற்கொடு
நணுகிக்கரு வரைபோல்
ஏவிச்செறு பொருகைக்கரி
யினையுய்த்திட வெருளார்
சேவிற்றிகழ் பவர்பொற்கழல்
தெளிவுற்றனர் பெரியோர்.
[114]
அண்ணல் அருந்தவ வேந்தர்
ஆனைதம் மேல்வரக் கண்டு
விண்ணவர் தம்பெரு மானை
விடையுகந் தேறும் பிரானைச்
சுண்ணவெண் சந்தனச் சாந்து
தொடுத்த திருப்பதி கத்தை
மண்ணுல குய்ய வெடுத்து
மகிழ்வுட னேபாடு கின்றார்.
[115]
வஞ்சகர் விட்ட சினப்போர்
மதவெங் களிற்றினை நோக்கிச்
செஞ்சடை நீள்முடிக் கூத்தர்
தேவர்க்குந் தேவர் பிரானார்
வெஞ்சுடர் மூவிலைச் சூல
வீரட்டர் தம்அடி யோம்நாம்
அஞ்சுவ தில்லைஎன் றென்றே
அருந்தமிழ் பாடி அறைந்தார்.
[116]
தண்டமிழ் மாலைகள் பாடித்
தம்பெரு மான்சர ணாகக்
கொண்ட கருத்தில் இருந்து
குலாவிய அன்புறு கொள்கைத்
தொண்டரை முன்வல மாகச்
சூழ்ந்தெதிர் தாழ்ந்து நிலத்தில்
எண்டிசை யோர்களுங் காண
இறைஞ்சி எழுந்தது வேழம்.
[117]
ஆண்ட அரசை வணங்கி
அஞ்சிஅவ் வேழம் பெயரத்
தூண்டிய மேன்மறப் பாகர்
தொடக்கி அடர்த்துத் திரித்து
மீண்டும் அதனை அவர்மேல்
மிறைசெய்து காட்டிட வீசி
ஈண்டவர் தங்களை யேகொன்
றமணர்மேல் ஓடிற் றெதிர்ந்தே.
[118]
ஓடி அருகர்கள் தம்மை
உழறி மிதித்துப் பிளந்து
நாடிப் பலரையுங் கொன்று
நகரங் கலங்கி மறுக
நீடிய வேலை கலக்கும்
நெடுமந் தரகிரி போல
ஆடியல் யானைஅம் மன்னற்
காகுலம் ஆக்கிய தன்றே.
[119]
யானையின் கையிற் பிழைத்த
வினைஅமண் கையர்கள் எல்லாம்
மானம் அழிந்து மயங்கி
வருந்திய சிந்தைய ராகித்
தானை நிலமன்னன் தாளில்
தனித்தனி வீழ்ந்து புலம்ப
மேன்மை நெறிவிட்ட வேந்தன்
வெகுண்டினிச் செய்வதென் என்றான்.
[120]
நங்கள் சமயத்தின் நின்றே
நாடிய முட்டி நிலையால்
எங்கள் எதிரே றழிய
யானையால் இவ்வண்ணம் நின்சீர்
பங்கப் படுத்தவன் போகப்
பரிபவந் தீரும் உனக்குப்
பொங்கழல் போக அதன்பின்
புகையகன் றாலென என்றார்.
[121]
அல்லிருள் அன்னவர் கூற
அரும்பெரும் பாவத் தவன்பின்
தொல்லைச் சமயம் அழித்துத்
துயரம் விளைத்தவன் தன்னைச்
சொல்லும் இனிச்செய்வ தென்னச்
சூழ்ச்சி முடிக்குந் தொழிலோர்
கல்லுடன் பாசம் பிணித்துக்
கடலிடைப் பாய்ச்சுவ தென்றார்.
[122]
ஆங்கது கேட்ட அரசன்
அவ்வினை மாக்களை நோக்கித்
தீங்கு புரிந்தவன் தன்னைச்
சேமம் உறக்கொடு போகிப்
பாங்கொரு கல்லில் அணைத்துப்
பாசம் பிணித்தோர் படகில்
வீங்கொலி வேலையில் எற்றி
வீழ்த்துமின் என்று விடுத்தான்.
[123]
அவ்வினை செய்திடப் போகும்
அவருடன் போயரு கந்த
வெவ்வினை யாளருஞ் சென்று
மேவிட நாவுக் கரசர்
செவ்விய தம்திரு உள்ளஞ்
சிறப்ப அவருடன் சென்றார்
பவ்வத்தின் மன்னவன் சொன்ன
படிமுடித் தார்அப் பதகர்.
[124]
அப்பரி சவ்வினை முற்றி
அவர்அகன் றேகிய பின்னர்
ஒப்பரும் ஆழ்கடல் புக்க
உறைப்புடை மெய்த்தொண்டர் தாமும்
எப்பரி சாயினு மாக
ஏத்துவன் எந்தையை யென்று
செப்பிய வண்டமிழ் தன்னால்
சிவன்அஞ் செழுத்துந் துதிப்பார்.
[125]
சொற்றுணை வேதியன்
என்னுந் தூமொழி
நற்றமிழ் மாலையா
நமச்சி வாயவென்
றற்றமுன் காக்கும்அஞ்
செழுத்தை அன்பொடு
பற்றிய உணர்வினால்
பதிகம் பாடினார்.
[126]
பெருகிய அன்பினர்
பிடித்த பெற்றியால்
அருமல ரோன்முதல்
அமரர் வாழ்த்துதற்
கரியஅஞ் செழுத்தையும்
அரசு போற்றிடக்
கருநெடுங் கடலினுட்
கல்மி தந்ததே.
[127]
அப்பெருங் கல்லும்அங்
கரசு மேல்கொளத்
தெப்பமாய் மிதத்தலில்
செறித்த பாசமும்
தப்பிய ததன்மிசை
இருந்த தாவில்சீர்
மெய்ப்பெருந் தொண்டனார்
விளங்கித் தோன்றினார்.
[128]
இருவினைப் பாசமும்
மலக்கல் ஆர்த்தலின்
வருபவக் கடலில்வீழ்
மாக்கள் ஏறிட
அருளுமெய் அஞ்செழுத்
தரசை இக்கடல்
ஒருகல்மேல் ஏற்றிடல்
உரைக்க வேண்டுமோ.
[129]
அருள்நயந் தஞ்செழுத்
தேத்தப் பெற்றஅக்
கருணைநா வரசினைத்
திரைக்க ரங்களால்
தெருள்நெறி நீர்மையின்
சிரத்தில் தாங்கிட
வருணனுஞ் செய்தனன்
முன்பு மாதவம்.
[130]
வாய்ந்தசீர் வருணனே வாக்கின் மன்னரைச்
சேர்ந்தடை கருங்கலே சிவிகை ஆயிட
ஏந்தியே கொண்டெழுந் தருளு வித்தனன்
பூந்திருப் பாதிரிப் புலியூர்ப் பாங்கரில்.


[131]
அத்திருப் பதியினில்
அணைந்த அன்பரை
மெய்த்தவக் குழாமெலாம்
மேவி ஆர்த்தெழ
எத்திசை யினும்அர
வென்னும் ஓசைபோல்
தத்துநீர்ப் பெருங்கடல்
தானும் ஆர்த்ததே.
[132]
தொழுந்தகை நாவினுக்
கரசுந் தொண்டர்முன்
செழுந்திருப் பாதிரிப்
புலியூர்த் திங்கள்வெண்
கொழுந்தணி சடையரைக்
கும்பிட் டன்புற
விழுந்தெழுந் தருள்நெறி
விளங்கப் பாடுவார்.
[133]
ஈன்றாளு மாய்எனக் கெந்தையு
மாகி யெனவெடுத்துத்
தோன்றாத் துணையாய் இருந்தனன்
தன்அடி யோங்கட்கென்று
வான்தாழ் புனல்கங்கை வாழ்சடை
யானைமற் றெவ்வுயிர்க்குஞ்
சான்றாம் ஒருவனைத் தண்டமிழ்
மாலைகள் சாத்தினரே.
[134]
மற்றும் இனையன வண்டமிழ்
மாலைகள் பாடிவைகி
வெற்றி மழவிடை வீரட்டர்
பாதம்மிக நினைவில்
உற்றதொர் காதலின் அங்குநின்
றேகிஒன் னார்புரங்கள்
செற்றவர் வாழுந் திருவதி
கைப்பதி சென்றடைவார்.
[135]
தேவர் பிரான்திரு மாணி
குழியுந் தினைநகரும்
மேவினர் சென்று விரும்பிய
சொன்மலர் கொண்டிறைஞ்சிப்
பூவலர் சோலை மணமடி
புல்லப் பொருள்மொழியின்
காவலர் செல்வத் திருக்கெடி
லத்தைக் கடந்தணைந்தார்.
[136]
வெஞ்சமண் குண்டர்கள் செய்வித்த
தீய மிறைகளெல்லாம்
எஞ்சவென் றேறிய இன்றமிழ்
ஈசர் எழுந்தருள
மஞ்சிவர் மாடத் திருவதி
கைப்பதி வாணர்எல்லாந்
தஞ்செயல் பொங்கத் தழங்கொலி
மங்கலஞ் சாற்றலுற்றார்.
[137]
மணிநெடுந் தோரணம் வண்குலைப்
பூகம் மடற்கதலி
இணையுற நாட்டி எழுநிலைக்
கோபுரந் தெற்றியெங்குந்
தணிவில் பெருகொளித் தாமங்கள்
நாற்றிச்செஞ் சாந்துநீவி
அணிநகர் முன்னை அணிமேல்
அணிசெய் தலங்கரித்தார்.
[138]
மன்னிய அன்பின் வளநகர்
மாந்தர் வயங்கிழையார்
இன்னிய நாதமும் ஏழிசை
ஓசையும் எங்கும்விம்மப்
பொன்னியல் சுண்ணமும் பூவும்
பொரிகளுந் தூவியெங்குந்
தொன்னக ரின்புறஞ் சூழ்ந்தெதிர்
கொண்டனர் தொண்டரையே.
[139]
தூயவெண் ணீறு துதைந்தபொன்
மேனியுந் தாழ்வடமும்
நாயகன் சேவடி தைவருஞ்
சிந்தையும் நைந்துருகிப்
பாய்வதுபோல் அன்புநீர் பொழிகண்ணும்
பதிகச் செஞ்சொல்
மேயசெவ் வாயும் உடையார்
புகுந்தனர் வீதியுள்ளே.
[140]
கண்டார்கள் கைதலை மேற்குவித்
திந்தக் கருணைகண்டால்
மிண்டாய செய்கை அமண்கையர்
தீங்கு விளைக்கச்செற்றம்
உண்டா யினவண்ணம் எவ்வண்ணம்
என்றுரைப் பார்கள்பின்னுந்
தொண்டாண்டு கொண்ட பிரானைத்
தொழுது துதித்தனரே.
[141]
இவ்வண்ணம் போல எனைப்பல
மாக்கள் இயம்பியேத்த
மெய்வண்ண நீற்றொளி மேவும்
குழாங்கள் விரவிச்செல்ல
அவ்வண்ணம் நண்ணிய அன்பரும்
வந்தெய்தி அம்பவளச்
செவ்வண்ணர் கோயில் திருவீரட்
டானத்தைச் சேர்ந்தனரே.
[142]
உம்பர்தங் கோனை உடைய
பிரானைஉள் புக்கிறைஞ்சி
நம்புறும் அன்பின் நயப்புறு
காதலி னால்திளைத்தே
எம்பெரு மான்தனை ஏழையேன்
நான்பண் டிகழ்ந்ததென்று
தம்பரி வால்திருத் தாண்டகச்
செந்தமிழ் சாற்றிவாழ்ந்தார்.
[143]
அரிஅயனுக் கரியானை
அடியவருக் கெளியானை
விரிபுனல்சூழ் திருவதிகை
வீரட்டா னத்தமுதைத்
தெரிவரிய பெருந்தன்மைத்
திருநாவுக் கரசுமனம்
பரிவுறுசெந் தமிழ்ப்பாட்டுப்
பலபாடிப் பணிசெயுநாள்.
[144]
புல்லறிவிற் சமணர்க்காப்
பொல்லாங்கு புரிந்தொழுகும்
பல்லவனுந் தன்னுடைய
பழவினைப்பா சம்பறிய
அல்லல்ஒழிந் தங்கெய்தி
ஆண்டஅர சினைப்பணிந்து
வல்அமணர் தமைநீத்து
மழவிடையோன் தாளடைந்தான்.
[145]
வீடறியாச் சமணர்மொழி
பொய்யென்று மெய்யுணர்ந்த
காடவனும் திருவதிகை
நகரின்கட் கண்ணுதற்குப்
பாடலிபுத் திரத்தில்அமண்
பள்ளியொடு பாழிகளுங்
கூடஇடித் துக்கொணர்ந்து
குணபரவீச் சரம்எடுத்தான்.
[146]
இந்நாளில் திருப்பணிகள்
செய்கின்ற இன்றமிழ்க்கு
மன்னான வாகீசத்
திருமுனியும் மதிச்சடைமேல்
பன்னாகம் அணிந்தவர்தம்
பதிபலவுஞ் சென்றிறைஞ்சிச்
சொன்னாமத் தமிழ்புனைந்து
தொண்டுசெய்வான் தொடர்ந்தெழுவார்.
[147]
திருவதிகைப் பதிமருங்கு
திருவெண்ணெய் நல்லூரும்
அருளுதிரு ஆமாத்தூர்
திருக்கோவ லூர்முதலா
மருவுதிருப் பதிபிறவும்
வணங்கிவளத் தமிழ்பாடிப்
பெருகுவிருப் புடன்விடையார்
மகிழ்பெண்ணா கடம்அணைந்தார்.
[148]
கார்வளரும் மாடங்கள்
கலந்தமறை ஒலிவளர்க்குஞ்
சீருடைஅந் தணர்வாழுஞ்
செழும்பதியின் அகத்தெய்தி
வார்சடையார் மன்னுதிருத்
தூங்கானை மாடத்தைப்
பார்பரவுந் திருமுனிவர்
பணிந்தேத்திப் பரவினார்.
[149]
புன்னெறியாம் அமண்சமயத்
தொடக்குண்டு போந்தவுடல்
தன்னுடனே உயிர்வாழத்
தரியேன்நான் தரிப்பதனுக்
கென்னுடைய நாயகநின்
இலச்சினையிட் டருளென்று
பன்னுசெழுந் தமிழ்மாலை
முன்னின்று பாடுவார்.
[150]
பொன்னார்ந்த திருவடிக்கென்
விண்ணப்பம் என்றெடுத்து
முன்னாகி எப்பொருட்கும்
முடிவாகி நின்றானைத்
தன்னாகத் துமைபாகங்
கொண்டானைச் சங்கரனை
நன்னாமத் திருவிருத்தம்
நலஞ்சிறக்கப் பாடுதலும்.
[151]
நீடுதிருத் தூங்கானை
மாடத்து நிலவுகின்ற
ஆடகமே ருச்சிலையான்
அருளாலோர் சிவபூதம்
மாடொருவர் அறியாமே
வாகீசர் திருத்தோளில்
சேடுயர்மூ விலைச்சூலம்
சினவிடையி னுடன்சாத்த.
[152]
ஆங்கவர்தந் திருத்தோளில்
ஆர்ந்ததிரு இலச்சினையைத்
தாங்கண்டு மனங்களித்துத்
தம்பெருமான் அருள்நினைந்து
தூங்கருவி கண்பொழியத்
தொழுதுவிழுந் தார்வத்தால்
ஓங்கியசிந் தையராகி
உய்ந்தொழிந்தேன் எனவெழுந்தார்.
[153]
தூங்கானை மாடத்துச்
சுடர்க்கொழுந்தின் அடிபரவிப்
பாங்காகத் திருத்தொண்டு
செய்துபயின் றமருநாள்
பூங்கானம் மணங்கமழும்
பொருவில்திரு அரத்துறையுந்
தேங்காவின் முகிலுறங்குந்
திருமுதுகுன் றமும்பணிந்து.
[154]
வண்டமிழ்மென் மலர்மாலை
புனைந்தருளி மருங்குள்ள
தண்டுறைநீர்ப் பதிகளிலுந்
தனிவிடையார் மேவியிடங்
கொண்டருளுந் தானங்கள்
கும்பிட்டுக் குணதிசைமேல்
புண்டரிகத் தடஞ்சூழ்ந்த
நிவாக்கரையே போதுவார்.
[155]
ஆனாத சீர்த்தில்லை
அம்பலத்தே ஆடுகின்ற
வானாறு புடைபரக்கும்
மலர்ச்சடையார் அடிவணங்கி
ஊனாலும் உயிராலும்
உள்ளபயன் கொளநினைந்து
தேனாரும் மலர்ச்சோலைத்
திருப்புலியூர் மருங்கணைந்தார்.
[156]
நாவுக் கரசரும் இருவர்க் கரியவர்
நடமா டியதிரு எல்லைப்பால்
மேவித் தலமுற மெய்யில் தொழுதபின்
மேன்மேல் எழுதரும் விழைவோடுங்
காவிற் களிமயில் மகிழ்வுற் றெதிரெதிர்
ஆடக் கடிகமழ் கமலஞ்சூழ்
வாவித் தடமலர் வதனம் பொலிவுறு
மருதத் தண்பணை வழிவந்தார்.
[157]
முருகிற் செறியிதழ் முளரிப் படுகரில்
முதுமே திகள்புது மலர்மேயும்
அருகிற் செறிவன மெனமிக் குயர்கழை
அளவிற் பெருகிட வளரிக்குப்
பெருகிப் புடைமுதிர் தரளஞ் சொரிவன
பெரியோர் அவர்திரு வடிவைக்கண்
டுருகிப் பரிவுறு புனல்கண் பொழிவன
எனமுன் புளவள வயலெங்கும்.
[158]
அறிவிற் பெரியவர் அயல்நெற் பணைவயல்
அவைபிற் படும் வகை அணைகின்றார்
பிறவிப் பகைநெறி விடுவீர் இருவினை
பெருகித் தொடர்பிணி உறுபாசம்
பறிவுற் றிடஅணை யுமின்என் றிருபுடை
பயில்சூழ் சினைமிசை குயில்கூவுஞ்
செறிவிற் பலதரு நிலையிற் பொலிவுறு
திருநந் தனவனம் எதிர்கண்டார்.
[159]
அவர்முன் பணிவொடு தொழுதங் கணைவுற
அணிகொம் பரின்மிசை அருகெங்கும்
தவமுன் புரிதலில் வருதொண் டெனுநிலை
தலைநின் றுயர்தமிழ் இறையோராம்
இவர்தந் திருவடி வதுகண் டதிசயம்
எனவந் தெதிர்அர கரவென்றே
சிவமுன் பயில்மொழி பகர்கின் றனவளர்
சிறைமென் கிளியொடு சிறுபூவை.
[160]
அஞ்சொல் திருமறை யவர்முன் பகர்தலும்
அவருந் தொழுதுமுன் அருள்கூரும்
நெஞ்சிற் பெருகிய மகிழ்வும் காதலும்
நிறைஅன் பொடும்உரை தடுமாறச்
செஞ்சொல் திருமறை மொழிஅந் தணர்பயில்
தில்லைத் திருநகர் எல்லைப்பால்
மஞ்சிற் பொலிநெடு மதில்சூழ் குடதிசை
மணிவா யிற்புறம் வந்துற்றார்.
[161]
அல்லல் பவம்அற அருளுந் தவமுதல்
அடியார்எதிர்கொள அவரோடும்
மல்லற் புனல்கமழ் மாடே வாயிலின்
வழிபுக் கெதிர்தொழு தணைவுற்றார்
கல்வித் துறைபல வருமா மறைமுதல்
கரைகண் டுடையவர் கழல்பேணுஞ்
செல்வக் குடிநிறை நல்வைப் பிடைவளர்
சிவமே நிலவிய திருவீதி.
[162]
நவமின் சுடர்மணி நெடுமா லையுநறு
மலர்மா லையுநிறை திருவீதிப்
புவனங் களின்முதல் இமையோர் தடமுடி
பொருதுந் தியமணி போகட்டிப்
பவனன் பணிசெய வருணன் புனல்கொடு
பணிமா றவுமவை பழுதாமென்
றெவருந் தொழுதெழும் அடியார் திருவல
கிடுவார் குளிர்புனல் விடுவார்கள்.
[163]
மேலம் பரதலம் நிரையுங் கொடிகளில்
விரிவெங் கதிர்நுழை வரிதாகுங்
கோலம் பெருகிய திருவீ தியைமுறை
குலவும் பெருமையர் பணிவுற்றே
ஞாலந் திகழ்திரு மறையின் பெருகொலி
நலமார் முனிவர்கள் துதியோடும்
ஓலம் பெருகிய நிலையேழ் கோபுரம்
உறமெய் கொடுதொழு துள்புக்கார்.
[164]
வளர்பொற் கனமணி திருமா ளிகையினை
வலம்வந் தலமரும் வரைநில்லா
அளவிற் பெருகிய ஆர்வத் திடையெழும்
அன்பின் கடல்நிறை உடலெங்கும்
புளகச் செறிநிரை விரவத் திருமலி
பொற்கோ புரமது புகுவார்முன்
களனிற் பொலிவிடம் உடையார் நடநவில்
கனகப் பொதுஎதிர் கண்ணுற்றார்.
[165]
நீடுந் திருவுடன் நிகழும் பெருகொளி
நிறைஅம் பலம்நினை வுறநேரே
கூடும் படிவரும் அன்பால் இன்புறு
குணமுன் பெறவரு நிலைகூடத்
தேடும் பிரமனும் மாலுந் தேவரும்
முதலாம் யோனிகள் தெளிவொன்றா
ஆடுங் கழல்புரி அமுதத் திருநடம்
ஆரா வகைதொழு தார்கின்றார்.
[166]
கையுந் தலைமிசை புனைஅஞ் சலியன
கண்ணும் பொழிமழை ஒழியாதே
பெய்யுந் தகையன கரணங் களுமுடன்
உருகும் பரிவின பேறெய்தும்
மெய்யுந் தரைமிசை விழுமுன் பெழுதரும்
மின்தாழ் சடையொடு நின்றாடும்
ஐயன் திருநடம் எதிர்கும் பிடுமவர்
ஆர்வம் பெருகுதல் அளவின்றால்.
[167]
இத்தன் மையர்பல முறையுந் தொழுதெழ
என்றெய் தினையென மன்றாடும்
அத்தன் திருவருள் பொழியுங் கருணையின்
அருள்பெற் றிடவரும் ஆனந்தம்
மெய்த்தன் மையினில் விருத்தத் திருமொழி
பாடிப் பின்னையும் மேன்மேலும்
சித்தம் பெருகிய பரிவால் இன்புறு
திருநே ரிசைமொழி பகர்கின்றார்.
[168]
பத்தனாய்ப் பாட மாட்டேன்
என்றுமுன் னெடுத்துப் பண்ணால்
அத்தாஉன் ஆடல் காண்பான்
அடியனேன் வந்த வாறென்
றித்திறம் போற்றி நின்றே
இன்தமிழ் மாலை பாடிக்
கைத்திருத் தொண்டு செய்யுங்
காதலிற் பணிந்து போந்தார்.
[169]
நீடிய மணியின் சோதி
நிறைதிரு முன்றின் மாடும்
ஆடுயர் கொடிசூழ் பொற்றேர்
அணிதிரு வீதி யுள்ளுங்
கூடிய பணிகள் செய்து
கும்பிடுந் தொழில ராகிப்
பாடிய புனித வாக்கின்
பணிகளும் பயிலச் செய்வார்.
[170]
அருட்பெரு மகிழ்ச்சி பொங்க
அன்னம்பா லிக்கும் என்னும்
திருக்குறுந் தொகைகள் பாடித்
திருவுழ வாரங் கொண்டு
பெருத்தெழு காத லோடும்
பெருந்திருத் தொண்டு செய்து
விருப்புறு மேனி கண்ணீர்
வெண்ணீற்று வண்டல் ஆட.
[171]
மேவிய பணிகள் செய்து
விளங்குநாள் வேட்க ளத்துச்
சேவுயர் கொடியார் தம்மைச்
சென்றுமுன் வணங்கிப் பாடிக்
காவியங் கண்டர் மன்னுந்
திருக்கழிப் பாலை தன்னில்
நாவினுக் கரசர் சென்று
நண்ணினார் மண்ணோர் வாழ.

[172]
சினவிடைஏ றுகைத்தேறும் மணவாள
நம்பிகழல் சென்று தாழ்ந்து
வனபவள வாய்திறந்து வானவர்க்குந்
தானவனே என்கின் றாள்என்
றனையதிருப் பதிகமுடன் அன்புறுவண்
டமிழ்பாடி அங்கு வைகி
நினைவரியார் தமைப்போற்றி நீடுதிருப்
புலியூரை நினைந்து மீள்வார்.
[173]
மனைப்படப்பிற் கடற்கொழுந்து வளைசொரியுங்
கழிப்பாலை மருங்கு நீங்கி
நனைச்சினைமென் குளிர்ஞாழற் பொழிலூடு
வழிக்கொண்டு நண்ணும் போதில்
நினைப்பவர்தம் மனங்கோயில் கொண்டருளும்
அம்பலத்து நிருத்த னாரைத்
தினைத்தனையாம் பொழுதுமறந் துய்வனோ
எனப்பாடித் தில்லை சார்ந்தார்.
[174]
அரியானை என்றெடுத்தே அடியவருக்
கெளியானை அவர்தஞ் சிந்தை
பிரியாத பெரியதிருத் தாண்டகச்செந்
தமிழ்பாடிப் பிறங்கு சோதி
விரியாநின் றெவ்வுலகும் விளங்கியபொன்
அம்பலத்து மேவி ஆடல்
புரியாநின் றவர்தம்மைப் பணிந்துதமி
ழாற்பின்னும் போற்றல் செய்வார்.
[175]
செஞ்சடைக் கற்றைமுற்றத் திளநிலா
எறிக்குமெனுஞ் சிறந்த வாய்மை
அஞ்சொல்வளத் தமிழ்மாலை அதிசயமாம்
படிபாடி அன்பு சூழ்ந்த
நெஞ்சுருகப் பொழிபுனல்வார் கண்ணிணையும்
பரவியசொல் நிறைந்த வாயும்
தஞ்செயலியன் ஒழியாத திருப்பணியும்
மாறாது சாரும் நாளில்.
[176]
கடையுகத்தில் ஆழியின்மேல் மிதந்ததிருக்
கழுமலத்தின் இருந்த செங்கண்
விடையுகைத்தார் திருவருளால் வெற்பரையன்
பாவைதிரு முலைப்பா லோடும்
அடையநிறை சிவம்பெருக வளர்ஞானங்
குழைத்தூட்ட அமுது செய்த
உடையமறைப் பிள்ளையார் திருவார்த்தை
அடியார்கள் உரைப்பக் கேட்டார்.
[177]
ஆழிவிடம் உண்டவரை அம்மைதிரு
முலைஅமுதம் உண்ட போதே
ஏழிசைவண் டமிழ்மாலை இவன்எம்மான்
எனக்காட்டி இயம்ப வல்ல
காழிவரும் பெருந்தகைசீர் கேட்டலுமே
அதிசயமாங் காதல் கூர
வாழியவர் மலர்க்கழல்கள் வணங்குதற்கு
மனத்தெழுந்த விருப்பு வாய்ப்ப.
[178]
அப்பொழுதே அம்பலத்துள் ஆடுகின்ற
கழல்வணங்கி அருள்முன் பெற்றுப்
பொய்ப்பிறவிப் பிணியோட்டுந் திருவீதி
புரண்டுவலங் கொண்டு போந்தே
எப்புவனங் களும்நிறைந்த திருப்பதியின்
எல்லையினை இறைஞ்சி ஏத்திச்
செப்பரிய பெருமையினார் திருநாரை
யூர்பணிந்து பாடிச் செல்வார்.
[179]
தொண்டர்குழாம் புடைசூழத் தொழுதகரத்
தொடுநீறு துதைந்த கோலங்
கண்டவர்தம் மனங்கசிந்து கரைந்துருகுங்
கருணைபுறம் பொழிந்து காட்டத்
தெண்டிரைவாய்க் கல்மிதப்பில் உகைத்தேறுந்
திருநாவுக் கரசர் தாமும்
வண்டமிழால் எழுதுமறை மொழிந்தபிரான்
திருப்புகலி மருங்கு சார்ந்தார்.
[180]
நீண்டவரை வில்லியார் வெஞ்சூலை
மடுத்தருளி நேரே முன்னாள்
ஆண்டஅர செழுந்தருளக் கேட்டருளி
ஆளுடைய பிள்ளை யாருங்
காண்தகைய பெருவிருப்புக் கைம்மிக்க
திருவுள்ளக் கருத்தி னோடு
மூண்டஅருள் மனத்தன்பர் புடைசூழ
எழுந்தருளி முன்னே வந்தார்.
[181]
தொழுதணைவுற் றாண்டஅர சன்புருகத்
தொண்டர் குழாத் திடையே சென்று
பழுதில்பெருங் காதலுடன் அடிபணியப்
பணிந்தவர்தங் கரங்கள் பற்றி
எழுதரிய மலர்க்கையால் எடுத்திறைஞ்சி
விடையின்மேல் வருவார் தம்மை
அழுதழைத்துக் கொண்டவர்தாம் அப்பரே
எனஅவரும் அடியேன் என்றார்.
[182]
அம்பிகைசெம் பொற்கிண்ணத் தமுதஞா
னங்கொடுப்ப அழுகை தீர்ந்த
செம்பவள வாய்ப்பிள்ளை திருநாவுக்
கரசரெனச் சிறந்த சீர்த்தி
எம்பெருமக் களும்இயைந்த கூட்டத்தில்
அரனடியார் இன்பம் எய்தி
உம்பர்களும் போற்றிசைப்பச் சிவம்பெருகும்
ஒலிநிறைத்தார் உலகம் எல்லாம்.
[183]
பிள்ளையார் கழல்வணங்கப் பெற்றேன்என்
றரசுவப்பப் பெருகு ஞான
வள்ளலார் வாகீசர் தமைவணங்கப்
பெற்றதற்கு மகிழ்ச்சி பொங்க
உள்ளநிறை காதலினால் ஒருவர்ஒரு
வரிற்கலந்த உண்மை யோடும்
வெள்ளநீர்த் திருத்தோணி வீற்றிருந்தார்
கழல் வணங்கும் விருப்பின் மிக்கார்.
[184]
அருட்பெருகு தனிக்கடலும் உலகுக் கெல்லாம்
அன்புசெறி கடலுமாம் எனவும் ஓங்கும்
பொருட்சமய முதற்சைவ நெறிதான் பெற்ற
புண்ணியக்கண் ணிரண்டெனவும் புவனம் உய்ய
இருட்கடுவுண் டவர்அருளும் உலகம் எல்லாம்
ஈன்றாள்தன் திருவருளும் எனவும் கூடித்
தெருட்கலைஞா னக்கன்றும் அரசும் சென்று
செஞ்சடைவா னவர்கோயில் சேர்ந்தார் அன்றே.
[185]
பண்பயில்வண் டறைசோலை சூழுங் காழிப்
பரமர்திருக் கோபுரத்தைப் பணிந்துள் புக்கு
விண்பணிய ஓங்குபெரு விமானந் தன்னை
வலங்கொண்டு தொழுதுவிழுந் தெழுந்த எல்லைச்
சண்பைவரு பிள்ளையார் அப்பர் உங்கள்
தம்பிரா னாரைநீர் பாடீர் என்னக்
கண்பயிலும் புனல்பொழிய அரசும் வாய்மைக்
கலைபயிலும் மொழிபொழியக் கசிந்து பாடி.
[186]
பெரியபெரு மாட்டியுடன் தோணி மீது
பேணிவீற் றிருந்தருளும் பிரான்முன் நின்று
பரிவுறுசெந் தமிழ்மாலை பத்தி யோடும்
பார்கொண்டு மூடியெனும் பதிகம் போற்றி
அரியவகை புறம்போந்து பிள்ளை யார்தம்
திருமடத்தில் எழுந்தருளி அமுது செய்து
மருவியநண் புறுகேண்மை அற்றை நாள்போல்
வளர்ந்தோங்க உடன்பலநாள் வைகும் நாளில்.
[187]
அத்தன்மை யினில்அரசும் பிள்ளை யாரும்
அளவளா வியமகிழ்ச்சி அளவி லாத
சித்தநெகிழ்ச் சியினோடு செல்லும் நாளில்
திருநாவுக் கரசர்திரு வுள்ளந் தன்னில்
மைத்தழையும் மணிமிடற்றார் பொன்னி நாட்டு
மன்னியதா னங்களெல்லாம் வணங்கிப் போற்ற
மெய்த்தெழுந்த பெருங்காதல் பிள்ளை யார்க்கு
விளம்புதலும் அவரும்அது மேவி நேர்வார்.
[188]
ஆண்டஅர செழுந்தருளக் கோலக் காவை
அவரோடும் சென்றிறைஞ்சி அன்பு கொண்டு
மீண்டருளி னார்அவரும் விடைகொண் டிப்பால்
வேதநா யகர்விரும்பும் பதிக ளான
நீண்டகருப் பறியலூர் புன்கூர் நீடூர்
நீடுதிருக் குறுக்கைதிரு நின்றி யூரும்
காண்தகைய நனிபள்ளி முதலா நண்ணிக்
கண்ணுதலார் கழல்தொழுது வணங்கிச் செல்வார்.
[189]
மேவுபுனற் பொன்னிஇரு கரையும் சார்ந்து
விடையுயர்த்தார் திருச்செம்பொன் பள்ளி பாடிக்
காவுயரு மயிலாடு துறைநீள் பொன்னிக்
கரைத்துருத்தி வேள்விக்குடி எதிர்கொள் பாடி
பாவுறு செந் தமிழ்மாலை பாடிப் போற்றிப்
பரமர்திருப் பதிபலவும் பணிந்து போந்தே
ஆவுறும்அஞ் சாடுவார் கோடி காவில்
அணைந்துபணிந் தாவடுதண் டுறையைச் சார்ந்தார்.
[190]
ஆவடுதண் டுறையாரை அடைந்துய்ந் தேன்என்
றளவில் திருத் தாண்டகமுன் அருளிச் செய்து
மேவுதிருக் குறுந்தொகைநே ரிசையும் சந்த
விருத்தங்க ளானவையும் வேறு வேறு
பாவலர்செந் தமிழ்த்தொடையால் பள்ளித் தாமம்
பலசாத்தி மிக்கெழுந்த பரிவி னோடும்
பூவலயத் தவர்பரவப் பலநாள் தங்கிப்
புரிவுறுகைத் திருத்தொண்டு போற்றிச் செய்வார்.
[191]
எறிபுனல்பொன் மணிசிதறுந் திரைநீர்ப் பொன்னி
இடைமருதைச் சென்றெய்தி அன்பி னோடு
மறிவிரவு கரத்தாரை வணங்கி வைகி
வண்டமிழ்ப்பா மாலைபல மகிழச் சாத்திப்
பொறியரவம் புனைந்தாரைத் திருநாகேச் சுரத்துப்
போற்றியருந் தமிழ்மாலை புனைந்து போந்து
செறிவிரைநன் மலர்ச்சோலைப் பழையா றெய்தித்
திருச்சத்தி முற்றத்தைச் சென்று சேர்ந்தார்.
[192]
சென்று சேர்ந்து திருச்சத்தி
முற்றத் திருந்த சிவக்கொழுந்தைக்
குன்ற மகள்தன் மனக்காதல்
குலவும் பூசை கொண்டருளும்
என்றும் இனிய பெருமானை
இறைஞ்சி இயல்பில் திருப்பணிகள்
முன்றில் அணைந்து செய்துதமிழ்
மொழிமா லைகளும் சாத்துவார்.
[193]
கோவாய் முடுகி என்றெடுத்துக்
கூற்றம் வந்து குமைப்பதன்முன்
பூவார் அடிகள் என்தலைமேற்
பொறித்து வைப்பாய் எனப்புகன்று
நாவார் பதிகம் பாடுதலும்
நாதன் தானும் நல்லூரில்
வாவா என்றே அருள்செய்ய
வணங்கி மகிழ்ந்து வாகீசர்.
[194]
நன்மைபெரு கருள்நெறியே
வந்தணைந்து நல்லூரின்
மன்னுதிருத் தொண்டனார்
வணங்கிமகிழ்ந் தெழும்பொழுதில்
உன்னுடைய நினைப்பதனை
முடிக்கின்றோம் என்றவர்தம்
சென்னிமிசைப் பாதமலர்
சூட்டினான் சிவபெருமான்.
[195]
நனைந்தனைய திருவடிஎன்
தலைமேல்வைத் தார்என்று
புனைந்ததிருத் தாண்டகத்தால்
போற்றிசைத்துப் புனிதர்அருள்
நினைந்துருகி விழுந்தெழுந்து
நிறைந்துமலர்ந் தொழியாத
தனம்பெரிதும் பெற்றுவந்த
வறியோன்போல் மனம்தழைத்தார்.
[196]
நாவுக்கு மன்னர்திரு
நல்லூரில் நம்பர்பால்
மேவுற்ற திருப்பணிகள்
மேவுறநா ளும்செய்து
பாவுற்ற தமிழ்மாலை
பலபாடிப் பணிந்தேத்தித்
தேவுற்ற திருத்தொண்டு
செய்தொழுகிச் செல்லுநாள்.
[197]
கருகாவூர் முதலாகக்
கண்ணுதலோன் அமர்ந்தருளும்
திருவாவூர் திருப்பாலைத்
துறைபிறவும் சென்றிறைஞ்சிப்
பெருகார்வத் திருத்தொண்டு
செய்துபெருந் திருநல்லூர்
ஒருகாலும் பிரியாதே
உள்ளுருகிப் பணிகின்றார்.
[198]
ஆளுடைய நாயகன்தன்
அருள்பெற்றங் ககன்றுபோய்
வாளைபாய் புனற்பழனத்
திருப்பழன மருங்கணைந்து
காளவிடம் உண்டிருண்ட
கண்டர்பணிக் கலன்பூண்டு
நீள்இரவில் ஆடுவார்
கழல்வணங்க நேர்பெற்றார்.
[199]
அப்பதியைச் சூழ்ந்ததிருப்
பதியில்அர னார்மகிழும்
ஒப்பரிய தானங்கள்
உள்ளுருகிப் பணிந்தணைவார்
மெய்ப்பொருள்தேர்
நாவினுக்கு வேந்தர்தாம் மேவினார்
செப்பருஞ்சீர் அப்பூதி
அடிகளூர் திங்களூர்.
[200]
அந்தணரின் மேம்பட்ட
அப்பூதி அடிகளார்
தந்தனய ருடன்சாலை
கூவல்குளந் தருதண்ணீர்ப்
பந்தர்பல ஆண்டஅர
செனும்பெயரால் பண்ணினமை
வந்தணைந்த வாகீசர்
கேட்டவர்தம் மனைநண்ண.
[201]
மற்றவரும் மனமகிழ்ந்து
மனைவியார் மைந்தர்பெருஞ்
சுற்றமுடன் களிகூரத்
தொழுதெழுந்து சூழ்ந்துமொழிக்
கொற்றவரை அமுதுசெயக்
குறைகொள்வார் இறைகொள்ளப்
பெற்றபெருந் தவத்தொண்டர்
திருவுள்ளம் பெறப்பெற்றார்.
[202]
காண்டகைமை இன்றியும்முன்
கலந்தபெருங் கேண்மையினார்
பூண்டபெருங் காதலுடன்
போனகமுங் கறியமுதும்
வேண்டுவன வெவ்வேறு
விதங்கள்பெற விருப்பினால்
ஆண்டஅர சமுதுசெயத்
திருவமுதாம் படிஅமைத்து.
[203]
திருநாவுக் கரசமுது
செய்தருள மற்றவர்தம்
பெருநாமஞ் சாத்தியஅப்
பிள்ளைதனை அழைத்தன்பு
தருஞானத் திருமறையோர்
தண்டலையின் வண்கதலிக்
குருநாளக் குருத்தரிந்து
கொண்டுவரத் தனிவிட்டார்.
[204]
ஆங்கவனும் விரைந்தெய்தி
அம்மருங்கு தாழாதே
பூங்கதலிக் குருத்தரியப்
புகும்அளவில் ஒருநாகம்
தீங்கிழைக்க அதுபேணான்
திருவமுது செய்தருள
ஓங்குகத லிக்குருத்துக்
கொண்டொல்லை வந்தணைந்தான்.
[205]
தீயவிடந் தலைக்கொள்ளத்
தெருமந்து செழுங்குருத்தைத்
தாயர்கரத் தினில்நீட்டித்
தளர்ந்துதனைத் தழல்நாகம்
மேயபடி உரைசெய்யான்
விழக்கண்டு கெட்டொழிந்தேம்
தூயவரிங் கமுதுசெயத்
தொடங்கார்என் றதுஒளித்தார்.
[206]
தம்புதல்வன் சவம்மறைத்துத்
தடுமாற்றம் இலராகி
எம்பெருமான் அமுதுசெய
வேண்டுமென வந்திறைஞ்ச
உம்பர்பிரான் திருத்தொண்டர்
உள்ளத்தில் தடுமாற்றம்
நம்பர்திரு வருளாலே
அறிந்தருளி நவைதீர்ப்பார்.
[207]
அன்றவர்கள் மறைத்ததனுக்
களவிறந்த கருணையராய்க்
கொன்றைநறுஞ் சடையார்தங்
கோயிலின்முன் கொணர்வித்தே
ஒன்றுகொலாம் எனப்பதிகம்
எடுத்துடையான் சீர்பாடப்
பின்றைவிடம் போய்நீங்கிப்
பிள்ளையுணர்ந் தெழுந்திருந்தான்.
[208]
அருந்தனயன் உயிர்பெற்ற
அதுகண்டும் அமுதுசெயா
திருந்ததற்குத் தளர்வெய்தி
இடருழந்தார் துயர்நீங்க
வருந்துமவர் மனைப்புகுந்து
வாகீசத் திருமுனிவர்
விருந்தமுது செய்தருளி
விருப்பினுடன் மேவுநாள்.
[209]
திங்களூர் தனில்நின்றும்
திருமறையோர் பின்செல்லப்
பைங்கண்விடைத் தனிப்பாகர்
திருப்பழனப் பதிபுகுந்து
தங்குபெருங் காதலொடுந்
தம்பெருமான் கழல்சார்ந்து
பொங்கியஅன் பொடுவணங்கி
முன்னின்று போற்றிசைப்பார்.
[210]
புடைமாலை மதிக்கண்ணிப்
புரிசடையார் பொற்கழற்கீழ்
அடைமாலைச் சீலமுடை
அப்பூதி அடிகள்தமை
நடைமாணச் சிறப்பித்து
நன்மைபுரி தீந்தமிழின்
தொடைமாலைத் திருப்பதிகச்
சொல்மாலை பாடினார்.
[211]
எழும்பணியும் இளம்பிறையும்
அணிந்தவரை எம்மருங்குந்
தொழும்பணிமேற் கொண்டருளித்
திருச்சோற்றுத் துறைமுதலாத்
தழும்புறுகேண் மையில்நண்ணித்
தானங்கள் பலபாடிச்
செழும்பழனத் திறைகோயில்
திருத்தொண்டு செய்திருந்தார்.
[212]
சாலநாள் அங்கமர்ந்து
தந்தலைமேல் தாள்வைத்த
ஆலமார் மணிமிடற்றார்
அணிமலர்ச்சே வடிநினைந்து
சேலுலாம் புனற்பொன்னித்
தென்கரையே றிச்சென்று
கோலநீள் மணிமாடத்
திருநல்லூர் குறுகினார்.
[213]
அங்கணைந்து தம்பெருமான்
அடிவணங்கி ஆராது
பொங்கியஅன் பொடுதிளைத்துப்
போற்றிசைத்துப் பணிசெயுநாள்
தங்குபெருங் காதலினால்
தாமரைமேல் விரிஞ்சனொடு
செங்கண்மால் அறிவரியார்
திருவாரூர் தொழநினைந்தார்.
[214]
நல்லூரில் நம்பரருள்
பெற்றுப்போய்ப் பழையாறை
பல்லூர்வெண் தலைக்கரத்தார்
பயிலுமிடம் பலபணிந்து
சொல்லூர்வண் டமிழ்பாடி
வலஞ்சுழியைத் தொழுதேத்தி
அல்லூர்வெண் பிறையணிந்தார்
திருக்குடமூக் கணைந்திறைஞ்சி.
[215]
நாலூர்தென் திருச்சேறை
குடவாயில் நறையூர்சேர்
பாலூரும் இன்மொழியாள்
பாகனார் கழல்பரவி
மேலூர்தி விடைக்கொடியார்
மேவுமிடம் பலபாடிச்
சேலூர்தண் பணைசூழ்ந்த
தென்திருவாஞ் சியம்அணைந்தார்.
[216]
பெருவாச மலர்ச்சோலைப்
பெருவேளூர் பணிந்தேத்தி
முருகாரும் மலர்க்கொன்றை
முதல்வனார் பதிபிறவும்
திருவாரும் விளமருடன்
சென்றிறைஞ்சி வாகீசர்
மருவாரூர் எரித்தவர்தந்
திருவாரூர் வந்தடைந்தார்.
[217]
ஆண்டஅர செழுந்தருள
ஆரூரில் அன்பர்கள்தாம்
நீண்டசடை முடியார்பால்
நிறைந்தஅருள் பெற்றுடையார்
காண்டகுமா ளிகைமாடங்
கவின்சிறந்தோங் கிடஎங்குஞ்
சேண்திகழ்வீ திகள்பொலியத்
திருமலிமங் கலஞ்செய்தார்.
[218]
வல்அமண் குண்டர்தம் மாயை
கடந்து மறிகடலில்
கல்லே மிதப்பாகப் போந்தவர்
வந்தார் எனுங்களிப்பால்
எல்லையில் தொண்டர் எயிற்புறஞ்
சென்றெதிர் கொண்டபோது
சொல்லின் அரசர் வணங்கித்
தொழுதுரை செய்தணைவார்.
[219]
பற்றொன் றிலாவரும் பாதகர்
ஆகும் அமணர்தம்பால்
உற்ற பிணியொழிந் துய்யப்போந்
தேன்பெற லாவதொன்றே
புற்றிடங் கொண்டான்தன் தொண்டர்க்குத்
தொண்டராம் புண்ணியமென்
றற்ற உணர்வொடும் ஆரூர்த்
திருவீதி உள்ளணைந்தார்.
[220]
சூழுந் திருத்தொண்டர் தம்முடன்
தோரண வாயில்நண்ணி
வாழி திருநெடுந் தேவா
சிரியன்முன் வந்திறைஞ்சி
ஆழி வரைத்திரு மாளிகை
வாயில் அவைபுகுந்து
நீள்சுடர் மாமணிப் புற்றுகந்
தாரைநேர் கண்டுகொண்டார்.
[221]
கண்டு தொழுது விழுந்து
கரசர ணாதிஅங்கங்
கொண்ட புளகங்க ளாக
எழுந்தன்பு கூரக்கண்கள்
தண்டுளி மாரி பொழியத்
திருமூலட் டானர்தம்மைப்
புண்டரி கக்கழல் போற்றித்
திருத்தாண் டகம்புனைந்து.
[222]
காண்ட லேகருத் தாய்நினைந்
தென்னுங் கலைப்பதிகம்
தூண்டா விளக்கன்ன சோதிமுன்
நின்று துதித்துருகி
ஈண்டு மணிக்கோயில் சூழ
வலஞ்செய் திறைஞ்சியன்பு
பூண்ட மனத்தொடு நீள்திரு
வாயிற் புறத்தணைந்தார்.
[223]
செய்யமா மணியொளிசூழ் திருமுன்றின்
முன்தேவா சிரியன் சார்ந்து
கொய்யுலாம் மலர்ச்சோலைக் குயில்கூவ
மயிலாலும் ஆரூ ராரைக்
கையினால் தொழாதொழிந்து கனியிருக்கக்
காய்கவர்ந்த கள்வ னேன்என்
றெய்தரிய கையறவாந் திருப்பதிகம்
அருள்செய்தங் கிருந்தார் அன்றே.
[224]
மார்பாரப் பொழிகண்ணீர் மழைவாருந்
திருவடிவும் மதுர வாக்கில்
சேர்வாகுந் திருவாயில் தீந்தமிழின்
மாலைகளுஞ் செம்பொற் றாளே
சார்வான திருமனமும் உழவாரத்
தனிப்படையும் தாமும் ஆகிப்
பார்வாழத் திருவீதிப் பணிசெய்து
பணிந்தேத்திப் பரவிச் செல்வார்.
[225]
நீடுபுகழ்த் திருவாரூர் நிலவுமணிப்
புற்றிடங்கொள் நிருத்தர் தம்மைக்
கூடியஅன் பொடுகாலங் களில்அணைந்து
கும்பிட்டுக் கோதில் வாய்மைப்
பாடிளம்பூ தத்தினான் எனும்பதிகம்
முதலான பலவும் பாடி
நாடியஆர் வம்பெருக நைந்துமனங்
கரைந்துருகி நயந்து செல்வார்.
[226]
நான்மறைநூற் பெருவாய்மை நமிநந்தி
அடிகள்திருத் தொண்டின் நன்மைப்
பான்மைநிலை யால்அவரைப் பரமர்திரு
விருத்தத்துள் வைத்துப் பாடித்
தேன்மருவுங் கொன்றையார் திருவாரூர்
அரனெறியில் திகழுந் தன்மை
ஆனதிற மும்போற்றி அணிவீதிப்
பணிசெய்தங் கமரும் நாளில்.
[227]
நீராருஞ் சடைமுடியார் நிலவுதிரு
வலிவலமும் நினைந்து சென்று
வாராரு முலைமங்கை உமைபங்கர்
கழல்பணிந்து மகிழ்ந்து பாடிக்
காராருங் கறைக்கண்டர் கீழ்வேளூர்
கன்றாப்பூர் கலந்து பாடி
ஆராத காதலினால் திருவாரூர்
தனில்மீண்டும் அணைந்தார் அன்றே.
[228]
மேவுதிரு வாதிரைநாள் வீதிவிடங்
கப்பெருமாள் பவனி தன்னில்
தேவருடன் முனிவர்கள்முன் சேவிக்கும்
அடியார்க ளுடன்சே வித்து
மூவுலகுங் களிகூர வரும்பெருமை
முறைமையெலாங் கண்டு போற்றி
நாவினுக்குத் தனியரசர் நயக்குநாள்
நம்பர்திரு அருளி னாலே.
[229]
திருப்புகலூர் அமர்ந்தருளுஞ் சிவபெருமான்
சேவடிகள் கும்பிட் டேத்தும்
விருப்புடைய உள்ளத்து மேவியெழுங்
காதல்புரி வேட்கை கூர
ஒருப்படுவார் திருவாரூர் ஒருவாறு
தொழுதகன்றங் குள்ளம் வைத்துப்
பொருப்பரையன் மடப்பாவை இடப்பாகர்
பதிபிறவும் பணிந்து போந்தார்.
[230]
அந்நாளில் ஆளுடைய பிள்ளையார்
திருப்புகலி அதன்கண் நின்றும்
பன்னாகப் பூணணிவார் பயின்றதிருப்
பதிபலவும் பணிந்து செல்வார்
புன்னாக மணங்கமழும் பூம்புகலூர்
வந்திறைஞ்சிப் பொருவில் சீர்த்தி
மின்னாரும் புரிமுந்நூல் முருகனார்
திருமடத்தில் மேவுங் காலை.
[231]
ஆண்டஅர செழுந்தருளி அணியாரூர்
மணிப்புற்றில் அமர்ந்து வாழும்
நீண்டசுடர் மாமணியைக் கும்பிட்டு
நீடுதிருப் புகலூர் நோக்கி
மீண்டருளி னாரென்று கேட்டருளி
எதிர்கொள்ளும் விருப்பி னோடும்
ஈண்டுபெருந் தொண்டர்குழாம் புடைசூழ
வெழுந்தருளி எதிரே சென்றார்.
[232]
கரண்டமலி தடம்பொய்கைக் காழியர்கோன்
எதிரணையுங் காதல் கேட்டு
வரன்றுமணிப் புனற்புகலூர் நோக்கிவரும்
வாகீசர் மகிழ்ந்து வந்தார்
திரண்டுவருந் திருநீற்றுத் தொண்டர்குழாம்
இருதிறமுஞ் சேர்ந்த போதில்
இரண்டுநில வின்கடல்கள் ஒன்றாகி
அணைந்தனபோல் இசைந்த அன்றே.
[233]
திருநாவுக் கரசரெதிர் சென்றிறைஞ்சத்
சிரபுரத்துத் தெய்வ வாய்மைப்
பெருஞான சம்பந்தப் பிள்ளையார்
எதிர்வணங்கி அப்ப ரேநீர்
வருநாளில் திருவாரூர் நிகழ்பெருமை
வகுத்துரைப்பீர் என்று கூற
அருநாமத் தஞ்செழுத்தும் பயில்வாய்மை
அவரு மெதிர் அருளிச் செய்வார்.
[234]
சித்தம் நிலாவுந் தென்திரு
வாரூர் நகராளும்
மைத்தழை கண்டர் ஆதிரை
நாளின் மகிழ்செல்வம்
இத்தகை மைத்தென் றென்மொழி
கேனென் றுரைசெய்தார்
முத்து விதான மணிப்பொற்
கவரி மொழிமாலை.
[235]
அம்மொழி மாலைச் செந்தமிழ்
கேளா அணிசண்பை
மைம்மலி கண்டத் தண்டர்
பிரானார் மகனாரும்
கொய்ம்மலர் வாவித் தென்திரு
வாரூர் கும்பிட்டே
உம்முடன் வந்திங் குடன்அமர்
வேன்என் றுரைசெய்தார்.
[236]
மாமதில் ஆரூர் மன்னரை
அங்கு வணங்கச்செந்
தாமரை யோடைச் சண்பையர்
நாதன் தான்ஏக
நாமரு சொல்லின் நாதரும்
ஆர்வத் தொடுபுக்கார்
பூமலர் வாசத் தண்பணை
சூழும் புகலூரில்.
[237]
அத்திரு மூதூர் மேவிய
நாவுக் கரசுந்தம்
சித்தம் நிறைந்தே அன்பு
தெவிட்டுந் தெளிவெள்ளம்
மொய்த்திழி தாரைக் கண்பொழி
நீர்மெய்ம் முழுதாரப்
பைத்தலை நாகப் பூண்அணி
வாரைப் பணிவுற்றார்.
[238]
தேவர் பிரானைத் தென்புக
லூர்மன் னியதேனைப்
பாவியல் மாலைச் செந்தமிழ்
பாடிப் பரிவோடும்
மேவிய காலந் தோறும்
விருப்பிற் கும்பிட்டே
ஓவுதல் ஓவு திருப்பணி
செய்தங் குறைகின்றார்.

[239]
சீர்தரு செங்காட் டங்குடி
நீடுந் திருநள்ளா
றார்தரு சோலை சூழ்தரு
சாந்தை அயவந்தி
வார்திகழ் மென்முலை யாளொரு
பாகன் திருமருகல்
ஏர்தரும் அன்பால் சென்று
வணங்கி இன்புற்றார்.

[240]
அப்படிச் சின்னாள் சென்றபின்
ஆரூர் நகராளும்
துப்புறழ் வேணிக் கண்ணுத
லாரைத் தொழுதிப்பால்
மெய்ப்பொருள் ஞானம் பெற்றவர்
வேணு புரத்தெங்கள்
பொற்புரி முந்நூல் மார்பரும்
வந்தார் புகலூரில்.
[241]
பிள்ளையார் எழுந்தருளப்
பெருவிருப்பால் வாகீசர்
உள்ளம்மகிழ்ந் தெதிர்கொண்டங்
குடனுறையு நாளின்கண்
வள்ளலார் சிறுத்தொண்டர்
மற்றவர்பால் எழுந்தருள
எள்ளருஞ்சீர் நீலநக்கர்
தாமும்எழுந் தருளினார்.
[242]
ஆங்கணையும் அவர்களுடன்
அப்பதியில் அந்தணராம்
ஓங்குபுகழ் முருகனார்
திருமடத்தில் உடனாகப்
பாங்கில்வரும் சீரடியார்
பலருமுடன் பயில்கேண்மை
நீங்கரிய திருத்தொண்டின்
நிலையுணர்ந்து நிகழ்கின்றார்.
[243]
திருப்பதிகச் செழுந்தமிழின்
திறம்போற்றி மகிழ்வுற்றுப்
பொருப்பரையன் மடப்பாவை
இடப்பாகர் பொற்றாளில்
விருப்புடைய திருத்தொண்டர்
பெருமையினை விரித்துரைத்தங்
கொருப்படுசிந் தையினார்கள்
உடனுறைவின் பயன்பெற்றார்.

[244]
அந்நாளில் தமக்கேற்ற
திருத்தொண்டின் நெறியாற்ற
மின்னார்செஞ் சடைஅண்ணல்
மேவுபதி எனைப்பலவும்
முன்னாகச் சென்றேத்தி
முதல்வன்தாள் தொழுவதற்குப்
பொன்னாரும் மணிமாடப்
பூம்புகலூர் தொழுதகன்றார்.
[245]
திருநீல நக்கடிகள்
சிறுத்தொண்டர் முருகனார்
பெருநீர்மை அடியார்கள்
பிறரும்விடை கொண்டேக
ஒருநீர்மை மனத்துடைய
பிள்ளையா ருடன்அரசும்
வருநீர்செஞ் சடைக்கரந்தார்
திருஅம்பர் வணங்கினார்.
[246]
செங்குமுத மலர்வாவித்
திருக்கடவூர் அணைந்தருளிப்
பொங்கியவெங் கூற்றடர்த்த
பொன்னடிகள் தொழுதேத்திக்
குங்குலியக் கலயனார்
திருமடத்தில் குறைவறுப்ப
அங்கவர்பால் சிவனடியா
ருடன்அமுது செய்தார்கள்.
[247]
சீர்மன்னுந் திருக்கடவூர்த்
திருமயா னமும்வணங்கி
ஏர்மன்னும் இன்னிசைப்பாப்
பலபாடி இனிதமர்ந்து
கார்மன்னுங் கறைக்கண்டர்
கழலிணைகள் தொழுதகன்று
தேர்மன்னும் மணிவீதித்
திருவாக்கூர் சென்றணைந்தார்.

[248]
சார்ந்தார்தம் புகலிடத்தைத்
தான்தோன்றி மாடத்துக்
கூர்ந்தார்வம் உறப்பணிந்து
கோதில்தமிழ்த் தொடைபுனைந்து
வார்ந்தாடுஞ் சடையார்தம்
பதிபலவும் வணங்கியுடன்
சேர்ந்தார்கள் தம்பெருமான்
திருவீழி மிழலையினை.
[249]
வீழி மிழலை வந்தணைய
மேவு நாவுக் கரசினையும்
காழி ஞானப் பிள்ளையையும்
கலந்த உள்ளக் காதலினால்
ஆழி வலவன் அறியாத
அடியார் அடியார் அவர்களுடன்
வாழி மறையோர் எதிர்கொண்டு
வணங்க வணங்கி உள்புக்கார்.
[250]
மாட வீதி அலங்கரித்து
மறையோர் வாயின் மணிவிளக்கு
நீடு கதலி தழைப்பூகம்
நிரைத்து நிறைபொற் குடமெடுத்துப்
பீடு பெருகும் வாகீசர்
பிள்ளை யாரும் தொண்டர்களும்
கூட மகிழ்ந்து விண்ணிழிந்த
கோயில் வாயில் சென்றணைந்தார்.
[251]
சென்றுள் புகுந்து திருவீழி
மிழலை அமர்ந்த செங்கனகக்
குன்ற வில்லி யார்மகிழ்ந்த
கோயில் வலமா வந்துதிரு
முன்றில் வணங்கி முன்னெய்தி
முக்கட் செக்கர்ச் சடைமவுலி
வென்றி விடையார் சேவடிக்கீழ்
விழுந்தார் எழுந்தார் விம்மினார்.
[252]
கைகள் குவித்துக் கழல்போற்றிக்
கலந்த அன்பு கரைந்துருக
மெய்யில் வழியுங் கண்ணருவி
விரவப் பரவுஞ் சொல்மாலை
செய்ய சடையார் தமைச்சேரார்
தீங்கு நெறிசேர் கின்றார்என்
றுய்யு நெறித்தாண் டகம்மொழிந்தங்
கொழியாக் காதல் சிறந்தோங்க.
[253]
முன்னாள் அயனுந் திருமாலும்
முடியும் முதலும் காணாத
பொன்னார் மேனி மணிவெற்பைப்
பூநீர் மிழலை யினில்போற்றிப்
பன்னாள் பிரியா நிலைமையினால்
பயிலக் கும்பிட் டிருப்பாராய்
அந்நாள் மறையோர் திருப்பதியில்
இருந்தார் மெய்ம்மை அருந்தவர்கள்.
[254]
சீரின் விளங்குந் திருத்தொண்டர்
இருந்து சிலநாள் சென்றதற்பின்
மாரி சுருங்கி வளம்பொன்னி
நதியும் பருவம் மாறுதலும்
நீரின் இயன்ற உணவருகி
நிலவும் பலமன் னுயிர்களெலாம்
பாரின் மலிந்த இலம்பாட்டில்
படர்கூர் வறுமை பரந்ததால்.
[255]
வையம் எங்கும் வற்கடமாய்ச்
செல்ல உலகோர் வருத்தமுற
நையும் நாளில் பிள்ளையார்
தமக்கும் நாவுக் கரசருக்கும்
கையில் மானும் மழுவுமுடன்
காணக் கனவில் எழுந்தருளிச்
செய்ய சடையார் திருவீழி
மிழலை உடையார் அருள்செய்வார்.
[256]
கால நிலைமை யால்உங்கள்
கருத்தில் வாட்ட முறீர்எனினும்
ஏல உம்மை வழிபடுவார்க்
களிக்க அளிக்கின் றோம்என்று
கோலங் காண எழுந்தருளிக்
குலவும் பெருமை இருவர்க்கும்
ஞாலம் அறியப் படிக்காசு
வைத்தார் மிழலை நாயகனார்.
[257]
விண்ணின் றிழிந்த விமானத்தின்
கிழக்கும் மேற்கும் பீடத்தில்
அண்ணல் புகலி ஆண்டகையார்
தமக்கும் ஆண்ட அரசினுக்கும்
நண்ணும் நாள்கள் தொறுங்காசு
படிவைத் தருள நானிலத்தில்
எண்ணில் அடியா ருடன்அமுது
செய்தங் கிருந்தார் இருவர்களும்.
[258]
அல்லார் கண்டத் தண்டர்பிரான்
அருளால் பெற்ற படிக்காசு
பல்லா றியன்ற வளம்பெருகப்
பரமன் அடியா ரானார்கள்
எல்லாம் எய்தி உண்கவென
இரண்டு பொழுதும் பறைநிகழ்த்திச்
சொல்லால் சாற்றிச் சோறிட்டார்
துயர்கூர் வறுமை தொலைத்திட்டார்.
[259]
ஈசர் மிழலை இறையவர்பால்
இமையப் பாவை திருமுலைப்பால்
தேசம் உய்ய உண்டவர்தாம்
திருமா மகனார் ஆதலினால்
காசு வாசி யுடன்பெற்றார்
கைத்தொண் டாகும் அடிமையினால்
வாசி யில்லாக் காசுபடி
பெற்று வந்தார் வாகீசர்.
[260]
ஆறு சடைமேல் அணிந்தருளும்
அண்ணல் வைத்த படிக்காசால்
ஈறி லாத பொருளுடைய
இருவ ருடைய திருமடங்கள்
சோறு நாளுந் தொண்டர்மகிழ்ந்
துண்ண உண்ணத் தொலையாதே
ஏறு பெருமை புவிபோற்ற
இன்புற் றிருக்கும் அந்நாளில்.
[261]
காலந் தவறு தீர்ந்தெங்கும்
கலிவான் பொழிந்து புனல்கலந்து
ஞாலம் எல்லாம் குளிர்தூங்கி
உணவு பெருகி நலஞ்சிறப்ப
மூல அன்பர் இருவர்களும்
மொழிமா லைகளும் பலசாத்தி
நீல கண்டர் உறைபதிகள்
பிறவும் வணங்க நினைவுற்றார்.
[262]
வாய்ந்த மிழலை மாமணியை
வணங்கிப் பிரியா விடைகொண்டு
பூந்தண் புனல்சூழ் வாஞ்சியத்தைப்
போற்றிப் புனிதர் வாழ்பதிகள்
ஏய்ந்த அன்பி னாலிறைஞ்சி
இசைவண் டமிழ்கள் புனைந்துபோய்ச்
சேர்ந்தார் செல்வத் திருமறைக்கா
டெல்லை இல்லாச் சீர்த்தியினார்.
[263]
மன்றல் விரவு மலர்ப்புன்னை
மணஞ்சூழ் சோலை உப்பளத்தின்
முன்றில் தோறுஞ் சிறுமடவார்
முத்தங் கொழிக்கும் மறைக்காட்டுக்
குன்ற வில்லி யார்மகிழ்ந்த
கோயில் புகுந்து வலங்கொண்டு
சென்று சேர்ந்தார் தென்புகலிக்
கோவும் அரசுந் திருமுன்பு.
[264]
பரவை ஓதக் கழிக்கானற்
பாங்கு நெருங்கும் அப்பதியில்
அரவச் சடைஅந் தணனாரை
அகில மறைகள் அர்ச்சனைசெய்
துரவக் கதவந் திருக்காப்புச்
செய்த அந்நாள் முதல்இந்நாள்
வரையும் அடைத்தே நிற்கின்ற
மணிநீள் வாயில் வணங்குவார்.
[265]
தொல்லை வேதந் திருக்காப்புச்
செய்த வாயில் தொடர்வகற்ற
வல்ல அன்பர் அணையாமை
மருங்கோர் வாயில் வழியெய்தி
அல்லல் தீர்ப்பார் தமையருச்சிப்
பார்கள் தொழுவா ராம்படிகண்
டெல்லை யில்லாப் பெரும்புகழார்
இதனை அங்குக் கேட்டறிந்தார்.
[266]
ஆங்கப் பரிசை அறிந்தருளி
ஆழித் தோணி புரத்தரசர்
ஓங்கு வேதம் அருச்சனைசெய்
உம்பர் பிரானை உள்புக்குத்
தேங்கா திருவோம் நேர்இறைஞ்சத்
திருமுன் கதவந் திருக்காப்பு
நீங்கப் பாடும் அப்பரென
நீடுந் திருநா வுக்கரசர்.
[267]
உண்ணீர் மையினால் பிள்ளையார்
உரைசெய் தருள அதனாலே
பண்ணி னேரு மொழியாள்என்
றெடுத்துப் பாடப் பயன்துய்ப்பான்
தெண்ணீர் அணிந்தார் திருக்காப்பு
நீக்கத் தாழ்க்கத் திருக்கடைக்காப்
பெண்ணீர் இரக்கம் ஒன்றில்லீர்
என்று பாடி இறைஞ்சுதலும்.
[268]
வேத வனத்தின் மெய்ப்பொருளின்
அருளால் விளங்கு மணிக்கதவங்
காதல் அன்பர் முன்புதிருக்
காப்பு நீங்கக் கலைமொழிக்கு
நாதர் ஞான முனிவருடன்
தொழுது விழுந்தார் ஞாலத்துள்
ஓத ஒலியின் மிக்கெழுந்த
தும்பர் ஆர்ப்பும் மறையொலியும்.
[269]
அன்பர் ஈட்டங் களிசிறப்ப
ஆண்ட அரசும் சிவக்கன்றும்
இன்ப வெள்ளத் திடைமூழ்கி
எழுந்துள் புகுந்து தம்பெருமான்
முன்பு பணிந்து போற்றிசைத்துப்
பரவி மொழிமா லைகள்பாடி
என்பு கரைய உள்ளுருகி
இறைஞ்சி அரிதிற் புறத்தணைந்தார்.
[270]
புறம்பு நின்ற வாகீசர்
புனிதர் அருளால் இக்கதவந்
திறந்தும் அடைத்துஞ் செல்லுநெறி
திருந்த மலையாள் திருமுலையிற்
கறந்த ஞானங் குழைத்தமுது
செய்த புகலிக் கவுணியரை
நிறைந்த கதவம் அடைக்கும்வகை
நீரும் பாடி அருளுமென.
[271]
சண்பை ஆளுந் தமிழ்விரகர்
தாமும் திருநா வுக்கரசர்
பண்பின் மொழிந்த உரைகொண்டு
பதிகம் பாடும் அவ்வளவில்
கண்பொற் பமைந்த நுதற்காள
கண்டர் அருளால் கடிதுடனே
திண்பொற் கதவந் திருக்காப்புச்
செய்த தெடுத்த திருப்பாட்டில்.

[272]
அதுகண் டுடைய பிள்ளையார்
தாமும் ஆண்ட அரசும்மகிழ்ந்
திதுநம் பெருமான் அருள்செய்யப்
பெற்றோம் என்றங் கிறைஞ்சியபின்
பதிகம் நிரம்பப் பிள்ளையார்
பாடித் தொழுது பணிவுற்றார்
எதிர்பொற் றிருவா யிலின்வழக்கம்
என்றும் நிகழ்ச்சி எய்தியதால்.
[273]
அங்கு நிகழ்ந்த அச்செயல்கண்
டடியார் எல்லாம் அதிசயித்துப்
பொங்கு புளகம் எய்திடமெய்
பொழியுங் கண்ணீர் பாய்ந்திழிய
எங்கும் நிகரொன் றில்லாத
இருவர் பாதம் இறைஞ்சினார்
நங்கள் புகலிப் பெருந்தகையும்
அரசும் மடத்தில் நண்ணியபின்.

[274]
அரிதில் திறக்கத் தாம்பாட
அடைக்க அவர்பா டியஎளிமை
கருதி நம்பர் திருவுள்ளம்
அறியா தயர்ந்தேன் எனக்கவன்று
பெரிதும் அஞ்சித் திருமடத்தில்
ஒருபால் அணைந்து பேழ்கணித்து
மருவும் உணர்வில் துயில்கொண்டார்
வாய்மை திறம்பா வாகீசர்.
[275]
மன்னுஞ் செல்வ மறைக்காட்டு
மணியின் பாதம் மனத்தின்கண்
உன்னித் துயிலும் பொழுதின்கண்
உமையோர் பாகம் உடையவர்தாம்
பொன்னின் மேனி வெண்ணீறு
புனைந்த கோலப் பொலிவினொடுந்
துன்னி அவர்க்கு வாய்மூரில்
இருப்போந் தொடர வாவென்றார்.
[276]
போதம் நிகழ வாஎன்று
போனார் என்கொல் எனப்பாடி
ஈதெம் பெருமான் அருளாகில்
யானும் போவேன் என்றெழுந்து
வேத வனத்தைப் புறகிட்டு
விரைந்து போக அவர்முன்னே
ஆதி மூர்த்தி முன்காட்டும்
அவ்வே டத்தால் எழுந்தருள.
[277]
சீரார் பதியி னின்றெழுந்து
செல்லுந் திருநா வுக்கரசர்
ஆரா அன்பில் ஆரமுதம்
உண்ண எய்தா வாறேபோல்
நீரார் சடையார் எழுந்தருள
நெடிது பின்பு செல்லுமவர்
பேரா ளரைமுன் தொடர்ந்தணையப்
பெறுவார் எய்தப் பெற்றிலரால்.
[278]
அன்ன வண்ணம் எழுந்தருளி
அணித்தே காட்சி கொடுப்பார்போல்
பொன்னின் கோயில் ஒன்றெதிரே
காட்டி அதனுட் புக்கருளத்
துன்னுந் தொண்டர் அம்மருங்கு
விரைந்து தொடரப் போந்தபடி
மன்னும் புகலி வள்ளலார்
தாமுங் கேட்டு வந்தணைந்தார்.

[279]
அழைத்துக் கொடுபோந் தணியார்போல்
காட்டி மறைந்தார் எனஅயர்ந்து
பிழைத்துச் செவ்வி அறியாதே
திறப்பித் தேனுக் கேயல்லால்
உழைத்தா மொளித்தால் கதவந்தொண்
டுறைக்கப் பாடி அடைப்பித்த
தழைத்த மொழியார் உப்பாலார்
தாமிங் கெப்பால் மறைவதென.
[280]
மாட நீடு திருப்புகலி
மன்னர் அவர்க்கு மாலயனும்
நேடி இன்னங் காணாதார்
நேரே காட்சி கொடுத்தருள
ஆடல் கண்டு பணிந்தேத்தி
அரசுங் காணக் காட்டுதலும்
பாட அடியார் என்றெடுத்துப்
பரமர் தம்மைப் பாடினார்.

[281]
பாடுந் தமிழ்மா லைகள்கொண்டு
பரமர் தாமும் எழுந்தருள
நீடுந் திருவாய் மூரடைந்து
நிலவுங் கோயில் வலஞ்செய்து
சூடும் பிறையார் பெருந்தொண்டர்
தொழுது போற்றித் துதிசெய்து
நாடுங் காதல் வளர்ந்தோங்க
நயந்தந் நகரில் உடனுறைந்தார்.
[282]
ஆண்ட அரசும் பிள்ளையார்
உடனே அங்கண் இனிதமர்ந்து
பூண்ட காதல் பொங்கியெழ
வாய்மூர் அடிகள் அடிபோற்றி
மூண்ட அன்பின் மொழிமாலை
சாத்தி ஞான முனிவரொடு
மீண்டு வந்து திருமறைக்காட்
டெய்தி விமலர் தாள்பணிந்தார்.
[283]
ஆதி முதல்வர் தமைப்பணிந்தங்
கான பணிசெய் தமருநாள்
சீத மதிவெண் குடைவளவர்
மகளார் தென்னன் தேவியார்
கோதில் குணத்துப் பாண்டிமா
தேவி யார்முன் குலச்சிறையார்
போத விட்டார் சிலர்வந்தார்
புகலி வேந்தர் தமைக்காண.
[284]
வந்து சிவனார் திருமறைக்கா
டெய்தி மன்னு வேணுபுரி
அந்த ணாளர் தமக்கறிவித்
தவர்பால் எய்தி அடிவணங்கச்
சிந்தை மகிழ்ந்து தீதின்மை
வினவத் தீங்கும் முளவாமோ
இந்த உலகம் உயவந்தீர்
இருதாள் நினைவார்க் கென்றுரைப்பார்.
[285]
சைவ நெறிவை திகம்நிற்கச்
சழக்கு நெறியைத் தவமென்னும்
பொய்வல் அமணர் செயல்தன்னைப்
பொறுக்க கில்லோம் எனக்கேட்டே
அவ்வன் தொழிலோர் செயல்மாற்றி
ஆதி சைவ நெறிவிளங்கத்
தெய்வ நீறு நினைந்தெழுந்தார்
சீர்கொள் சண்பைத் திருமறையோர்.
[286]
ஆய பொழுது திருநாவுக்
கரசு புகலி ஆண்டகைக்குக்
காய மாசு பெருக்கியுழல்
கலதி அமணர் கடுவினைசெய்
மாயை சாலம் மிகவல்லார்
அவர்மற் றென்னை முன்செய்த
தீய தொழிலும் பலகெட்டேன்
செல்ல இசையேன் யான்என்றார்.
[287]
என்று கூற எல்லையிலா
நீறு போற்றும் இருவரையும்
சென்று காணும் கருத்துடையேன்
அங்குத் தீங்கு புரிஅமணர்
நின்ற நிலைமை அழிவித்துச்
சைவ நெறிபா ரித்தன்றி
ஒன்றுஞ் செய்யேன் ஆணைஉம
தென்றார் உடைய பிள்ளையார்.
[288]
போமா துணிந்து நீர்அங்குப்
போதப் போதா அவ்வமணர்
தீமா யையினை யானேபோய்ச்
சிதைத்து வருகின் றேன்என்ன
ஆமா றெல்லாம் உரைத்தவரை
மறுக்க மாட்டா தரசிருப்பத்
தாமா தரவால் தமிழ்நாட்டில்
போனார் ஞானத் தலைவனார்.
[289]
வேணு புரக்கோன் எழுந்தருள
விடைகொண் டிருந்த வாகீசர்
பூணும் அன்பால் மறைக்காட்டில்
புனிதர் தம்மைப் போற்றிசைத்துப்
பேணி இருந்தங் குறையுநாள்
பெயர்வார் வீழி மிழலையமர்
தாணு வின்தன் செய்யகழல்
மீண்டுஞ் சார நினைக்கின்றார்.
[290]
சோலை மறைக்காட் டமர்ந்தருளுஞ்
சோதி அருள்பெற் றகன்றுபோய்
வேலை விடமுண் டவர்வீழி
மிழலை மீண்டுஞ் செல்வன் என
ஞாலம் நிகழ்ந்த நாகைக்கா
ரோணம் பிறவுந் தாம்பணிந்து
சாலு மொழிவண் டமிழ்பாடித்
தலைவர் மிழலை வந்தடைந்தார்.
[291]
வீழி மிழலை தனைப்பணிந்து
வேத முதல்வர் தாமிருப்ப
ஆழி வலமேந் தியஅரியால்
ஆகா சத்தின் நின்றிழிந்த
வாழி மலர்ந்த கோயில்தனில்
மன்னும் பொருளைப் போற்றிசைத்துத்
தாழும் நாளிற் பிறபதியும்
பணியுங் காதல் தலைநிற்பார்.
[292]
பூவிற் பொலியும் புனற்பொன்னிக்
கரைபோய்ப் பணிவார் பொற்பமைந்த
ஆவுக் கருளும் ஆவடுதண்
டுறையார் பாதம் அணைந்திறைஞ்சி
நாவுக் கரசர் ஞானபோ
னகர்க்குச் செம்பொன் ஆயிரமும்
பாவுக் களித்த திறம்போற்றிப்
போந்து பிறவும் பணிகின்றார்.
[293]
செய்ய சடையார் பழையாறை
எய்த அதனில் செல்பொழுதின்
மையல் அமணர் மறைத்தவட
தளியின் மன்னுஞ் சிவனாரைக்
கைகள் கூப்பித் தொழுதருளக்
கண்ட வாற்றால் அமணர்கள்தம்
பொய்கொள் விமானம் எனக்கேட்டுப்
பொறாத உள்ளம் மிகப்புழுங்கி.
[294]
அந்த விமானந் தனக்கருகா
ஆங்கோர் இடத்தின் பாங்கெய்திக்
கந்த மலருங் கடிக்கொன்றை
முடியார் செய்ய கழலுன்னி
மந்த அமணர் வஞ்சனையால்
மறைத்த வஞ்சம் ஒழித்தருளிப்
பந்தங் கொண்ட குண்டர்திறம்
பாற்றும் என்று பணிந்திருப்பார்.
[295]
வண்ணங் கண்டு நான்உம்மை
வணங்கி யன்றிப் போகேனென்
றெண்ண முடிக்கும் வாகீசர்
இருந்தார் அமுது செய்யாதே
அண்ண லாரும் அதுவுணர்ந்தங்
கரசு தம்மைப் பணிவதற்குத்
திண்ண மாக மன்னனுக்குக்
கனவில் அருளிச் செய்கின்றார்.
[296]
அறிவில் அமணர் நமைமறைப்ப
இருந்தோம் என்றங் கடையாளக்
குறிகள் அறியச் செய்தருளி
நம்மை அரசு கும்பிடுவான்
நெறியில் அமணர் தமையழித்து
நீக்கிப் போக்கென் றருள்புரியச்
செறிவில் அறிவுற் றெழுந்தவனுஞ்
செங்கை தலைமேற் குவித்திறைஞ்சி.
[297]
கண்ட வியப்பு மந்திரிகட்
கியம்பிக் கூடக் கடிதெய்தி
அண்டர் பெருமான் அருள்செய்த
அடையா ளத்தின் வழிகண்டு
குண்டர் செய்த வஞ்சனையைக்
குறித்து வேந்தன் குலவுபெருந்
தொண்டர் தம்மை அடிவணங்கித்
தொக்க அமணர் தூர்அறுத்தான்.
[298]
ஆனை இனத்தில் துகைப்புண்ட
அமணா யிரமும் மாய்ந்ததற்பின்
மேன்மை அரசன் ஈசர்க்கு
விமான மாக்கி விளக்கியபின்
ஆன வழிபாட் டர்ச்சனைக்கு
நிபந்தம் எல்லாம் அமைத்திறைஞ்ச
ஞான அரசும் புக்கிறைஞ்சி
நாதர் முன்பு போற்றுவார்.
[299]
தலையின் மயிரைப் பறித்துண்ணுஞ்
சாதி அமணர் மறைத்தாலும்
நிலையி லாதார் நிலைமையினால்
மறைக்க ஒண்ணு மோஎன்னும்
விலையில் வாய்மைக் குறுந்தொகைகள்
விளம்பிப் புறம்போந் தங்கமர்ந்தே
இலைகொள் சூலப் படையார்சேர்
இடங்கள் பிறவுந் தொழஅணைவார்.
[300]
பொங்கு புனலார் பொன்னியினில்
இரண்டு கரையும் பொருவிடையார்
தங்கும் இடங்கள் புக்கிறைஞ்சித்
தமிழ்மா லைகளுஞ் சாத்திப்போய்
எங்கும் நிறைந்த புகழாளர்
ஈறில் தொண்டர் எதிர்கொள்ளச்
செங்கண் விடையார் திருவானைக்
காவின் மருங்கு சென்றணைந்தார்.
[301]
சிலந்திக் கருளுங் கழல்வணங்கிச்
செஞ்சொல் மாலை பலபாடி
இலங்கு சடையார் எறும்பியூர்
மலையும் இறைஞ்சிப் பாடியபின்
மலர்ந்த சோதி திருச்சிராப்
பள்ளி மலையுங் கற்குடியும்
நலங்கொள் செல்வத் திருப்பராய்த்
துறையுந் தொழுவான் நண்ணினார்.
[302]
மற்றப் பதிகள் முதலான
மருங்குள் ளனவுங் கைதொழுது
பொற்புற் றமைந்த திருப்பணிகள்
செய்து பதிகங் கொடுபோற்றி
உற்ற அருளால் காவிரியை
ஏறி ஒன்னார் புரமெரியச்
செற்ற சிலையார் திருப்பைஞ்ஞீ
லியினைச் சென்று சேர்கின்றார்.
[303]
வழிபோம் பொழுது மிகஇளைத்து
வருத்தம் உறநீர் வேட்கையொடும்
அழிவாம் பசிவந் தணைந்திடவும்
அதற்குச் சித்தம் அலையாதே
மொழிவேந் தருமுன் எழுந்தருள
முருகார் சோலைப் பைஞ்ஞீலி
விழியேந் தியநெற் றியினார்தந்
தொண்டர் வருத்தம் மீட்பாராய்.
[304]
காவுங் குளமும் முன்சமைத்துக்
காட்டி வழிபோங் கருத்தினால்
மேவுந் திருநீற் றந்தணராய்
விரும்பும் பொதிசோ றுங்கொண்டு
நாவின் தனிமன் னவர்க்கெதிரே
நண்ணி இருந்தார் விண்ணின்மேல்
தாவும் புள்ளும் மண்கிழிக்குந்
தனிஏ னமுங்காண் பரியவர்தாம்.
[305]
அங்கண் இருந்த மறையவர்பால்
ஆண்ட அரசும் எழுந்தருள
வெங்கண் விடைவே தியர்நோக்கி
மிகவும் வழிவந் திளைத்திருந்தீர்
இங்கென் பாலே பொதிசோறுண்
டிதனை உண்டு தண்ணீர்இப்
பொங்கு குளத்தில் குடித்திளைப்புப்
போக்கிப் போவீர் எனப்புகன்றார்.
[306]
நண்ணுந் திருநா வுக்கரசர்
நம்பர் அருள்என் றறிந்தார்போல்
உண்ணும் என்று திருமறையோர்
உரைத்துப் பொதிசோ றளித்தலுமே
எண்ண நினையா தெதிர்வாங்கி
இனிதா அமுது செய்தினிய
தண்ணீர் அமுது செய்தருளித்
தூய்மை செய்து தளர்வொழிந்தார்.
[307]
எய்ப்பு நீங்கி நின்றவரை
நோக்கி இருந்த மறையவனார்
அப்பால் எங்கு நீர்போவ
தென்றார் அரசும் அவர்க்கெதிரே
செப்பு வார்யான் திருப்பைஞ்ஞீ
லிக்குப் போவ தென்றுரைப்ப
ஒப்பி லாரும் யான்அங்குப்
போகின் றேன்என் றுடன்போந்தார்.
[308]
கூட வந்து மறையவனார்
திருப்பைஞ் ஞீலி குறுகியிட
வேடம் அவர்முன் மறைத்தலுமே
மெய்ம்மைத் தவத்து மேலவர்தாம்
ஆடல் உகந்தார் அடியேனைப்
பொருளா அளித்த கருணைஎனப்
பாடல் புரிந்து விழுந்தெழுந்து
கண்ணீர் மாரி பயில்வித்தார்.
[309]
பைஞ்ஞீ லியினில் அமர்ந்தருளும்
பரமர் கோயில் சென்றெய்தி
மைஞ்ஞீ லத்து மணிகண்டர்
தம்மை வணங்கி மகிழ்சிறந்து
மெய்ஞ்ஞீர் மையினில் அன்புருக
விரும்புந் தமிழ்மா லைகள்பாடிக்
கைஞ்ஞீ டியதந் திருத்தொண்டு
செய்து காதல் உடனிருந்தார்.
[310]
நாதர் மருவுந் திருமலைகள்
நாடும் பதிகள் பலமிகவும்
காதல் கூரச் சென்றிறைஞ்சிக்
கலந்த இசைவண் டமிழ்பாடி
மாதொர் பாகர் அருளாலே
வடபால் நோக்கி வாகீசர்
ஆதி தேவர் அமர்ந்ததிரு
வண்ணா மலையை நண்ணினார்.
[311]
செங்கண் விடையார் திருவண்ணா
மலையைத் தொழுது வலங்கொண்டு
துங்க வரையின் மிசையேறித்
தொண்டர் தொழும்புக் கெதிர்நிற்கும்
அங்கன் அரசைப் பணிந்தெழுந்து
திளைத்துத் திருநா வுக்கரசர்
தங்கு பிறப்பே வீட்டினுக்கு
மேலாம் பெருமை சாதித்தார்.
[312]
அண்ணா மலைமேல் அணிமலையை
ஆரா அன்பின் அடியவர்தங்
கண்ணார் அமுதை விண்ணோரைக்
காக்கக் கடலில் வந்தெழுந்த
உண்ணா நஞ்சம் உண்டானைக்
கும்பிட் டுருகுஞ் சிந்தையுடன்
பண்ணார் பதிகத் தமிழ்பாடிப்
பணிந்து பரவிப் பணிசெய்தார்.
[313]
பணியார் வேணிச் சிவபெருமான்
பாதம் போற்றிப் பணிசெயுநாள்
மணியார் கண்டத் தெம்பெருமான்
மண்மேல் மகிழும் இடமெங்கும்
தணியாக் காதல் உடன்சென்று
வணங்கித் தக்க பணிசெய்வார்
அணியார் தொண்டைத் திருநாட்டில்
அருளால் அணைவார் ஆயினார்.
[314]
காதல் செய்யுங் கருத்தினுடன்
காடும் மலையும் கான்யாறும்
சூத மலிதண் பணைப்பதிகள்
பலவுங் கடந்து சொல்லினுக்கு
நாதர் போந்து பெருந்தொண்டை
நன்னாட் டெய்தி முன்னாகச்
சீத மலர்மென் சோலைசூழ்
திருவோத் தூரில் சென்றடைந்தார்.
[315]
செக்கர்ச் சடையார் திருவோத்தூர்த்
தேவர் பிரானார் தங்கோயில்
புக்கு வலங்கொண் டெதிர்இறைஞ்சிப்
போற்றிக் கண்கள் புனல்பொழிய
முக்கட் பிரானை விரும்புமொழித்
திருத்தாண் டகங்கள் முதலாகத்
தக்க மொழிமா லைகள்சாத்திச்
சார்ந்து பணிசெய் தொழுகுவார்.
[316]
செய்ய ஐயர் திருவோத்தூர்
ஏத்திப் போந்து செழும்புவனம்
உய்ய நஞ்சுண் டருளும்அவர்
உறையும் பதிகள் பலவணங்கித்
தையல் தழுவக் குழைந்தபிரான்
தங்குந் தெய்வப் பதியென்று
வையம் முழுதும் தொழுதேத்தும்
மதில்சூழ் காஞ்சி மருங்கணைந்தார்.

[317]
ஞாலம் உய்யத் திருவதிகை
நம்பர் தம்பேர் அருளினால்
சூலை மடுத்து முன்னாண்ட
தொண்டர் வரப்பெற் றோமென்று
காலை மலருங் கமலம்போற்
காஞ்சி வாணர் முகமெல்லாம்
சால மலர்ந்து களிசிறப்பத்
தழைத்த மனங்கள் தாங்குவார்.
[318]
மாட வீதி மருங்கெல்லாம்
மணிவா யில்களில் தோரணங்கள்
நீடு கதலி யுடன்கமுகு
நிரைத்து நிறைபொற் குடந்தீபம்
தோடு குலவு மலர்மாலை
சூழ்ந்த வாசப் பந்தர்களும்
ஆடு கொடியு முடனெடுத்தங்
கணிநீள் காஞ்சி அலங்கரித்தார்.
[319]
தொண்டர் ஈண்டி எதிர்கொள்ள
எழுந்து சொல்லுக் கரசர்பால்
கொண்ட வேட்கைப் பொலிவினொடுங்
குலவும் வீதிப் பணிசெய்யும்
அண்டர் அறிதற் கரியதிரு
அலகு முதலாம் அவையேந்தி
இண்டை புனைந்த சடைமுடியார்க்
கன்பர் தம்மை எதிர்கொண்டார்.
[320]
எதிர்கொண் டிறைஞ்சுஞ் சீரடியார்
தம்மை இறைஞ்சி எழுந்தருளி
மதில்கொண் டணிந்த காஞ்சிநகர்
மறுகுட் போந்து வானநதி
குதிகொண் டிழுந்த சடைக்கம்பர்
செம்பொற் கோயில் குறுகினார்
அதிர்கொண் டலைநேர் மணிமிடற்றார்
ஆண்ட திருநா வுக்கரசர்.
[321]
திருவா யிலினைப் பணிந்தெழுந்து
செல்வத் திருமுன் றிலைஅணைந்து
கருவார் கச்சி ஏகம்பர்
கனக மணிமா ளிகைசூழ்ந்து
வருவார் செம்பொன் மலைவல்லி
தழுவக் குழைந்த மணிமேனிப்
பெருவாழ் வினைமுன் கண்டிறைஞ்சிப்
பேரா அன்பு பெருகினார்.
[322]
வார்ந்து சொரிந்த கண்ணருவி
மயிர்க்கால் தோறும் வரும்புளகம்
ஆர்ந்த மேனிப் புறம்பலைப்ப
அன்பு கரைந்தென் புள்ளலைப்பச்
சேர்ந்த நயனம் பயன்பெற்றுத்
திளைப்பத் திருவே கம்பர்தமை
நேர்ந்த மனத்தில் உறவைத்து
நீடும் பதிகம் பாடுவார்.
[323]
கரவாடும் வன்னெஞ்சர்க்
கரியானை என்றெடுத்துப்
பரவாய சொல்மாலைத்
திருப்பதிகம் பாடியபின்
விரவார்தம் புரம்எரித்த
விடையவனார் வெள்ளெயிற்றின்
அரவாரம் புனைந்தவர்தந்
திருமுன்றிற் புறத்தணைந்தார்.
[324]
கையார்ந்த திருத்தொண்டு
கழியமிகுங் காதலொடும்
செய்யாநின் றேஎல்லாச்
செந்தமிழ்மா லையும்பாடி
மையார்ந்த மிடற்றர்திரு
மயானத்தை வலங்கொண்டு
மெய்யார்வ முறத்தொழுது
விருப்பினொடு மேவுநாள்.
[325]
சீர்வளரு மதில்கச்சி
நகர்த்திருமேற் றளிமுதலா
நீர்வளருஞ் சடைமுடியார்
நிலவியுறை ஆலயங்கள்
ஆர்வமுறப் பணிந்தேத்தி
ஆய்ந்ததமிழ்ச் சொல்மலரால்
சார்வுறுமா லைகள்சாத்தித்
தகுந்தொண்டு செய்திருந்தார்.
[326]
அந்நகரில் அவ்வண்ணம்
அமர்ந்துறையும் நாளின்கண்
மன்னுதிரு மாற்பேறு
வந்தணைந்து தமிழ்பாடிச்
சென்னிமிசை மதிபுனைவார்
பதிபலவுஞ் சென்றிறைஞ்சித்
துன்னினார் காஞ்சியினைத்
தொடர்ந்தபெருங் காதலினால்.
[327]
ஏகம்பன் காண்அவனென்
எண்ணத்தான் எனப்போற்றிப்
பாகம்பெண் ணுருவானைப்
பைங்கண்விடை உயர்த்தானை
நாகம்பூண் உகந்தானை
நலம்பெருகுந் திருநீற்றின்
ஆகந்தோய் அணியானை
அணைந்துபணிந் தின்புற்றார்.
[328]
திருக்கச்சி ஏகம்பம்
பணிந்தேத்தித் திங்களார்
நெருக்கச்செஞ் சடைக்கணிந்தார்
நீடுபதி தொழநினைவார்
வருக்கைச்செஞ் சுளைபொழிதேன்
வயல்விளைக்கும் நாட்டிடைப்போய்ப்
பருக்கைத்திண் களிற்றுரியார்
கழுக்குன்றின் பாங்கணைந்தார்.
[329]
நீடுதிருக் கழுக்குன்றில்
நிருத்தனார் கழல்வணங்கிப்
பாடுதமிழ்த் தொடைபுனைந்து
பாங்குபல பதிகளிலுஞ்
சூடுமிளம் பிறைமுடியார்
தமைத்தொழுது போற்றிப்போய்
மாடுபெருங் கடலுடுத்த
வான்மியூர் வந்தணைந்தார்.
[330]
திருவான்மி யூர்மருந்தைச்
சேர்ந்துபணிந் தன்பினொடும்
பெருவாய்மைத் தமிழ்பாடி
அம்மருங்கு பிறப்பறுத்துத்
தருவார்தங் கோயில்பல
சார்ந்திறைஞ்சித் தமிழ்வேந்தர்
மருவாரும் மலர்ச்சோலை
மயிலாப்பூர் வந்தடைந்தார்.
[331]
வரைவளர்மா மயிலென்ன
மாடமிசை மஞ்சாடும்
தரைவளர்சீர்த் திருமயிலைச்
சங்கரனார் தாள்வணங்கி
உரைவளர்மா லைகள்அணிவித்
துழவாரப் படையாளி
திரைவளர்வே லைக்கரைபோய்த்
திருவொற்றி யூர்சேர்ந்தார்.
[332]
ஒற்றியூர் வளநகரத்
தொளிமணிவீ திகள்விளக்கி
நற்கொடிமா லைகள்பூகம்
நறுங்கதலி நிரைநாட்டிப்
பொற்குடங்கள் தூபங்கள்
தீபங்கள் பொலிவித்து
மற்றவரை எதிர்கொண்டு
கொடுபுக்கார் வழித்தொண்டர்.
[333]
திருநாவுக் கரசரும்அத்
திருவொற்றி யூர்அமர்ந்த
பெருநாகத் திண்சிலையார்
கோபுரத்தை இறைஞ்சிப்புக்
கொருஞானத் தொண்டருடன்
உருகிவலங் கொண்டடியார்
கருநாமந் தவிர்ப்பாரைக்
கைதொழுது முன்வீழ்ந்தார்.
[334]
எழுதாத மறைஅளித்த
எழுத்தறியும் பெருமானைத்
தொழுதார்வ முறநிலத்தில்
தோய்ந்தெழுந்தே அங்கமெலாம்
முழுதாய பரவசத்தின்
முகிழ்த்தமயிர்க் கால்மூழ்க
விழுதாரை கண்பொழிய
விதிர்ப்புற்று விம்மினார்.
[335]
வண்டோங்கு செங்கமலம்
எனஎடுத்து மனமுருகப்
பண்தோய்ந்த சொற்றிருத்தாண்
டகம்பாடிப் பரவுவார்
விண்தோய்ந்த புனற்கங்கை
வேணியார் திருவுருவங்
கண்டோங்கு களிசிறப்பக்
கைதொழுது புறத்தணைந்தார்.
[336]
விளங்குபெருந் திருமுன்றில்
மேவுதிருப் பணிசெய்தே
உளங்கொள்திரு விருத்தங்கள்
ஓங்குதிருக் குறுந்தொகைகள்
களங்கொள்திரு நேரிசைகள்
பலபாடிக் கைதொழுது
வளங்கொள்திருப் பதியதனில்
பலநாள்கள் வைகினார்.
[337]
அங்குறையு நாளின்கண்
அருகுளவாம் சிவாலயங்கள்
எங்குஞ்சென் றினிதிறைஞ்சி
ஏத்துமவர் இறையருளால்
பொங்குபுனல் திருவொற்றி
யூர்தொழுது போந்துமையாள்
பங்குடையார் அமர்ந்ததிருப்
பாசூராம் பதியணைந்தார்.
[338]
திருப்பாசூர் நகரெய்திச்
சிந்தையினில் வந்தூறும்
விருப்பார்வம் மேற்கொள்ள
வேயிடங்கொண் டுலகுய்ய
இருப்பாரைப் புரமூன்றும்
எரித்தருள எடுத்ததனிப்
பொருப்பார்வெஞ் சிலையாரைத்
தொழுதெழுந்து போற்றுவார்.

[339]
முந்திமூ வெயில்எய்த
முதல்வனார் எனவெடுத்துச்
சிந்தைகரைந் துருகுதிருக்
குறுந்தொகையும் தாண்டகமும்
சந்தநிறை நேரிசையும்
முதலான தமிழ்பாடி
எந்தையார் திருவருள்பெற்
றேகுவார் வாகீசர்.
[340]
அம்மலர்சீர்ப் பதியைஅகன்
றயல்உளவாம் பதிஅனைத்தின்
மைம்மருவுங் களத்தாரை
வணங்கிமகிழ் வொடும்போற்றி
மெய்ம்மைநிலை வழுவாத
வேளாள விழுக்குடிமைச்
செம்மையினார் பழையனூர்த்
திருஆல வனம்பணிந்தார்.
[341]
திருவாலங் காடுறையுஞ்
செல்வர்தாம் எனச்சிறப்பின்
ஒருவாத பெருந்திருத்தாண்
டகம்முதலாம் ஓங்குதமிழ்ப்
பெருவாய்மைத் தொடைமாலை
பலபாடிப் பிறபதியும்
மருவார்வம் பெறவணங்கி
வடதிசைமேல் வழிக்கொள்வார்.
[342]
பல்பதியும் நெடுங்கிரியும்
படர்வனமுஞ் சென்றடைவார்
செல்கதிமுன் அளிப்பவர்தந்
திருக்காரிக் கரைபணிந்து
தொல்கலையின் பெருவேந்தர்
தொண்டர்கள்பின் உம்பர்குழாம்
மல்குதிருக் காளத்தி
மாமலைவந் தெய்தினார்.
[343]
பொன்முகலித் திருநதியின்
புனிதநெடுந் தீர்த்தத்தில்
முன்முழுகிக் காளத்தி
மொய்வரையின் தாழ்வரையில்
சென்னியுறப் பணிந்தெழுந்து
செங்கண்விடைத் தனிப்பாகர்
மன்னுமலை மிசையேறி
வலங்கொண்டு வணங்குவார்.
[344]
காதணிவெண் குழையானைக்
காளத்தி மலைக்கொழுந்தை
வேதமொழி மூலத்தை
விழுந்திறைஞ்சி எழுந்துபெருங்
காதல்புரி மனங்களிப்பக்
கண்களிப்பப் பரவசமாய்
நாதனைஎன் கண்ணுளான்
எனுந்திருத்தாண் டகம்நவின்றார்.
[345]
மலைச்சிகரச் சிகாமணியின்
மருங்குறமுன் னேநிற்கும்
சிலைத்தடக்கைக் கண்ணப்பர்
திருப்பாதம் சேர்ந்திறைஞ்சி
அலைத்துவிழுங் கண்ணருவி
ஆகத்துப் பாய்ந்திழியத்
தலைக்குவித்த கையினராய்த்
தாழ்ந்துபுறம் போந்தணைந்தார்.
[346]
சேணிலவு திருமலையில்
திருப்பணியா யினசெய்து
தாணுவினை அம்மலைமேல்
தாள்பணிந்த குறிப்பினால்
பேணுதிருக் கயிலைமலை
வீற்றிருந்த பெருங்கோலம்
காணுமது காதலித்தார்
கலைவாய்மைக் காவலனார்.
[347]
அங்கண் மாமலை மேல்ம ருந்தை
வணங்கி யாரரு ளான்மிகப்
பொங்கு காதலின் உத்த ரத்திசை
மேல்வி ருப்பொடு போதுவார்
துங்க மால்வரை கானி யாறு
தொடர்ந்த நாடு கடந்தபின்
செங்கண் மால்விடை அண்ணல் மேவு
திருப்ப ருப்பதம் எய்தினார்.
[348]
மான விஞ்சையர் வான நாடர்கள்
வான்இ யக்கர்கள் சித்தர்கள்
கான கின்னரர் பன்ன காதிபர்
காம சாரிக ளேமுதல்
ஞான மோனிகள் நாளும் நம்பரை
வந்தி றைஞ்சி நலம்பெறுந்
தான மான திருச்சி லம்பை
வணங்கி வண்டமிழ் சாற்றினார்.
[349]
அம்ம ருங்குக டந்து போமவர்
ஆர்கொள் சூல அயிற்படைச்
செம்மல் வெண்கயி லைப்பொ ருப்பைநி
னைந்தெ ழுந்ததொர் சிந்தையால்
எம்ம ருங்குமொர் காத லின்றி
இரண்டு பாலும் வியந்துளோர்
கைம்ம ருங்கணை யுந்தெ லுங்கு
கடந்து கன்னடம் எய்தினார்.
[350]
கருந டங்கழி வாகஏகிய
பின்க லந்தவ னங்களும்
திருந தித்துறை யாவை
யும்பயில் சேண்நெ டுங்கிரி
வட்டையும் பெருந லங்கிளர்
நாடும் எண்ணில பிற்ப
டச்செறி பொற்பினால் வருநெ
டுங்கதிர் கோலு சோலைய
மாள வத்தினை நண்ணினார்.
[351]
அங்கு முற்றிஅ கன்று போகி
அருஞ்சு ரங்கள் இகந்துசென்
றெங்கு மிக்க அறங்கள் நீடும்
இலாட பூமி யிகந்துபோய்
மங்குல் சுற்றிய வெற்பி னோடு
வனங்கள் யாறு கடந்தயற்
பங்க யப்பழ னத்து மத்திம
பைதி ரத்தினை எய்தினார்.
[352]
அன்ன நாடுக டந்து கங்கை
அணைந்து சென்று வலங்கொளும்
மின்னு வேணியர் வார ணாசி
விருப்பி னோடு பணிந்துடன்
பின்ன ணைந்தவர் தம்மை அங்கண்
ஒழிந்து கங்கை கடந்துபோய்
மன்னு காதல்செய் நாவின் மன்னவர்
வந்து கற்சுரம் முந்தினார்.

[353]
மாக மீதுவ ளர்ந்த கானக
மாகி எங்கும் மனித்தரால்
போக லாநெறி யன்றி யும்புரி
கின்ற காதல் பொலிந்தெழச்
சாக மூலப லங்கள் துய்ப்பன
வுந்த விர்ந்து தனித்துநேர்
ஏகி னாரிர வும்பெ ருங்கயி
லைக்கு லக்கிரி எய்துவார்.
[354]
ஆய வாரிரு ளின்கண் ஏகுமவ்
அன்பர் தம்மைஅ ணைந்துமுன்
தீய வாயவி லங்கு வன்தொழில்
செய்ய அஞ்சின நஞ்சுகால்
வாய நாகம ணிப்ப ணங்கொள்வி
ளக்கெ டுத்தன வந்துகால்
தோய வானவ ராயி னுந்தனி
துன்ன ருஞ்சுரம் முன்னினார்.
[355]
வெங்க திர்ப்பக லக்க டத்திடை
வெய்ய வன்கதிர் கைபரந்
தெங்கு மிக்கபி ளப்பி னாகர்தம்
எல்லை புக்கெரி கின்றன
பொங்க ழல்தெறு பாலை வெந்நிழல்
புக்க சூழல் புகும்பகல்
செங்க திர்க்கனல் போலும் அத்திசை
திண்மை மெய்த்தவர் நண்ணினார்.
[356]
இங்ங னம்இர வும்ப கற்பொழு
தும்ம ருஞ்சுரம் எய்துவார்
பங்க யம்புரை தாள்ப ரட்டள
வும்ப சைத்தசை தேயவும்
மங்கை பங்கர்தம் வெள்ளி மால்வரை
வைத்த சிந்தை மறப்பரோ
தங்க ரங்க ளிரண்டு மேகொடு
தாவி ஏகுதல் மேவினார்.
[357]
கைக ளும்மணி பந்த சைந்துற
வேக ரைந்து சிதைந்தபின்
மெய்க லந்தெழு சிந்தை அன்பின்
விருப்பு மீமிசை பொங்கிட
மொய்க டுங்கனல் வெம்ப ரற்புகை
மூளு மத்த முயங்கியே
மைகொள் கண்டர்தம் அன்பர் செல்ல
வருந்தி உந்தினர் மார்பினால்.
[358]
மார்ப முந்தசை நைந்து சிந்தி
வரிந்த என்பு முரிந்திட
நேர்வ ருங்குறி நின்ற சிந்தையின்
நேசம் ஈசனை நேடுநீடு
ஆர்வம் அங்குயிர் கொண்டு கைக்கும்
உடம்ப டங்கவும் ஊன்கெடச்
சேர்வ ரும்பழு வம்பு ரண்டு
புரண்டு சென்றனர் செம்மையோர்.
[359]
அப்பு றம்புரள் கின்ற நீளிடை
அங்கம் எங்கும் அரைந்திடச்
செப்ப ருங்கயி லைச்சி லம்படி
சிந்தை சென்றுறு மாதலால்
மெய்ப்பு றத்தில் உறுப்ப ழிந்தபின்
மெல்ல உந்து முயற்சியுந்
தப்பு றச்செய லின்றி அந்நெறி
தங்கி னார்தமி ழாளியார்.
[360]
அன்ன தன்மையர் கயிலையை
அணைவதற் கருளார்
மன்னு தீந்தமிழ் புவியின்மேற்
பின்னையும் வழுத்த
நன்னெ டும்புனல் தடமும்ஒன்
றுடன்கொடு நடந்தார்
பன்ன கம்புனை பரமரோர்
முனிவராம் படியால்.
[361]
வந்து மற்றவர் மருங்குற
அணைந்துநேர் நின்று
நொந்து நோக்கிமற் றவர்எதிர்
நோக்கிட நுவல்வார்
சிந்தி இவ்வுறுப் பழிந்திட
வருந்திய திறத்தால்
இந்த வெங்கடத் தெய்திய
தென்என இசைத்தார்.
[362]
மாசில் வற்கலை ஆடையும்
மார்பில்முந் நூலுந்
தேசு டைச்சடை மவுலியும்
நீறும்மெய் திகழ
ஆசின் மெய்த்தவ ராகிநின்
றவர்தமை நோக்கிப்
பேச உற்றதோர் உணர்வுற
விளம்புவார் பெரியோர்.
[363]
வண்டு லாங்குழல் மலைமக
ளுடன்வட கயிலை
அண்டர் நாயகர் இருக்கும்அப்
பரிசவர் அடியேன்
கண்டு கும்பிட விருப்பொடுங்
காதலின் அடைந்தேன்
கொண்ட என்குறிப் பிதுமுனி
யேஎனக் கூற.
[364]
கயிலை மால்வரை யாவது
காசினி மருங்கு
பயிலும் மானுடப் பான்மையோர்
அடைவதற் கெளிதோ
அயில்கொள் வேற்படை அமரரும்
அணுகுதற் கரிதால்
வெயில்கொள் வெஞ்சுரத் தென்செய்தீர்
வந்தென விளம்பி.

[365]
மீளும் அத்தனை உமக்கினிக்
கடன்என விளங்கும்
தோளும் ஆகமும் துவளுமுந்
நூல்முனி சொல்ல
ஆளும் நாயகன் கயிலையில்
இருக்கைகண் டல்லால்
மாளும் இவ்வுடல் கொண்டுமீ
ளேன்என மறுத்தார்.
[366]
ஆங்கு மற்றவர் துணிவறிந்
தவர்தமை அறிய
நீங்கு மாதவர் விசும்பிடைக்
கரந்துநீள் மொழியால்
ஓங்கு நாவினுக் கரசனே
எழுந்திர்என் றுரைப்பத்
தீங்கு நீங்கிய யாக்கைகொண்
டெழுந்தொளி திகழ்வார்.
[367]
அண்ண லேஎனை ஆண்டுகொண்
டருளிய அமுதே
விண்ணி லேமறைந் தருள்புரி
வேதநா யகனே
கண்ணி னால்திருக் கயிலையில்
இருந்தநின் கோலம்
நண்ணி நான்தொழ நயந்தருள்
புரிஎனப் பணிந்தார்.
[368]
தொழுதெ ழுந்தநற் றொண்டரை
நோக்கிவிண் தலத்தில்
எழுபெ ருந்திரு வாக்கினால்
இறைவர்இப் பொய்கை
முழுகி நம்மைநீ கயிலையில்
இருந்தஅம் முறைமை
பழுதில் சீர்த்திரு வையாற்றிற்
காண்எனப் பணித்தார்.
[369]
ஏற்றி னார்அருள் தலைமிசைக்
கொண்டெழுந் திறைஞ்சி
வேற்று மாகிவிண் ணாகிநின்
றார்மொழி விரும்பி
ஆற்றல் பெற்றவர் அண்ணலார்
அஞ்செழுத் தோதிப்
பாற்ற டம்புனற் பொய்கையில்
மூழ்கினார் பணியால்.
[370]
ஆதி தேவர்தந் திருவருள்
பெருமையார் அறிவார்
போத மாதவர் பனிவரைப்
பொய்கையில் மூழ்கி
மாதொர் பாகனார் மகிழும்ஐ
யாற்றிலோர் வாவி
மீது தோன்றிவந் தெழுந்தனர்
உலகெலாம் வியப்ப.

[371]
வம்பு லாமலர் வாவியின்
கரையில்வந் தேறி
உம்பர் நாயகர் திருவருட்
பெருமையை உணர்வார்
எம்பி ரான்தருங் கருணைகொல்
இதுஎன இருகண்
பம்பு தாரைநீர் வாவியிற்
படிந்தெழும் படியார்.
[372]
மிடையும் நீள்கொடி வீதிகள்
விளங்கிய ஐயா
றுடைய நாயகர் சேவடி
பணியவந் துறுவார்
அடைய அப்பதி நிற்பவுஞ்
சரிப்பவு மான
புடைஅ மர்ந்ததந் துணையொடும்
பொலிவன கண்டார்.
[373]
பொன்ம லைக்கொடி யுடன்அமர்
வெள்ளியம் பொருப்பில்
தன்மை யாம்படி சத்தியுஞ்
சிவமுமாஞ் சரிதைப்
பன்மை யோனிகள் யாவையும்
பயில்வன பணிந்தே
மன்னு மாதவர் தம்பிரான்
கோயில்முன் வந்தார்.
[374]
காணும் அப்பெருங் கோயிலுங்
கயிலைமால் வரையாய்ப்
பேணு மால்அயன் இந்திரன்
முதற்பெருந் தேவர்
பூணும் அன்பொடு போற்றிசைத்
தெழும்ஒலி பொங்கத்
தாணு மாமறை யாவையுந்
தனித்தனி முழங்க.

[375]
தேவர் தானவர் சித்தர்விச்
சாதரர் இயக்கர்
மேவு மாதவர் முனிவர்கள்
புடையெலாம் மிடையக்
காவி வாள்விழி அரம்பையர்
கானமும் முழவும்
தாவில் ஏழ்கடல் முழக்கினும்
பெருகொலி தழைப்ப.
[376]
கங்கை யேமுதல் தீர்த்தமாங்
கடவுள்மா நதிகள்
மங்க லம்பொலி புனற்பெருந்
தடங்கொடு வணங்க
எங்கும் நீடிய பெருங்கண
நாதர்கள் இறைஞ்சப்
பொங்கி யங்களால் பூதவே
தாளங்கள் போற்ற.
[377]
அந்தண் வெள்ளிமால் வரையிரண்
டாம்என அணைந்தோர்
சிந்தை செய்திடச் செங்கண்மால்
விடைஎதிர் நிற்ப
முந்தை மாதவப் பயன்பெறு
முதன்மையால் மகிழ்ந்தே
நந்தி எம்பிரான் நடுவிடை
யாடிமுன் நணுக.
[378]
வெள்ளி வெற்பின்மேல் மரகதக்
கொடியுடன் விளங்கும்
தெள்ளு பேரொளிப் பவளவெற்
பெனஇடப் பாகம்
கொள்ளு மாமலை யாளுடன்
கூடவீற் றிருந்த
வள்ள லாரைமுன் கண்டனர்
வாக்கின்மன் னவனார்.

[379]
கண்ட ஆனந்தக் கடலினைக்
கண்களால் முகந்து
கொண்டு கைகுவித் தெதிர்விழுந்
தெழுந்துமெய் குலைய
அண்டர் முன்புநின் றாடினார்
பாடினார் அழுதார்
தொண்ட னார்க்கங்கு நிகழ்ந்தன
யார்சொல வல்லார்.
[380]
முன்பு கண்டுகொண் டருளின்ஆர்
அமுதுண்ண மூவா
அன்பு பெற்றவர் அளவிலா
ஆர்வம்முன் பொங்கப்
பொன்பி றங்கிய சடையரைப்
போற்றுதாண் டகங்கள்
இன்பம் ஓங்கிட ஏத்தினார்
எல்லையில் தவத்தோர்.
[381]
ஆய வாறுமற் றவர்மனங்
களிப்புறக் கயிலை
மேய நாதர்தந் துணையொடும்
வீற்றிருந் தருளித்
தூய தொண்டனார் தொழுதெதிர்
நிற்கஅக் கோலம்
சேய தாக்கினார் திருவையா
றமர்ந்தமை திகழ.
[382]
ஐயர் கோலம்அங் களித்தகன்
றிடஅடித் தொண்டர்
மையல் கொண்டுளம் மகிழ்ந்திட
வருந்திமற் றிங்குச்
செய்ய வேணியர் அருளிது
வோஎனத் தெளிந்து
வையம் உய்ந்திடக் கண்டமை
பாடுவார் மகிழ்ந்து.

[383]
மாதர்ப் பிறைக்கண்ணி யானை
மலையான் மகளொடும் என்னும்
கோதறு தண்டமிழ்ச் சொல்லால்
குலவு திருப்பதி கங்கள்
வேத முதல்வர்ஐ யாற்றில்
விரவுஞ் சராசரம் எல்லாங்
காதல் துணையொடுங் கூடக்
கண்டேன் எனப்பாடி நின்றார்.
[384]
கண்டு தொழுது வணங்கிக்
கண்ணுத லார்தமைப் போற்றிக்
கொண்ட திருத்தாண் டகங்கள்
குறுந்தொகை நேரிசை அன்பின்
மண்டு விருத்தங்கள் பாடி
வணங்கித் திருத்தொண்டு செய்தே
அண்டர் பிரான்திரு வையா
றமர்ந்தனர் நாவுக் கரசர்.

[385]
நீடிய அப்பதி நின்று
நெய்த்தான மேமுத லாக
மாடுயர் தானம் பணிந்து
மழபாடி யாரை வணங்கிப்
பாடிய செந்தமிழ் மாலை
பகர்ந்து பணிசெய்து போற்றித்
தேடிய மாலுக் கரியார்
திருப்பூந் துருத்தியைச் சேர்ந்தார்.

[386]
சேர்ந்து விருப்பொடும் புக்குத்
திருநட மாளிகை முன்னர்ச்
சார்ந்து வலங்கொண் டிறைஞ்சித்
தம்பெரு மான்திரு முன்பு
நேர்ந்த பரிவொடுந் தாழ்ந்து
நிறைந்தொழி யாஅன்பு பொங்க
ஆர்ந்தகண் ணீர்மழை தூங்க
அயர்வுறுந் தன்மைய ரானார்.
[387]
திருப்பூந் துருத்தி அமர்ந்த
செஞ்சடை யானைஆன் ஏற்றுப்
பொருப்பூர்ந் தருளும் பிரானைப்
பொய்யிலி யைக்கண்டேன் என்று
விருப்புறு தாண்டகத் தோடு
மேவிய காதல் விளைப்ப
இருப்போந் திருவடிக் கீழ்நாம்
என்னுங் குறுந்தொகை பாடி.
[388]
அங்குறை யுந்தன்மை வேண்டி
நாமடி போற்றுவ தென்று
பொங்கு தமிழ்ச்சொல் விருத்தம்
போற்றிய பாடல் புரிந்து
தங்கித் திருத்தொண்டு செய்வார்
தம்பிரா னார்அருள் பெற்றுத்
திங்களும் ஞாயிறும் தோயும்
திருமடம் அங்கொன்று செய்தார்.
[389]
பல்வகைத் தாண்டகத் தோடும்
பரவுந் தனித்தாண் டகமும்
அல்லல் அறுப்பவர் தானத்
தடைவு திருத்தாண் டகமும்
செல்கதி காட்டிடப் போற்றுந்
திருஅங்க மாலையும் உள்ளிட்
டெல்லையில் பன்மைத் தொகையும்
இயம்பினர் ஏத்தி இருந்தார்.
[390]
பொன்னிவலங் கொண்டதிருப்
பூந்துருத்தி அவர்இருப்பக்
கன்மனத்து வல்அமணர்
தமைவாதில் கட்டழித்துத்
தென்னவன்கூன் நிமிர்த்தருளித்
திருநீற்றின் ஒளிகண்டு
மன்னியசீர்ச் சண்பைநகர்
மறையவனார் வருகின்றார்.

[391]
தீந்தமிழ்நாட் டிடைநின்றும்
எழுந்தருளிச் செழும்பொன்னி
வாய்ந்தவளந் தருநாட்டு
வந்தணைந்தார் வாக்கினுக்கு
வேந்தர்இருந் தமைகேட்டு
விரைந்தவர்பால் செல்வன்எனப்
பூந்துருத்தி வளம்பதியின்
புறம்பணையில் வந்தணைந்தார்.

[392]
சண்பைவருந் தமிழ்விரகர்
எழுந்தருளத் தாங்கேட்டு
மண்பரவும் பெருங்கீர்த்தி
வாகீசர் மனமகிழ்ந்து
கண்பெருகுங் களிகொள்ளக்
கண்டிறைஞ்சுங் காதலினால்
எண்பெருகும் விருப்பெய்த
எழுந்தருளி எதிர்சென்றார்.

[393]
காழியர்கோன் வரும்எல்லை
கலந்தெய்திக் காதலித்தார்
சூழுமிடைந் திடுநெருக்கிற்
காணாமே தொழுதருளி
வாழியவர் தமைத்தாங்கும்
மணிமுத்தின் சிவிகையினைத்
தாழும்உடல் இதுகொண்டு
தாங்குவன்யான் எனத்தரித்தார்.
[394]
வந்தொருவர் அறியாமே
மறைத்தவடி வொடும்புகலி
அந்தணனார் ஏறியெழுந்
தருளிவரும் மணிமுத்தின்
சந்தமணிச் சிவிகையினைத்
தாங்குவா ருடன்தாங்கிச்
சிந்தைகளிப் புறவருவார்
தமையாருந் தெளிந்திலரால்.
[395]
திருஞான மாமுனிவர்
அரசிருந்த பூந்துருத்திக்
கருகாக எழுந்தருளி
எங்குற்றார் அப்பர்என
உருகாநின் றுஉம்அடியேன்
உம்அடிகள் தாங்கிவரும்
பெருவாழ்வு வந்தெய்தப்
பெற்றிங்குற் றேன்என்றார்.
[396]
பிள்ளையார் அதுகேளாப்
பெருகுவிரை வுடன்இழிந்தே
உள்ளமிகு பதைப்பெய்தி
உடையஅர சினைவணங்க
வள்ளலார் வாகீசர்
அவர்வணங்கா முன்வணங்கத்
துள்ளுமான் மறிக்கரத்தார்
தொண்டரெலாந் தொழுதார்த்தார்.
[397]
கழுமலக்கோன் திருநாவுக்
கரசருடன் கலந்தருளிச்
செழுமதியந் தவழ்சோலைப்
பூந்துருத்தித் திருப்பதியின்
மழுவினொடு மான்ஏந்து
திருக்கரத்தார் மலர்த்தாள்கள்
தொழுதுருகி இன்புற்றுத்
துதிசெய்தங் குடனிருந்தார்.
[398]
வல்அமணர் தமைவாதில்
வென்றதுவும் வழுதிபால்
புல்லியகூன் நிமிர்த்ததுவும்
தண்பொருந்தப் புனல்நாட்டில்
எல்லையிலாத் திருநீறு
வளர்த்ததுவும் இருந்தவத்தோர்
சொல்லஅது கேட்டுவந்தார்
தூயபுகழ் வாகீசர்.
[399]
பண்புடைய பாண்டிமா
தேவியார் தம்பரிவும்
நண்புடைய குலச்சிறையார்
பெருமையும்ஞா னத்தலைவர்
எண்பெருக வுரைத்தருள
எல்லையில்சீர் வாகீசர்
மண்குலவு தமிழ்நாடு
காண்பதற்கு மனங்கொண்டார்.

[400]
பிரமபுரத் திருமுனிவர்
பெருந்தொண்டை நன்னாட்டில்
அரனுறையுந் தானங்கள்
அணைந்திறைஞ்சிப் பாடுவதற்
குரனுடைய திருநாவுக்
கரசர் உரை செய்தருளப்
புரமெரித்தார் திருமகனார்
பூந்துருத்தி தொழுதகன்றார்.
[401]
ஆண்டஅர சங்கணர்சீர்
அருள்பெற்றப் பதிநின்றும்
பாண்டிநாட் டெழுந்தருளும்
பான்மையராய்த் தென்திசைபோய்க்
காண்டகைய திருப்புத்தூர்
பணிந்தேத்திக் கதிர்மதியம்
தீண்டுகொடி மதில்மதுரைத்
திருவால வாய்சேர்ந்தார்.
[402]
சென்றணைந்து மதுரையினில்
திருந்தியநூற் சங்கத்துள்
அன்றிருந்து தமிழாராய்ந்
தருளியஅங் கணர்கோயில்
முன்றிலினை வலங்கொண்டு
முன்னிறைஞ்சி உள்புக்கு
வன்றனிமால் விடையாரை
வணங்கிமகிழ் வொடுந்திளைத்தார்.
[403]
எய்தியபே ரானந்த
இன்பத்தின் இடைஅழுந்தி
மொய்திகழுஞ் சடையானை
முளைத்தானை என்றெடுத்துச்
செய்தவத்தோர் தாண்டகச்செந்
தமிழ்பாடிப் புறத்தணைவார்
கைதொழுது பணிந்தேத்தித்
திருவுள்ளங் களிசிறந்தார்.
[404]
சீர்திகழும் பாண்டிமா
தேவியார் திருநீற்றின்
சார்வடைய கூன்நிமிர்ந்த
தென்னவனார் தம்முடனே
பார்பரவுங் குலச்சிறையார்
வாகீசர் தமைப்பணிவுற்
றாரகிலாக் காதல்மிக
அடிபோற்ற அங்கிருந்தார்.
[405]
திருவால வாய்அமர்ந்த
செஞ்சுடரைச் செழும்பொருள்நூல்
தருவானை நேரிசையும்
தாண்டகமும் முதலான
பெருவாய்மைத் தமிழ்பாடிப்
பேணுதிருப் பணிசெய்து
மருவார்தம் புரம்எரித்தார்
பூவணத்தை வந்தடைந்தார்.
[406]
கொடிமாடம் நிலவுதிருப்
பூவணத்துக் கோயிலினுள்
நெடியானுக் கறிவரியார்
நேர்தோன்றக் கண்டிறைஞ்சி
வடிவேறு திரிசூலத்
தாண்டகத்தால் வழுத்திப்போய்ப்
பொடிநீடு திருமேனிப்
புனிதர்பதி பிறபணிவார்.
[407]
தென்னிலங்கை இராவணன்தன்
சிரம்ஈரைந் துந்துணித்த
மன்னவனாம் இராமனுக்கு
வரும்பெரும்பா தகந்தீர்த்த
பிஞ்ஞகனைத் தொழுவதற்கு
நினைந்துபோய்ப் பெருமகிழ்ச்சி
துன்னிமனங் கரைந்துருகத்
தொழுதெழுந்தார் சொல்லரசர்.
[408]
தேவர்தொழுந் தனிமுதலைத்
திருவிரா மேச்சுரத்து
மேவியசங் கரனைஎதிர்
நின்றுவிருப் புறுமொழியால்
பாவுதிரு நேரிசைகள்
முதலான தமிழ்பாடி
நாவரசர் திருத்தொண்டு
நலம்பெருகச் செய்தமர்ந்தார்.
[409]
அங்குறைந்து கண்ணுதலார்
அருள்சூடி அகன்றுபோய்ப்
பொங்குதமிழ்த் திருநாட்டுப்
புறம்பணைசூழ் நெல்வேலி
செங்கண்விடை யார்மன்னுந்
திருக்கானப் பேர்முதலா
எங்குநிகழ் தானங்கள்
எல்லாம்புக் கிறைஞ்சுவார்.
[410]
தொழுதுபல வகையாலும்
சொற்றொடைவண் டமிழ்பாடி
வழுவில்திருப் பணிசெய்து
மனங்கசிவுற் றெப்பொழுதும்
ஒழுகியகண் பொழிபுனலும்
ஓவாது சிவன்தாள்கள்
தழுவியசிந் தையில்உணர்வுந்
தங்கியநீர் மையிற்சரித்தார்.
[411]
தேம்பொழில்சூழ் செந்தமிழ்நாட்
டினில்எங்குஞ் சென்றிறைஞ்சிப்
பாம்பணிவார் தமைப்பணிவார்
பொன்னிநா டதுஅணைந்து
வாம்புனல்சூழ் வளநகர்கள்
பின்னும்போய் வணங்கியே
பூம்புகலூர் வந்தடைந்தார்
பொய்ப்பாசம் போக்குவார்.
[412]
பொய்கைசூழ் பூம்புகலூர்ப்
புனிதர்மலர்த் தாள்வணங்கி
நையுமனப் பரிவோடு
நாள்தோறுந் திருமுன்றில்
கைகலந்த திருத்தொண்டு
செய்துபெருங் காதலுடன்
வைகுநாள் எண்ணிறந்த
வண்டமிழ்மா லைகள்மொழிவார்.
[413]
நின்றதிருத் தாண்டகமும்
நீடுதனித் தாண்டகமும்
மன்றுறைவார் வாழ்பதிகள்
வழுத்துதிருத் தாண்டகமும்
கொன்றைமலர்ச் சடையார்பால்
குறைந்தடைந்த நேரிசையுந்
துன்றுதனி நேரிசையும்
முதலான தொடுத்துரைத்தார்.
[414]
ஆருயிரின் திருவிருத்தம்
தசபுரா ணத்தடைவும்
பார்பரவும் பாவநா
சப்பதிகம் பன்முறையும்
நேர்படநின் றறைகூவுந்
திருப்பதிகம் முதற்பிறவும்
பேரருளின் கடல்அளிக்கும்
பெருமானைப் பாடினார்.
[415]
அந்நிலைமை தனில்ஆண்ட
அரசுபணி செய்யஅவர்
நன்னிலைமை காட்டுவார்
நம்பர்திரு மணிமுன்றில்
தன்னில்வரும் உழவாரம்
நுழைந்தவிடந் தானெங்கும்
பொன்னினொடு நவமணிகள்
பொலிந்திலங்க அருள்செய்தார்.

[416]
செம்பொன்னும் நவமணியும்
சேண்விளங்க ஆங்கெவையும்
உம்பர்பிரான் திருமுன்றில்
உருள்பருக்கை யுடன்ஒக்க
எம்பெருமான் வாகீசர்
உழவாரத் தினில்ஏந்தி
வம்பலர்மென் பூங்கமல
வாவியினில் புகஎறிந்தார்.
[417]
புல்லோடும் கல்லோடும்
பொன்னோடும் மணியோடும்
சொல்லோடும் வேறுபா
டிலாநிலைமை துணிந்திருந்த
நல்லோர்முன் திருப்புகலூர்
நாயகனார் திருவருளால்
வில்லோடு நுதல்மடவார்
விசும்பூடு வந்திழிந்தார்.
[418]
வானகமின் னுக்கொடிகள்
வந்திழிந்தால் எனவந்து
தானநிறை சுருதிகளில்
தகும்அலங்கா ரத்தன்மை
கானஅமு தம்பரப்பும்
கனிவாயில் ஒளிபரப்பப்
பானல்நெடுங் கண்கள்வெளி
பரப்பிஇசை பாடுவார்.
[419]
கற்பகப்பூந் தளிரடிபோங்
காமருசா ரிகைசெய்ய
உற்பலமென் முகிழ்விரல்வட்
டணையோடுங் கைபெயரப்
பொற்புறும்அக் கையின்வழி
பொருகயற்கண் புடைபெயர
அற்புதப்பொற் கொடிநுடங்கி
ஆடுவபோல் ஆடுவார்.
[420]
ஆடுவார் பாடுவார்
அலர்மாரி மேற்பொழிவார்
கூடுவார் போன்றணைவார்
குழல்அவிழ இடைநுடங்க
ஓடுவார் மாரவே
ளுடன்மீள்வர் ஒளிபெருக
நீடுவார் துகிலசைய
நிற்பாரும் ஆயினார்.
[421]
இத்தன்மை அரம்பையர்கள்
எவ்விதமும் செயல்புரிய
அத்தனார் திருவடிக்கீழ்
நினைவகலா அன்புருகும்
மெய்த்தன்மை உணர்வுடைய
விழுத்தவத்து மேலோர்தம்
சித்தநிலை திரியாது
செய்பணியின் தலைநின்றார்.
[422]
இம்மாயப் பவத்தொடக்காம்
இருவினைகள் தமைநோக்கி
உம்மால்இங் கென்னகுறை
உடையேன்யான் திருவாரூர்
அம்மானுக் காளானேன்
அலையேன்மின் நீர்என்று
பொய்ம்மாயப் பெருங்கடலுள்
எனுந்திருத்தாண் டகம்புகன்றார்.
[423]
மாதரவர் மருங்கணைய
வந்தெய்தி மதனவசக்
காதலவர் புரிந்தொழுகுங்
கைதவங்கள் செய்திடவும்
பேதமிலா ஓருணர்விற்
பெரியவரைப் பெயர்விக்க
யாதும்ஒரு செயலில்லா
மையில்இறைஞ்சி எதிரகன்றார்.
[424]
இந்நிலைமை உலகேழும்
எய்தஅறிந் தியல்பேத்த
மன்னியஅன் புறுபத்தி
வடிவான வாகீசர்
மின்னிலவும் சடையார்தம்
மெய்ப்பொருள்தான் எய்தவரும்
அந்நிலைமை அணித்தாகச்
சிலநாள்அங் கமர்ந்திருந்தார்.
[425]
மன்னியஅந் தக்கரணம்
மருவுதலைப் பாட்டினால்
தன்னுடைய சரணான
தமியேனைப் புகலூரன்
என்னையினிச் சேவடிக்கீழ்
இருத்திடும்என் றெழுகின்ற
முன்னுணர்வின் முயற்சியினால்
திருவிருத்தம் பலமொழிந்தார்.
[426]
மண்முதலாம் உலகேத்த
மன்னுதிருத் தாண்டகத்தைப்
புண்ணியா உன்னடிக்கே
போதுகின்றேன் எனப்புகன்று
நண்ணரிய சிவானந்த
ஞானவடி வேயாகி
அண்ணலார் சேவடிக்கீழ்
ஆண்டஅர சமர்ந்திருந்தார்.

[427]
வானவர்கள் மலர்மாரி
மண்நிறைய விண்ணுலகின்
மேனிறைந்த ஐந்துபே
ரியவொலியும் விரிஞ்சன்முதல்
யோனிகளா யினஎல்லாம்
உளநிறைந்த பெருமகிழ்ச்சி
தானிறைந்த சித்திரையிற்
சதயமாந் திருநாளில்.

[428]
அடியனேன் ஆதரவால்
ஆண்டஅர சின்சரிதப்
படியையான் அறிந்தபடி
பகர்ந்தேன்அப் பரமுனிவன்
கடிமலர்மென் சேவடிகள்
கைதொழுது குலச்சிறையார்
முடிவில்புகழ்த் திருத்தொண்டின்
முயற்சியினை மொழிகின்றேன்.
[429]

Back to Top
சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
12.220   குலச்சிறை நாயனார் புராணம்  
பண் -   (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
பன்னு தொல்புகழ்ப் பாண்டிநன் னாட்டிடைச்
செந்நெ லார்வயல் தீங்கரும் பின்னயல்
துன்னு பூகப் புறம்பணை சூழ்ந்தது
மன்னு வண்மையி னார்மண மேற்குடி.

[1]
அப்ப திக்கு முதல்வர்வன் றொண்டர்தாம்
ஒப்ப ரும்பெரு நம்பிஎன் றோதிய
செப்ப ருஞ்சீர்க் குலச்சிறை யார்திண்மை
வைப்பி னால்திருத் தொண்டில் வழாதவர்.


[2]
கார ணங்கண் ணுதற்கன்பர் என்னவே
வார மாகி மகிழ்ந்தவர் தாள்மிசை
ஆரும் அன்பொடு வீழ்ந்தஞ் சலிமுகிழ்த்
தீர நன்மொழி எய்த இசைத்துளார்.

[3]
குறியில் நான்கு குலத்தினர் ஆயினும்
நெறியின் அக்குலம் நீங்கினர் ஆயினும்
அறிவு சங்கரற் கன்பர் எனப்பெறில்
செறிவு றப்பணிந் தேத்திய செய்கையார்.

[4]
உலகர் கொள்ளும் நலத்தினர் ஆயினும்
அலகில் தீமையர் ஆயினும் அம்புலி
இலகு செஞ்சடை யார்அடி யாரெனில்
தலமு றப்பணிந் தேத்துந் தகைமையார்.

[5]
பண்பின் மிக்கார் பலராய் அணையினும்
உண்ப வேண்டி ஒருவர் அணையினும்
எண்பெ ருக்கிய அன்பால் எதிர்கொண்டு
நண்பு கூர்ந்தமு தூட்டும் நலத்தினார்.

[6]
பூதி கோவணம் சாதனத் தாற்பொலிந்
தாதி தேவர்தம் அஞ்செழுத் தாமவை
ஓது நாவணக் கத்தால் உரைப்பவர்
பாதம் நாளும் பரவிய பண்பினார்.

[7]
இன்ன நல்லொழுக் கத்தினார் ஈறில்சீர்த்
தென்ன வன்நெடு மாறற்குச் சீர்திகழ்
மன்னு மந்திரி கட்குமே லாகியார்
ஒன்ன லர்ச்செற் றுறுதிக்கண் நின்றுளார்.

[8]
ஆய செய்கைய ராயவர் ஆறணி
நாய னார்திருப் பாதம் நவின்றுளார்
பாய சீர்புனை பாண்டிமா தேவியார்
மேய தொண்டுக்கு மெய்த்தொண்டர் ஆயினார்.

[9]
புன்ன யத்தரு கந்தர்பொய் நீக்கவும்
தென்னன் நாடு திருநீறு போற்றவும்
மன்னு காழியர் வள்ளலார் பொன்னடி
சென்னி சேர்த்தி மகிழ்ந்த சிறப்பினார்.

[10]
வாதில் தோற்ற அமணரை வன்கழுத்
தீது நீங்கிட ஏற்றுவித் தார்திறம்
யாது போற்றினேன் மேலினி ஏத்துகேன்
வேத நீதி மிழலைக் குறும்பர்தாள்.

[11]

Back to Top
சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
12.230   பெரு மிழலைக் குறும்ப  
பண் -   (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
சூத நெருங்கு குலைத்தெங்கு
பலவு பூகஞ் சூழ்புடைத்தாய்
வீதி தோறும் நீற்றினொளி
விரிய மேவி விளங்குபதி
நீதி வழுவா நெறியினராய்
நிலவுங் குடியால் நெடுநிலத்து
மீது விளங்கும் தொன்மையது
மிழலை நாட்டுப் பெருமிழலை.
[1]
அன்ன தொன்மைத் திருப்பதிக்கண்
அதிபர் மிழலைக் குறும்பனார்
சென்னி மதியம் வைத்தவர்தம்
அடியார்க் கான செய்பணிகள்
இன்ன வண்ணம் என்றவர்தாம்
உரையா முன்னம் எதிரேற்று
முன்னம் உவந்து செய்வாராய்
முதிரும் அறிவின் பயன்கொள்வார்.
[2]
தொண்டர் பலரும் வந்தீண்டி
உண்ணத் தொலையா அமுதூட்டிக்
கொண்டு செல்ல இருநிதியம்
முகந்து கொடுத்துக் குறைந்தடைவார்
வண்டு மருவுங் குழலுமையாள்
கேள்வன் செய்ய தாளென்னும்
புண்ட ரீகம் அகமலரில்
வைத்துப் போற்றும் பொற்பினார்.
[3]
இத்தன் மையராய் நிகழுநாள்
எல்லை இல்லாத் திருத்தொண்டின்
மெய்த்தன் மையினை உலகறிய
விதியால் வணங்கி மெய்யடியார்
சித்தம் நிலவுந் திருத்தொண்டத்
தொகைபா டியநம் பியைப்பணிந்து
நித்தன் அருள்பெற் றவர்பாதம்
நினைக்கும் நியமத் தலைநின்றார்.
[4]
மையார் தடங்கண் பரவையார்
மணவா ளன்தன் மலர்க்கழல்கள்
கையால் தொழுது வாய்வாழ்த்தி
மனத்தால் நினைக்குங் கடப்பாட்டில்
செய்யாள் கோனும் நான்முகனும்
அறியாச் செம்பொன் தாளிணைக்கீழ்
உய்வான் சேர உற்றநெறி
இதுவே என்றன் பினில்உய்த்தார்.
[5]
நாளும் நம்பி ஆரூரர்
நாமம் நவின்ற நலத்தாலே
ஆளும் படியால் அணிமாதி
சித்தி யான அணைந்ததற்பின்
மூளும் காத லுடன்பெருக
முதல்வர் நாமத் தஞ்செழுத்தும்
கேளும் பொருளும் உணர்வுமாம்
பரிசு வாய்ப்பக் கெழுமினார்.
[6]
இன்ன வாறே இவர்ஒழுக
ஏறு கொடிமேல் உயர்த்தவர்தாம்
பொன்னின் கழல்கள் மண்ணின்மேல்
பொருந்த வந்து வழக்குரைத்து
மன்னும் ஓலை அவைமுன்பு
காட்டி ஆண்ட வன்றொண்டர்
சென்னி மதிதோய் மாடமலி
கொடுங்கோள் ஊரைச் சேர்வுற்றார்.
[7]
அஞ்சைக் களத்து நஞ்சுண்ட
அமுதைப் பரவி அணைவுறுவார்
செஞ்சொல் தமிழ்மா லைகள்மொழியத்
தேவர் பெருமான் அருளாலே
மஞ்சில் திகழும் வடகயிலைப்
பொருப்பில் எய்த வரும்வாழ்வு
நெஞ்சில் தெளிய இங்குணந்தார்
நீடு மிழலைக் குறும்பனார்.
[8]
மண்ணில் திகழும் திருநாவல்
ஊரில் வந்த வன்றொண்டர்
நண்ணற் கரிய திருக்கயிலை
நாளை எய்த நான்பிரிந்து
கண்ணிற் கரிய மணிகழிய
வாழ்வார் போல வாழேன்என்
றெண்ணிச் சிவன்தாள் இன்றேசென்
றடைவன் யோகத் தாலென்பார்.
[9]
நாலு கரணங் களும்ஒன்றாய்
நல்ல அறிவு மேற்கொண்டு
காலும் பிரம நாடிவழிக்
கருத்துச் செலுத்தக் கபாலநடு
ஏல வேமுன் பயின்றநெறி
எடுத்த மறைமூ லந்திறப்ப
மூல முதல்வர் திருப்பாதம்
அடைவார் கயிலை முன்னடைந்தார்.
[10]
பயிலச் செறிந்த யோகத்தால் பரவை கேள்வன் பாதமுறக்
கயிலைப் பொருப்பர் அடியடைந்த மிழலைக் குறும்பர் கழல்வணங்கி
மயிலைப் புறங்கொள் மென்சாயல் மகளிர் கிளவி யாழினொடுங்
குயிலைப் பொருவுங் காரைக்கால் அம்மை பெருமை கூறுவாம்.
[11]

Back to Top
சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
12.240   காரைக்கால் அம்மையார் புராணம்  
பண் -   (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
மானமிகு தருமத்தின்
வழிநின்று வாய்மையினில்
ஊனமில்சீர்ப் பெருவணிகர்
குடிதுவன்றி ஓங்குபதி
கூனல்வளை திரைசுமந்து
கொண்டேறி மண்டுகழிக்
கானல்மிசை உலவுவளம்
பெருகுதிருக் காரைக்கால்.
[1]
வங்கமலி கடற்காரைக்
காலின்கண் வாழ்வணிகர்
தங்கள்குலத் தலைவனார்
தனதத்த னார்தவத்தால்
அங்கவர்பால் திருமடந்தை
அவதரித்தாள் எனவந்து
பொங்கியபே ரழகுமிகப்
புனிதவதி யார்பிறந்தார்.
[2]
வணிகர்பெருங் குலம்விளங்க
வந்துபிறந் தருளியபின்
அணிகிளர்மெல் லடிதளர்வுற்று
அசையுநடைப் பருவத்தே
பணியணிவார் கழற்கடிமை
பழகிவரும் பாங்குபெறத்
தணிவில்பெரு மனக்காதல்
ததும்பவரும் மொழிபயின்றார்.
[3]
பல்பெருநற் கிளைஉவப்பப்
பயில்பருவச் சிறப்பெல்லாம்
செல்வமிகு தந்தையார்
திருப்பெருகுஞ் செயல்புரிய
மல்குபெரும் பாராட்டின்
வளர்கின்றார் விடையவர்பால்
அல்கியஅன் புடன்அழகின்
கொழுந்தெழுவ தெனவளர்வார்.
[4]
வண்டல்பயில் வனஎல்லாம்
வளர்மதியம் புனைந்தசடை
அண்டர்பிரான் திருவார்த்தை
அணையவரு வனபயின்று
தொண்டர்வரின் தொழுதுதா
தியர்போற்றத் துணைமுலைகள்
கொண்டுநுசுப் பொதுங்குபதங்
கொள்கையினிற் குறுகினார்.
[5]
நல்லவென உறுப்புநூ
லவர்உரைக்கும் நலம்நிரம்பி
மல்குபெரு வனப்புமீக்
கூரவரு மாட்சியினால்
இல்லிகவாப் பருவத்தில்
இவர்கள்மர பினுக்கேற்குந்
தொல்குலத்து வணிகர்மகள்
பேசுதற்குத் தொடங்குவார்.
[6]
நீடியசீர்க் கடல்நாகை
நிதிபதியென் றுலகின்கண்
பாடுபெறு புகழ்வணிகன்
பயந்தகுல மைந்தனுக்குத்
தேடவருந் திருமரபில்
சேயிழையை மகட்பேச
மாடமலி காரைக்கால்
வள நகரின் வரவிட்டார்.
[7]
வந்தமூ தறிவோர்கள்
மணங்குறித்தம் மனைபுகுந்து
தந்தையாந் தனதத்தன்
தனைநேர்ந்து நீபயந்த
பைந்தொடியை நிதிபதிமைந்
தன்பரம தத்தனுக்கு
முந்தைமர பினுக்கேற்கும்
முறைமைமணம் புரிகென்றார்.
[8]
மற்றவனும் முறைமையினால்
மணம்இசைந்து செலவிடச் சென்
றுற்றவர்கள் உரைகேட்ட
நிதிபதியும் உயர்சிறப்புப்
பெற்றனன் போல் உவந்துதனிப்
பெருமகற்குத் திருமலியுஞ்
சுற்றமுடன் களிகூர்ந்து
வதுவைவினைத் தொழில்பூண்டான்.
[9]
மணமிசைந்த நாளோலை
செலவிட்டு மங்கலநாள்
அணையவது வைத்தொழில்கள்
ஆனவெலாம் அமைவித்தே
இணரலங்கல் மைந்தனையும்
மணவணியின் எழில்விளக்கிப்
பணைமுரசம் எழுந்தார்ப்பக்
காரைக்கால் பதிபுகுந்தார்.
[10]
அளிமிடைதார்த் தனதத்தன்
அணிமாடத் துள்புகுந்து
தெளிதருநூல் விதிவழியே
செயல்முறைமை செய்தமைத்துத்
தளிரடிமென் நகைமயிலைத்
தாதவிழ்தார்க் காளைக்குக்
களிமகிழ்சுற் றம்போற்றக்
கலியாணஞ் செய்தார்கள்.
[11]
மங்கலமா மணவினைகள்
முடித்தியல்பின் வைகுநாள்
தங்கள்குடிக் கொருபுதல்வி
ஆதலினால் தனதத்தன்
பொங்கொலிநீர் நாகையினிற்
போகாமே கணவனுடன்
அங்கண்அமர்ந் தினிதிருக்க
அணிமாடம் மருங்கமைத்தான்.
[12]
மகட்கொடையின் மகிழ்சிறக்கும்
வரம்பில்தனங் கொடுத்ததற்பின்
நிகர்ப்பரிய பெருஞ்சிறப்பில்
நிதிபதிதன் குலமகனும்
தகைப்பில்பெருங் காதலினால்
தங்குமனை வளம்பெருக்கி
மிகப்புரியுங் கொள்கையினில்
மேம்படுதல் மேவினான்.
[13]
ஆங்கவன்தன் இல்வாழ்க்கை
அருந்துணையாய் அமர்கின்ற
பூங்குழலார் அவர்தாமும்
பொருவிடையார் திருவடிக்கீழ்
ஓங்கியஅன் புறுகாதல்
ஒழிவின்றி மிகப்பெருகப்
பாங்கில்வரு மனையறத்தின்
பண்புவழா மையில்பயில்வார்.
[14]
நம்பரடி யார்அணைந்தால்
நல்லதிரு அமுதளித்தும்
செம்பொன்னும் நவமணியுஞ்
செழுந்துகிலும் முதலான
தம்பரிவி னாலவர்க்குத்
தகுதியின்வேண் டுவகொடுத்தும்
உம்பர்பிரான் திருவடிக்கீழ்
உணர்வுமிக ஒழுகுநாள்.
[15]
பாங்குடைய நெறியின்கண்
பயில்பரம தத்தனுக்கு
மாங்கனிகள் ஓரிரண்டு
வந்தணைந்தார் சிலர்கொடுப்ப
ஆங்கவைதான் முன்வாங்கி
அவர்வேண்டுங் குறையளித்தே
ஈங்கிவற்றை இல்லத்துக்
கொடுக்கவென இயம்பினான்.
[16]
கணவன்தான் வரவிடுத்த
கனியிரண்டுங் கைக்கொண்டு
மணமலியும் மலர்க்கூந்தல்
மாதரார் வைத்ததற்பின்
பணஅரவம் புனைந்தருளும்
பரமனார் திருத்தொண்டர்
உணவின்மிகு வேட்கையினால்
ஒருவர்மனை உட்புகுந்தார்.
[17]
வேதங்கள் மொழிந்தபிரான்
மெய்த்தொண்டர் நிலைகண்டு
நாதன்தன் அடியாரைப்
பசிதீர்ப்பேன் எனநண்ணிப்
பாதங்கள் விளக்கநீர்
முன்னளித்துப் பரிகலம்வைத்
தேதந்தீர் நல்விருந்தா
இன்னடிசில் ஊட்டுவார்.
[18]
கறிஅமுதங் குதவாதே
திருஅமுது கைகூட
வெறிமலர்மேல் திருவனையார்
விடையவன்தன் அடியாரே
பெறலரிய விருந்தானால்
பேறிதன்மேல் இல்லையெனும்
அறிவினராய் அவரமுது
செய்வதனுக் காதரிப்பார்.
[19]
இல்லாளன் வைக்கவெனத்
தம்பக்கல் முன்னிருந்த
நல்லநறு மாங்கனிகள்
இரண்டினில்ஒன் றைக்கொண்டு
வல்விரைந்து வந்தணைந்து
படைத்துமன மகிழ்ச்சியினால்
அல்லல்தீர்ப் பவர்அடியார்
தமையமுது செய்வித்தார்.
[20]
மூப்புறும்அத் தளர்வாலும்
முதிர்ந்துமுடு கியவேட்கைத்
தீப்பசியின் நிலையாலும்
அயர்ந்தணைந்த திருத்தொண்டர்
வாய்ப்புறுமென் சுவையடிசில்
மாங்கனியோ டினிதருந்திப்
பூப்பயில்மென் குழல்மடவார்
செயலுவந்து போயினார்.
[21]
மற்றவர்தாம் போயினபின்
மனைப்பதியா கியவணிகன்
உற்றபெரும் பகலின்கண்
ஓங்கியபேர் இல்எய்திப்
பொற்புறமுன் நீராடிப்
புகுந்தடிசில் புரிந்தயிலக்
கற்புடைய மனையாருங்
கடப்பாட்டில் ஊட்டுவார்.
[22]
இன்னடிசில் கறிகளுடன்
எய்துமுறை இட்டதற்பின்
மன்னியசீர்க் கணவன்தான்
மனையிடைமுன் வைப்பித்த
நன்மதுர மாங்கனியில்
இருந்ததனை நறுங்கூந்தல்
அன்னமனை யார்தாமும்
கொடுவந்து கலத்தளித்தார்.
[23]
மனைவியார் தாம்படைத்த
மதுரமிக வாய்ந்தகனி
தனைநுகர்ந்த இனியசுவை
ஆராமைத் தார்வணிகன்
இனையதொரு பழம்இன்னும்
உளததனை இடுகவென
அனையதுதாங் கொண்டுவர
அணைவார்போல் அங்ககன்றார்.
[24]
அம்மருங்கு நின்றயர்வார்
அருங்கனிக்கங் கென்செய்வார்
மெய்ம்மறந்து நினைந்துற்ற
விடத்துதவும் விடையவர்தாள்
தம்மனங்கொண் டுணர்தலுமே
அவரருளால் தாழ்குழலார்
கைம்மருங்கு வந்திருந்த
ததிமதுரக் கனியொன்று.
[25]
மற்றதனைக் கொடுவந்து
மகிழ்ந்திடலும் அயின்றதனில்
உற்றசுவை அமுதினுமேற்
படவுளதா யிடஇதுதான்
முன்தருமாங் கனியன்று
மூவுலகிற் பெறற்கரிதால்
பெற்றதுவே றெங்கென்று
பெய்வளையார் தமைக்கேட்டான்.
[26]
அவ்வுரைகேட் டலும்மடவார்
அருளுடையார் அளித்தருளும்
செவ்வியபேர் அருள்விளம்புந்
திறமன்றென் றுரைசெய்யார்
கைவருகற் புடைநெறியால்
கணவன்உரை காவாமை
மெய்வழியன் றெனவிளம்பல்
விடமாட்டார் விதிர்ப்புறுவார்.
[27]
செய்தபடி சொல்லுவதே
கடனென்னுஞ் சீலத்தால்
மைதழையுங் கண்டர்சே
வடிகள்மனத் துறவணங்கி
எய்தவருங் கனியளித்தார்
யார்என்னுங் கணவனுக்கு
மொய்தருபூங் குழல்மடவார்
புகுந்தபடி தனைமொழிந்தார்.
[28]
ஈசனருள் எனக்கேட்ட
இல்இறைவன் அதுதெளியான்
வாசமலர்த் திருவனையார்
தமைநோக்கி மற்றிதுதான்
தேசுடைய சடைப்பெருமான்
திருவருளேல் இன்னமும்ஓர்
ஆசில்கனி அவனருளால்
அழைத்தளிப்பாய் எனமொழிந்தான்.
[29]
பாங்ககன்று மனைவியார்
பணியணிவார் தமைப்பரவி
ஈங்கிதளித் தருளீரேல்
என்னுரைபொய் யாம்என்ன
மாங்கனியொன் றருளால்வந்
தெய்துதலும் மற்றதனை
ஆங்கவன்கைக் கொடுத்தலுமே
அதிசயித்து வாங்கினான்.
[30]
வணிகனுந் தன்கைப் புக்க
மாங்கனி பின்னைக் காணான்
தணிவரும் பயமேற் கொள்ள
உள்ளமுந் தடுமா றெய்தி
அணிகுழல் அவரை வேறோர்
அணங்கெனக் கருதி நீங்குந்
துணிவுகொண் டெவர்க்குஞ் சொல்லான்
தொடர்வின்றி ஒழுகு நாளில்.
[31]
விடுவதே எண்ண மாக மேவிய
முயற்சி செய்வான்
படுதிரைப் பரவை மீது படர்கலங்
கொண்டு போகி
நெடுநிதி கொணர்வேன் என்ன
நிரந்தபல் கிளைஞ ராகும்
வடுவில்சீர் வணிக மாக்கள்
மரக்கலஞ் சமைப்பித் தார்கள்.
[32]
கலஞ்சமைத் ததற்கு வேண்டும்
கம்மிய ருடனே செல்லும்
புலங்களில் விரும்பும் பண்டம்
பொருந்துவ நிரம்ப ஏற்றிச்
சலந்தரு கடவுட் போற்றித்
தலைமையாம் நாய்கன் தானும்
நலந்தரு நாளில் ஏறி
நளிர்திரைக் கடல்மேற் போனான்.
[33]
கடல்மிசை வங்கம் ஓட்டிக்
கருதிய தேயந் தன்னில்
அடைவுறச் சென்று சேர்ந்தங்
களவில்பல் வளங்கள் முற்றி
இடைசில நாள்கள் நீங்க
மீண்டும்அக் கலத்தில் ஏறிப்
படர்புனற் கன்னி நாட்டோர்
பட்டினம் மருங்கு சார்ந்தான்.
[34]
அப்பதி தன்னில் எய்தி
அலகில்பல் பொருள்கள் ஆக்கும்
ஒப்பில்மா நிதியம் எல்லாம்
ஒருவழிப் பெருக உய்த்து
மெய்ப்புகழ் விளங்கும் அவ்வூர்
விரும்பவோர் வணிகன் பெற்ற
செப்பருங் கன்னி தன்னைத்
திருமலி வதுவை செய்தான்.
[35]
பெறலருந் திருவி னாளைப்
பெருமணம் புணர்ந்து முன்னை
அறலியல் நறுமென் கூந்தல்
அணங்கனார் திறத்தில் அற்றம்
புறமொரு வெளியு றாமற்
பொதிந்தசிந் தனையி னோடு
முறைமையின் வழாமை வைகி
முகமலர்ந் தொழுகு நாளில்.
[36]
முருகலர் சோலை மூதூர்
அதன்முதல் வணிக ரோடும்
இருநிதிக் கிழவன் என்ன
எய்திய திருவின் மிக்குப்
பொருகடற் கலங்கள் போக்கும்
புகழினான் மனைவி தன்பால்
பெருகொளி விளக்குப் போலோர்
பெண்கொடி அரிதிற் பெற்றான்.
[37]
மடமகள் தன்னைப் பெற்று
மங்கலம் பேணித் தான்முன்
புடனுறை வஞ்சி நீத்த
ஒருபெரு மனைவி யாரைத்
தொடர்வற நினைந்து தெய்வத்
தொழுகுலம் என்றே கொண்டு
கடனமைத் தவர்தம் நாமங்
காதல்செய் மகவை இட்டான்.
[38]
இன்னிலை இவன்இங் கெய்தி
இருந்தனன் இப்பால் நீடும்
கன்னிமா மதில்சூழ் மாடக்
காரைக்கால் வணிக னான
தன்னிகர் கடந்த செல்வத்
தனதத்தன் மகளார் தாமும்
மன்னிய கற்பி னோடு
மனையறம் புரிந்து வைக.
[39]
விளைவளம் பெருக்க வங்க
மீதுபோம் பரம தத்தன்
வளர்புகழ்ப் பாண்டி நாட்டோர்
மாநகர் தன்னில் மன்னி
அளவில்மா நிதியம் ஆக்கி
அமர்ந்தினி திருந்தான் என்று
கிளரொளி மணிக்கொம் பன்னார்
கிளைஞர்தாங் கேட்டா ரன்றே.
[40]
அம்மொழி கேட்ட போதே
அணங்கனார் சுற்றத் தாரும்
தம்முறு கிளைஞர்ப் போக்கி
அவன்நிலை தாமும் கேட்டு
மம்மர்கொள் மனத்த ராகி
மற்றவன் இருந்த பாங்கர்க்
கொம்மைவெம் முலையி னாளைக்
கொண்டுபோய் விடுவ தென்றார்.
[41]
மாமணிச் சிவிகை தன்னில்
மடநடை மயில்அன் னாரைத்
தாமரைத் தவிசில் வைகுந்
தனித்திரு என்ன ஏற்றிக்
காமரு கழனி வீழ்த்துக்
காதல்செய் சுற்றத் தாரும்
தேமொழி யவருஞ் சூழச்
சேணிடைக் கழிந்து சென்றார்.
[42]
சிலபகல் கடந்து சென்று
செந்தமிழ்த் திருநா டெய்தி
மலர்புகழ்ப் பரம தத்தன்
மாநகர் மருங்கு வந்து
குலமுதல் மனைவி யாரைக்
கொண்டுவந் தணைந்த தன்மை
தொலைவில்சீர்க் கணவ னுக்குச்
சொல்லிமுன் செல்ல விட்டார்.
[43]
வந்தவர் அணைந்த மாற்றங்
கேட்டலும் வணிகன் தானும்
சிந்தையில் அச்சம் எய்திச்
செழுமணம் பின்பு செய்த
பைந்தொடி தனையுங் கொண்டு
பயந்தபெண் மகவி னோடும்
முந்துறச் செல்வேன் என்று
மொய்குழ லவர்பால் வந்தான்.
[44]
தானும்அம் மனைவி யோடும்
தளர்நடை மகவி னோடும்
மானிளம் பிணைபோல் நின்ற
மனைவியார் அடியில் தாழ்ந்தே
யான்உம தருளால் வாழ்வேன்
இவ்விளங் குழவி தானும்
பான்மையால் உமது நாமம்
என்றுமுன் பணிந்து வீழ்ந்தான்.
[45]
கணவன்தான் வணங்கக் கண்ட
காமர்பூங்கொடிய னாரும்
அணைவுறுஞ் சுற்றத் தார்பால்
அச்சமோ டொதுங்கி நிற்ப
உணர்வுறு கிளைஞர் வெள்கி
உன்திரு மனைவி தன்னை
மணமலி தாரி னாய்நீ
வணங்குவ தென்கொல் என்றார்.
[46]
மற்றவர் தம்மை நோக்கி
மானுடம் இவர்தாம் அல்லர்
நற்பெருந் தெய்வ மாதல்
நானறிந் தகன்ற பின்பு

பெற்றஇம் மகவு தன்னைப்
பேரிட்டேன் ஆத லாலே பொற்பதம் பணிந்தேன் நீரும்
போற்றுதல் செய்மின் என்றான்.

[47]
என்றபின் சுற்றத் தாரும்
இதுவென்கொல் என்று நின்றார்
மன்றலங் குழலி னாரும்
வணிகன்வாய் மாற்றங் கேளாக்
கொன்றைவார் சடையி னார்தங்
குரைகழல் போற்றிச் சிந்தை
ஒன்றிய நோக்கில் மிக்க
உணர்வுகொண் டுரைசெய் கின்றார்.

[48]
ஈங்கிவன் குறித்த கொள்கை
இதுஇனி இவனுக் காகத்
தாங்கிய வனப்பு நின்ற
தசைப்பொதி கழித்திங் குன்பால்
ஆங்குநின் தாள்கள் போற்றும்
பேய்வடி வடியே னுக்குப்
பாங்குற வேண்டும் என்று
பரமர்தாள் பரவி நின்றார்.
[49]
ஆனஅப் பொழுது மன்றுள்
ஆடுவார் அருளி னாலே
மேனெறி உணர்வு கூர
வேண்டிற்றே பெறுவார் மெய்யில்
ஊனடை வனப்பை எல்லாம்
உதறிஎற் புடம்பே யாக
வானமும் மண்ணும் எல்லாம்
வணங்குபேய் வடிவ மானார்.
[50]
மலர்மழை பொழிந்த தெங்கும்
வானதுந் துபியின் நாதம்
உலகெலாம் நிறைந்து விம்ம
உம்பரும் முனிவர் தாமும்
குலவினர் கணங்கள் எல்லாம்
குணலையிட் டனமுன் னின்ற
தொலைவில்பல் சுற்றத் தாருந்
தொழுதஞ்சி அகன்று போனார்.
[51]
உற்பவித் தெழுந்த ஞானத்
தொருமையின் உமைகோன் தன்னை
அற்புதத் திருவந் தாதி
அப்பொழு தருளிச் செய்வார்
பொற்புடைச் செய்ய பாத
புண்டரீ கங்கள் போற்றும்
நற்கணத் தினில்ஒன் றானேன்
நான்என்று நயந்து பாடி.
[52]
ஆய்ந்தசீர் இரட்டை மாலை
அந்தாதி யெடுத்துப் பாடி
ஏய்ந்தபேர் உணர்வு பொங்க
எயிலொரு மூன்றும் முன்னாள்
காய்ந்தவர் இருந்த வெள்ளிக்
கைலைமால் வரையை நண்ண
வாய்ந்தபேர் அருள்முன் கூர
வழிபடும் வழியால் வந்தார்.
[53]
கண்டவர் வியப்புற் றஞ்சிக்
கையகன் றோடு வார்கள்
கொண்டதோர் வேடத் தன்மை
உள்ளவா கூறக் கேட்டே
அண்டர்நா யகனார் என்னை
அறிவரேல் அறியா வாய்மை
எண்டிசை மாக்க ளுக்கியான்
எவ்வுரு வாயென் என்பார்.
[54]
வடதிசைத் தேசம் எல்லாம்
மனத்தினும் கடிதிற் சென்று
தொடையவிழ் இதழி மாலைச்
சூலபா ணியனார் மேவும்
படரொளிக் கயிலை வெற்பிற்
பாங்கணைந் தாங்குக் காலின்
நடையினைத் தவிர்ந்து பார்மேல்
தலையினால் நடந்து சென்றார்.
[55]
தலையினால் நடந்து சென்று
சங்கரன் இருந்த வெள்ளி
மலையின்மேல் ஏறும் போது
மகிழ்ச்சியால் அன்பு பொங்கக்
கலையிளந் திங்கட் கண்ணிக்
கண்ணுதல் ஒருபா கத்துச்
சிலைநுதல் இமைய வல்லி
திருக்கண்நோக் குற்ற தன்றே.

[56]
அம்பிகை திருவுள் ளத்தின்
அதிசயித் தருளித் தாழ்ந்து
தம்பெரு மானை நோக்கித்
தலையினால் நடந்திங் கேறும்
எம்பெரு மான்ஓர் எற்பின்
யாக்கைஅன் பென்னே என்ன
நம்பெரு மாட்டிக் கங்கு
நாயகன் அருளிச் செய்வான்.
[57]
வருமிவள் நம்மைப் பேணும்
அம்மைகாண் உமையே மற்றிப்
பெருமைசேர் வடிவம் வேண்டிப்
பெற்றனள் என்று பின்றை
அருகுவந் தணைய நோக்கி
அம்மையே என்னுஞ் செம்மை
ஒருமொழி உலகம் எல்லாம்
உய்யவே அருளிச் செய்தார்.
[58]
அங்கணன் அம்மை யேஎன்
றருள்செய அப்பா என்று
பங்கயச் செம்பொற் பாதம்
பணிந்துவீழ்ந் தெழுந்தார் தம்மைச்
சங்கவெண் குழையி னாருந் தா
மெதிர் நோக்கி நம்பால்
இங்குவேண் டுவதென் என்ன
இறைஞ்சிநின் றியம்பு கின்றார்.
[59]
இறவாத இன்ப அன்பு
வேண்டிப்பின் வேண்டு கின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும்
பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும்
வேண்டும்நான் மகிழ்ந்து பாடி
அறவாநீ ஆடும் போதுன்
அடியின்கீழ் இருக்க என்றார்.
[60]
கூடுமா றருள்கொ டுத்துக்
குலவுதென் திசையில் என்றும்
நீடுவாழ் பழன மூதூர்
நிலவிய ஆலங் காட்டில்
ஆடுமா நடமும் நீகண்
டானந்தஞ் சேர்ந்தெப் போதும்
பாடுவாய் நம்மை என்றான்
பரவுவார் பற்றாய் நின்றான்.
[61]
அப்பரி சருளப் பெற்ற
அம்மையுஞ் செம்மை வேத
மெய்ப்பொரு ளானார் தம்மை
விடைகொண்டு வணங்கிப் போந்து
செப்பரும் பெருமை அன்பால்
திகழ்திரு வாலங் காடாம்
நற்பதி தலையி னாலே
நடந்துபுக் கடைந்தார் அன்றே.
[62]
ஆலங்கா டதனில் அண்ட
முறநிமிர்ந் தாடு கின்ற
கோலங்காண் பொழுது கொங்கை
திரங்கிஎன் றெடுத்துத் தங்கு
மூலங்காண் பரியார் தம்மை
மூத்தநற் பதிகம் பாடி
ஞாலங்கா தலித்துப் போற்றும்
நடம்போற்றி நண்ணு நாளில்.
[63]
மட்டவிழ்கொன் றையினார்தந்
திருக்கூத்து முன்வணங்கும்
இட்டமிகு பெருங்காதல்
எழுந்தோங்க வியப்பெய்தி
எட்டிஇல வம்ஈகை
எனஎடுத்துத் திருப்பதிகங்
கொட்டமுழ வங்குழகன்
ஆடுமெனப் பாடினார்.
[64]
மடுத்தபுனல் வேணியினார்
அம்மையென மதுரமொழி
கொடுத்தருளப் பெற்றாரைக்
குலவியதாண் டவத்திலவர்
எடுத்தருளுஞ் சேவடிக்கீழ்
என்றுமிருக் கின்றாரை
அடுத்தபெருஞ் சீர்பரவல்
ஆரளவா யினதம்மா.
[65]
ஆதியோ டந்த மில்லான்
அருள்நடம் ஆடும் போது
கீதமுன் பாடும் அம்மை
கிளரொளி மலர்த்தாள் போற்றிச்
சீதநீர் வயல்சூழ் திங்க
ளூரில்அப் பூதி யாராம்
போதமா முனிவர் செய்த
திருத்தொண்டு புகலல் உற்றேன்.
[66]

Back to Top
சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
12.250   அப்பூதி அடிகள் நாயனார்  
பண் -   (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
தாண்டவம் புரிய வல்ல
தம்பிரா னாருக் கன்பர்
ஈண்டிய புகழின் பாலார்
எல்லையில் தவத்தின் மிக்கார்
ஆண்டசீர் அரசின் பாதம்
அடைந்தவர் அறியா முன்னே
காண்டகு காதல் கூரக்
கலந்தஅன் பினராய் உள்ளார்.
[1]
களவுபொய் காமம் கோபம்
முதலிய குற்றங் காய்ந்தார்
வளமிகு மனையின் வாழ்க்கை
நிலையினார் மனைப்பால் உள்ள
அளவைகள் நிறைகோல் மக்கள்
ஆவொடு மேதி மற்றும்
உளவெலாம் அரசின் நாமஞ்
சாற்றும்அவ் வொழுகல் ஆற்றார்.
[2]
வடிவுதாங் காணா ராயும்
மன்னுசீர் வாக்கின் வேந்தர்
அடிமையுந் தம்பி ரானார்
அருளுங்கேட் டவர்நா மத்தால்
படிநிகழ் மடங்கள் தண்ணீர்ப்
பந்தர்கள் முதலா யுள்ள
முடிவிலா அறங்கள் செய்து
முறைமையால் வாழும் நாளில்.
[3]
பொருப்பரையன் மடப்பிடியி
னுடன்புணருஞ் சிவக்களிற்றின்
திருப்பழனம் பணிந்துபணி
செய்திருநா வுக்கரசர்
ஒருப்படுகா தலிற்பிறவும்
உடையவர்தம் பதிவணங்கும்
விருப்பினொடுந் திங்களூர்
மருங்குவழி மேவுவார்.
[4]
அளவில்சனஞ் செலவொழியா
வழிக்கரையில் அருளுடையார்
உளமனைய தண்ணளித்தாய்
உறுவேனில் பரிவகற்றிக்
குளநிறைந்த நீர்த்தடம்போல்
குளிர்தூங்கும் பரப்பினதாய்
வளமருவும் நிழல்தருதண்
ணீர்ப்பந்தர் வந்தணைந்தார்.
[5]
வந்தணைந்த வாகீசர்
மந்தமா ருதசீதப்
பந்தருடன் அமுதமாந்
தண்ணீரும் பார்த்தருளிச்
சிந்தைவியப் புறவருவார்
திருநாவுக் கரசெனும்பேர்
சந்தமுற வரைந்ததனை
எம்மருங்குந் தாங்கண்டார்.
[6]
இப்பந்தர் இப்பெயரிட்
டிங்கமைத்தார் யார்என்றார்க்
கப்பந்தர் அறிந்தார்கள்
ஆண்டஅர செனும்பெயரால்
செப்பருஞ்சீர் அப்பூதி
அடிகளார் செய்தமைத்தார்
தப்பின்றி எங்குமுள
சாலைகுளங் காவென்றார்.
[7]
என்றுரைக்க அரசுகேட்
டிதற்கென்னோ கருத்தென்று
நின்றவரை நோக்கிஅவர்
எவ்விடத்தார் எனவினவத்
துன்றியநூல் மார்பரும்இத்
தொல்பதியார் மனையின்கண்
சென்றனர்இப் பொழுததுவும்
சேய்த்தன்று நணித்தென்றார்.
[8]
அங்ககன்று முனிவரும்போய்
அப்பூதி அடிகளார்
தங்குமனைக் கடைத்தலைமுன்
சார்வாக உள்ளிருந்த
திங்களூர் மறைத்தலைவர்
செழுங்கடையில் வந்தடைந்தார்
நங்கள்பிரான் தமர்ஒருவர்
எனக்கேட்டு நண்ணினார்.
[9]
கடிதணைந்து வாகீசர்
கழல்பணிய மற்றவர்தம்
அடிபணியா முன்பணியும்
அரசின்எதிர் அந்தணனார்
முடிவில்தவஞ் செய்தேன்கொல்
முன்பொழியுங் கருணைபுரி
வடிவுடையீர் என்மனையில்
வந்தருளிற் றென்என்றார்.
[10]
ஒருகுன்ற வில்லாரைத்
திருப்பழனத் துள்ளிறைஞ்சி
வருகின்றோம் வழிக்கரையில்
நீர்வைத்த வாய்ந்தவளம்
தருகின்ற நிழல்தண்ணீர்ப்
பந்தருங்கண் டத்தகைமை
புரிகின்ற அறம்பிறவும்
கேட்டணைந்தோம் எனப்புகல்வார்.
[11]
ஆறணியுஞ் சடைமுடியார்
அடியார்க்கு நீர்வைத்த
ஈறில்பெருந் தண்ணீர்ப்பந்
தரில்நும்பேர் எழுதாதே
வேறொருபேர் முன்னெழுத
வேண்டியகா ரணம்என்கொல்
கூறும்என எதிர்மொழிந்தார்
கோதில்மொழிக் கொற்றவனார்.
[12]
நின்றமறை யோர்கேளா
நிலையழிந்த சிந்தையராய்
நன்றருளிச் செய்திலீர்
நாணில்அமண் பதகருடன்
ஒன்றியமன் னவன்சூட்சி
திருத்தொண்டின் உறைப்பாலே
வென்றவர்தந் திருப்பேரோ
வேறொருபேர் எனவெகுள்வார்.
[13]
நம்மையுடை யவர்கழற்கீழ்
நயந்ததிருத் தொண்டாலே
இம்மையிலும் பிழைப்பதென
என்போல்வா ருந்தெளியச்
செம்மைபுரி திருநாவுக்
கரசர்திருப் பெயரெழுத
வெம்மைமொழி யான்கேட்க
விளம்பினீர் எனவிளம்பி.
[14]
பொங்குகடல் கல்மிதப்பில்
போந்தேறும் அவர்பெருமை
அங்கணர்தம் புவனத்தில்
அறியாதார் யாருளரே
மங்கலமாந் திருவேடத்
துடன்நின்றிவ் வகைமொழிந்தீர்
எங்குறைவீர் நீர்தாம்யார்
இயம்பும்என இயம்பினார்.
[15]
திருமறையோர் அதுமொழியத்
திருநாவுக் கரசர்அவர்
பெருமையறிந் துரைசெய்வார்
பிறதுறையி னின்றேற
அருளுபெருஞ் சூலையினால்
ஆட்கொள்ள அடைந்துய்ந்த
தெருளும்உணர் வில்லாத
சிறுமையேன் யான்என்றார்.
[16]
அரசறிய உரைசெய்ய
அப்பூதி அடிகள்தாம்
கரகமல மிசைகுவியக்
கண்ணருவி பொழிந்திழிய
உரைகுழறி உடம்பெல்லாம்
உரோமபுள கம்பொலியத்
தரையின்மிசை வீழ்ந்தவர்தஞ்
சரணகம லம்பூண்டார்.
[17]
மற்றவரை எதிர்வணங்கி
வாகீசர் எடுத்தருள
அற்றவர்கள் அருநிதியம்
பெற்றார்போல் அருமறையோர்
முற்றவுளங் களிகூர
முன்னின்று கூத்தாடி
உற்றவிருப் புடன்சூழ
ஓடினார் பாடினார்.
[18]
மூண்டபெரு மகிழ்ச்சியினால்
முன்செய்வ தறியாதே
ஈண்டமனை அகத்தெய்தி
இல்லவர்க்கும் மக்களுக்கும்
ஆண்டஅர செழுந்தருளும்
ஓகைஉரைத் தார்வமுறப்
பூண்டபெருஞ் சுற்றமெலாங்
கொடுமீளப் புறப்பட்டார்.
[19]
மனைவியா ருடன்மக்கள்
மற்றுமுள்ள சுற்றத்தோர்
அனைவரையுங் கொண்டிறைஞ்சி
ஆராத காதலுடன்
முனைவரைஉள் ளெழுந்தருளு
வித்தவர்தாள் முன்விளக்கும்
புனைமலர்நீர் தங்கள்மேல்
தெளித்துள்ளும் பூரித்தார்.
[20]
ஆசனத்தில் பூசனைகள்
அமர்வித்து விருப்பினுடன்
வாசநிறை திருநீற்றுக்
காப்பேந்தி மனந்தழைப்பத்
தேசம்உய்ய வந்தவரைத்
திருவமுது செய்விக்கும்
நேசம்உற விண்ணப்பம்
செயஅவரும் அதுநேர்ந்தார்.
[21]
செய்தவர் இசைந்த போது
திருமனை யாரை நோக்கி
எய்திய பேறு நம்பால்
இருந்தவா றென்னே என்று
மைதிகழ் மிடற்றி னான்தன்
அருளினால் வந்த தென்றே
உய்தும்என் றுவந்து கொண்டு
திருவமு தாக்கல் உற்றார்.
[22]
தூயநற் கறிக ளான
அறுவகைச் சுவையால் ஆக்கி
ஆயஇன் னமுதும் ஆக்கி
அமுதுசெய் தருளத் தங்கள்
சேயவர் தம்மில் மூத்த
திருநாவுக் கரசை வாழை
மேயபொற் குருத்துக் கொண்டு
வாஎன விரைந்து விட்டார்.
[23]
நல்லதாய் தந்தை ஏவ
நான்இது செயப்பெற் றேன்என்
றொல்லையில் அணைந்து தோட்டத்
துள்புக்குப் பெரிய வாழை
மல்லவங் குருத்தை ஈரும்
பொழுதினில் வாள ராஒன்
றல்லல்உற் றழுங்கிச் சோர
அங்கையில் தீண்டிற் றன்றே.
[24]
கையினிற் கவர்ந்து சுற்றிக்
கண்ணெரி காந்து கின்ற
பையர வுதறி வீழ்த்துப்
பதைப்புடன் பாந்தள் பற்றும்
வெய்யவே கத்தால் வீழா
முன்னம்வே கத்தால் எய்திக்
கொய்தஇக் குருத்தைச் சென்று
கொடுப்பன்என் றோடி வந்தான்.
[25]
பொருந்திய விடவே கத்தில்
போதுவான் வேகம் முந்த
வருந்தியே அணையும் போழ்து
மாசுணங் கவர்ந்த தியார்க்கும்
அருந்தவர் அமுது செய்யத்
தாழ்க்கயான் அறையேன் என்று
திருந்திய கருத்தி னோடுஞ்
செழுமனை சென்று புக்கான்.
[26]
எரிவிடம் முறையே ஏறித்
தலைக்கொண்ட ஏழாம் வேகம்
தெரிவுற எயிறும் கண்ணும்
மேனியும் கருகித் தீந்து
விரியுரை குழறி ஆவி
விடக்கொண்டு மயங்கி வீழ்வான்
பரிகலக் குருத்தைத் தாயார்
பால்வைத்துப் படிமேல் வீழ்ந்தான்.
[27]
தளர்ந்துவீழ் மகனைக் கண்டு
தாயருந் தந்தை யாரும்
உளம்பதைத் துற்று நோக்கி
உதிரஞ்சோர் வடிவும் மேனி
விளங்கிய குறியுங் கண்டு
விடத்தினால் வீந்தான் என்று
துளங்குதல் இன்றித் தொண்டர்
அமுதுசெய் வதற்குச் சூழ்வார்.
[28]
பெறலரும் புதல்வன் தன்னைப்
பாயினுள் பெய்து மூடிப்
புறமனை முன்றிற் பாங்கோர்
புடையினில் மறைத்து வைத்தே
அறஇது தெரியா வண்ணம்
அமுதுசெய் விப்போம் என்று
விறலுடைத் தொண்ட னார்பால்
விருப்பொடு விரைந்து வந்தார்.
[29]
கடிதுவந் தமுது செய்யக்
காலந்தாழ்க் கின்ற தென்றே
அடிசிலும் கறியும் எல்லாம்
அழகுற அணைய வைத்துப்
படியில்சீர்த் தொண்ட னார்முன்
பணிந்தெழுந் தமுது செய்தெங்
குடிமுழு துய்யக் கொள்வீர்
என்றவர் கூறக் கேட்டு.
[30]
அருந்தவர் எழுந்து செய்ய
அடியிணை விளக்கி வேறோர்
திருந்தும்ஆ சனத்தில் ஏறிப்
பரிகலந் திருத்து முன்னர்
இருந்துவெண் ணீறு சாத்தி
இயல்புடை இருவ ருக்கும்
பொருந்திய நீறு நல்கிப்
புதல்வர்க்கும் அளிக்கும் போழ்தில்.
[31]
ஆதிநான் மறைநூல் வாய்மை
அப்பூதி யாரை நோக்கிக்
காதலர் இவர்க்கு மூத்த
சேயையுங் காட்டும் முன்னே
மேதகு பூதி சாத்த
என்றலும் விளைந்த தன்மை
யாதும்ஒன் றுரையார் இப்போ
திங்கவன் உதவான் என்றார்.
[32]
அவ்வுரை கேட்ட போதே
அங்கணர் அருளால் அன்பர்
செவ்விய திருஉள் ளத்தோர்
தடுமாற்றஞ் சேர நோக்கி
இவ்வுரை பொறாதென் உள்ளம்
என்செய்தான் இதற்கொன் றுண்டால்
மெய்விரித் துரையும் என்ன
விளம்புவார் விதிர்ப்புற் றஞ்சி.
[33]
பெரியவர் அமுது செய்யும்
பேறிது பிழைக்க என்னோ
வருவதென் றுரையா ரேனும்
மாதவர் வினவ வாய்மை
தெரிவுற உரைக்க வேண்டுஞ்
சீலத்தால் சிந்தை நொந்து
பரிவொடு வணங்கி மைந்தர்க்
குற்றது பகர்ந்தார் அன்றே.
[34]
நாவினுக் கரசர் கேளா
நன்றுநீர் மொழிந்த வண்ணம்
யாவர்இத் தன்மை செய்தார்
என்றுமுன் எழுந்து சென்றே
ஆவிதீர் சவத்தை நோக்கி
அண்ணலார் அருளும் வண்ணம்
பாவிசைப் பதிகம் பாடிப்
பணிவிடம் பாற்று வித்தார்.
[35]
தீவிடம் நீங்க உய்ந்த
திருமறை யவர்தஞ் சேயும்
மேவிய உறக்கம் நீங்கி
விரைந்தெழு வானைப் போன்று
சேவுகைத் தவர்ஆட் கொண்ட
திருநாவுக் கரசர் செய்ய
பூவடி வணங்கக் கண்டு
புனிதநீ றளித்தார் அன்றே.
[36]
பிரிவுறும் ஆவி பெற்ற
பிள்ளையைக் காண்பார் தொண்டின்
நெறியினைப் போற்றி வாழ்ந்தார்
நின்றஅப் பயந்தார் தாங்கள்
அறிவரும் பெருமை அன்பர்
அமுதுசெய் தருளு தற்குச்
சிறிதிடை யூறு செய்தான்
இவனென்று சிந்தை நொந்தார்.
[37]
ஆங்கவர் வாட்டந் தன்னை
அறிந்துசொல் அரசர் கூட
ஓங்கிய மனையில் எய்தி
அமுதுசெய் தருள வுற்ற
பாங்கினில் இருப்ப முந்நூல்
பயில்மணி மார்பர் தாமும்
தாங்கிய மகிழ்ச்சி யோடுந்
தகுவன சமைத்துச் சார்வார்.
[38]
புகழ்ந்தகோ மயத்து நீரால்
பூமியைப் பொலிய நீவித்
திகழ்ந்தவான் சுதையும் போக்கிச்
சிறப்புடைத் தீபம் ஏற்றி
நிகழ்ந்தஅக் கதலி நீண்ட
குருத்தினை விரித்து நீரால்
மகிழ்ந்துடன் விளக்கி ஈர்வாய்
வலம்பட மன்னு வித்தார்.
[39]
திருந்திய வாச நன்னீர்
அளித்திடத் திருக்கை நீவும்
பெருந்தவர் மறையோர் தம்மைப்
பிள்ளைக ளுடனே நோக்கி
அரும்புதல் வர்களும் நீரும்
அமுதுசெய் வீர்இங் கென்ன
விரும்பிய உள்ளத் தோடு
மேலவர் ஏவல் செய்வார்.
[40]
மைந்தரும் மறையோர் தாமும்
மருங்கிருந் தமுது செய்யச்
சிந்தைமிக் கில்ல மாதர்
திருவமு தெடுத்து நல்கக்
கொந்தவிழ் கொன்றை வேணிக்
கூத்தனார் அடியா ரோடும்
அந்தமி ழாளி யார்அங்
கமுதுசெய் தருளி னாரே.
[41]
மாதவ மறையோர் செல்வ
மனையிடை அமுது செய்து
காதல்நண் பளித்துப் பன்னாள்
கலந்துடன் இருந்த பின்றை
மேதகு நாவின் மன்னர்
விளங்கிய பழன மூதூர்
நாதர்தம் பாதஞ் சேர்ந்து
நற்றமிழ்ப் பதிகஞ் செய்தார்.
[42]
அப்பூதி யடிக ளார்தம்
அடிமையைச் சிறப்பித் தான்ற
மெய்ப்பூதி அணிந்தார் தம்மை
விரும்புசொன் மாலை வேய்ந்த
இப்பூதி பெற்ற நல்லோர்
எல்லையில் அன்பால் என்றும்
செப்பூதி யங்கைக் கொண்டார்
திருநாவுக் கரசர் பாதம்.
[43]
இவ்வகை அரசின் நாமம்
ஏத்திஎப் பொருளும் நாளும்
அவ்வருந் தவர்பொற் றாளே
எனவுணர்ந் தடைவார் செல்லும்
செவ்விய நெறிய தாகத்
திருத்தில்லை மன்றுள் ஆடும்
நவ்வியங் கண்ணாள் பங்கர்
நற்கழல் நண்ணி னாரே
[44]
மான்மறிக் கையர் பொற்றாள்
வாகீசர் அடைவால் பெற்ற
மேன்மைஅப் பூதி யாராம்
வேதியர் பாதம் போற்றிக்
கான்மலர்க் கமல வாவிக்
கழனிசூழ் சாத்த மங்கை
நான்மறை நீல நக்கர்
திருத்தொழில் நவிலல் உற்றேன்.
[45]

Back to Top
சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
12.260   திரு நீல நக்க  
பண் -   (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
பூத்த பங்கயப் பொகுட்டின்மேற்
பொருகயல் உகளும்
காய்த்த செந்நெலின் காடுசூழ்
காவிரி நாட்டுச்
சாத்த மங்கைஎன் றுலகெலாம்
புகழ்வுறுந் தகைத்தால்
வாய்த்த மங்கல மறையவர்
முதற்பதி வனப்பு.
[1]
நன்மை சாலும்அப் பதியிடை
நறுநுதல் மடவார்
மென்ம லர்த்தடம் படியமற்
றவருடன் விரவி
அன்னம் முன்துறை ஆடுவ
பாடுவ சாமம்
பன்ம றைக்கிடை யுடன்பயிற்
றுவபல பூவை.
[2]
ஆய்ந்த மெய்ப்பொருள் நீறென
வளர்க்கும்அக் காப்பில்
ஏய்ந்த மூன்றுதீ வளர்த்துளார்
இருபிறப் பாளர்
நீந்து நல்லறம் நீர்மையின்
வளர்க்கும்அத் தீயை
வாய்ந்த கற்புடன் நான்கென
வளர்ப்பர்கண் மடவார்.
[3]
சீலம் உய்த்தவத் திருமறை
யோர்செழு மூதூர்
ஞாலம் மிக்கநான் மறைப்பொருள்
விளக்கிய நலத்தார்
ஆலம் வைத்தகண் டத்தவர்
தொண்டராம் அன்பர்
நீல நக்கனார் என்பவர்
நிகழ்ந்துளார் ஆனார்.
[4]
வேத உள்ளுறை யாவன
விரிபுனல் வேணி
நாதர் தம்மையும் அவரடி
யாரையும் நயந்து
பாத அர்ச்சனை புரிவதும்
பணிவதும் என்றே
காத லால்அவை இரண்டுமே
செய்கருத் துடையார்.
[5]
மெய்த்த ஆகம விதிவழி
வேதகா ரணரை
நித்தல் பூசனை புரிந்தெழு
நியமமுஞ் செய்தே
அத்தர் அன்பருக் கமுதுசெய்
விப்பது முதலா
எத்தி றத்தன பணிகளும்
ஏற்றெதிர் செய்வார்.
[6]
ஆய செய்கையில் அமருநாள்
ஆதிரை நாளில்
மேய பூசனை நியதியை
விதியினால் முடித்துத்
தூய தொண்டனார் தொல்லைநீ
டயவந்தி அமர்ந்த
நாய னாரையும் அருச்சனை
புரிந்திட நயந்தார்.
[7]
உறையு ளாகிய மனைநின்றும்
ஒருமைஅன் புற்ற
முறைமை யால்வரு பூசைக்கும்
முற்றவேண் டுவன
குறைவ றக்கொண்டு மனைவியார்
தம்மொடுங் கூட
இறைவர் கோயில்வந் தெய்தினர்
எல்லையில் தவத்தோர்.
[8]
அணைய வந்துபுக் கயவந்தி
மேவிய அமுதின்
துணைம லர்க்கழல் தொழுதுபூ
சனைசெயத் தொடங்கி
இணைய நின்றங்கு வேண்டுவ
மனைவியார் ஏந்த
உணர்வின் மிக்கவர் உயர்ந்தஅர்ச்
சனைமுறை உய்த்தார்.
[9]
நீடு பூசனை நிரம்பியும்
அன்பினால் நிரம்பார்
மாடு சூழ்புடை வலங்கொண்டு
வணங்கிமுன் வழுத்தித்
தேடு மாமறைப் பொருளினைத்
தெளிவுற நோக்கி
நாடும் அஞ்செழுத் துணர்வுற
இருந்துமுன் நவின்றார்.
[10]
தொலைவில் செய்தவத் தொண்டனார்
சுருதியே முதலாங்
கலையின் உண்மையாம் எழுத்தஞ்சுங்
கணிக்கின்ற காலை
நிலையின் நின்றுமுன் வழுவிட
நீண்டபொன் மேருச்
சிலையி னார்திரு மேனிமேல்
விழுந்ததோர் சிலம்பி.
[11]
விழுந்த போதில்அங் கயல்நின்ற
மனைவியார் விரைவுற்
றெழுந்த அச்சமோ டிளங்குழ
வியில்விழுஞ் சிலம்பி
ஒழிந்து நீங்கிட ஊதிமுன்
துமிப்பவர் போலப்
பொழிந்த அன்பினால் ஊதிமேல்
துமிந்தனர் போக.
[12]
பதைத்த செய்கையால் மனைவியார்
முற்செயப் பந்தஞ்
சிதைக்கு மாதவத் திருமறை
யவர்கண்டு தங்கண்
புதைத்து மற்றிது செய்ததென்
பொறியிலாய் என்னச்
சுதைச்சி லம்பிமேல் விழஊதித்
துமிந்தனன் என்றார்.
[13]
மனைவி யார்செய்த அன்பினை
மனத்தினில் கொள்ளார்
புனையும் நூல்மணி மார்பர்தம்
பூசனைத் திறத்தில்
இனைய செய்கைஇங் கநுசித
மாம்என எண்ணும்
நினைவி னால்அவர் தம்மைவிட்
டகன்றிட நீப்பார்.
[14]
மின்நெ டுஞ்சடை விமலர்மேல்
விழுந்தநூற் சிலம்பி
தன்னை வேறொரு பரிசினால்
தவிர்ப்பது தவிர
முன்அ ணைந்துவந் தூதிவாய்
நீர்ப்பட முயன்றாய்
உன்னை யான்இனித் துறந்தனன்
ஈங்கென உரைத்தார்.
[15]
மற்ற வேலையிற் கதிரவன்
மலைமிசை மறைந்தான்
உற்ற ஏவலின் மனைவியார்
ஒருவழி நீங்க
முற்ற வேண்டுவ பழுதுதீர்
பூசனை முடித்துக்
கற்றை வேணியார் தொண்டருங்
கடிமனை புகுந்தார்.
[16]
அஞ்சும் உள்ளமோ டவர்மருங்
கணைவுற மாட்டார்
நஞ்சம் உண்டவர் கோயிலில்
நங்கையார் இருந்தார்
செஞ்சொல் நான்மறைத் திருநீல
நக்கர்தாம் இரவு
பஞ்சின் மெல்லணைப் பள்ளியிற்
பள்ளிகொள் கின்றார்.
[17]
பள்ளி கொள்பொழு தயவந்திப்
பரமர்தாங் கனவில்
வெள்ள நீர்ச்சடையோடுதம்
மேனியைக் காட்டி
உள்ளம் வைத்தெமை ஊதிமுன்
துமிந்தபால் ஒழியக்
கொள்ளும் இப்புறஞ் சிலம்பியின்
கொப்புள்என் றருள.
[18]
கண்ட அப்பெருங் கனவினை
நனவெனக் கருதிக்
கொண்ட அச்சமோ டஞ்சலி
குவித்துடன் விழித்துத்
தொண்ட னார்தொழு தாடினார்
பாடினார் துதித்தார்
அண்டர் நாயகர் கருணையைப்
போற்றிநின் றழுதார்.
[19]
போது போயிருள் புலர்ந்திடக்
கோயிலுள் புகுந்தே
ஆதி நாயகர் அயவந்தி
அமர்ந்தஅங் கணர்தம்
பாத மூலங்கள் பணிந்துவீழ்ந்
தெழுந்துமுன் பரவி
மாத ராரையுங் கொண்டுதம்
மனையில்மீண் டணைந்தார்.
[20]
பின்பு முன்னையிற் பெருகிய
மகிழ்ச்சிவந் தெய்த
இன்பு றுந்திறத் தெல்லையில்
பூசனை இயற்றி
அன்பு மேம்படும் அடியவர்
மிகஅணை வார்க்கு
முன்பு போலவர் வேண்டுவ
விருப்புடன் முடிப்பார்.
[21]
அன்ன தன்மையில் அமர்ந்தினி
தொழுகும்அந் நாளில்
மன்னு பூந்தராய் வருமறைப்
பிள்ளையார் பெருமை
பன்னி வையகம் போற்றிட
மற்றவர் பாதம்
சென்னி வைத்துடன் சேர்வுறும்
விருப்பினிற் சிறந்தார்.
[22]
பண்பு மேம்படு நிலைமையார்
பயிலும்அப் பருவம்
மண்பெ ருந்தவப் பயன்பெற
மருவுநற் பதிகள்
விண்பி றங்குநீர் வேணியார்
தமைத்தொழ அணைவார்
சண்பை மன்னருஞ் சாத்தமங்
கையில்வந்து சார்ந்தார்.
[23]
நீடு சீர்த்திரு நீலகண்
டப்பெரும் பாணர்
தோடு லாங்குழல் விறலியார்
உடன்வரத் தொண்டர்
கூடும் அப்பெருங் குழாத்தொடும்
புகலியர் பெருமான்
மாடு வந்தமை கேட்டுளம்
மகிழ்நீல நக்கர்.
[24]
கேட்ட அப்பொழு தேபெரு
மகிழ்ச்சியிற் கிளர்ந்து
தோட்ட லங்கலுங் கொடிகளும்
புனைந்துதோ ரணங்கள்
நாட்டி நீள்நடைக் காவண
மிட்டுநற் சுற்றத்
தீட்ட முங்கொடு தாமுமுன்
பெதிர்கொள எழுந்தார்.
[25]
சென்று பிள்ளையார் எழுந்தரு
ளுந்திருக் கூட்டம்
ஒன்றி அங்கெதிர் கொண்டுதங்
களிப்பினால் ஒருவா
றன்றி ஆடியும் பாடியும்
தொழுதெழுந் தணைவார்
பொன்ற யங்குநீள் மனையிடை
யுடன்கொடு புகுந்தார்.
[26]
பிள்ளை யாரெழுந் தருளிய
பெருமைக்குத் தக்க
வெள்ள மாகிய அடியவர்
கூட்டமும் விரும்ப
உள்ளம் ஆதர வோங்கிட
ஓங்குசீர்க் காழி
வள்ள லாரைத்தம் மனையிடை
அமுதுசெய் வித்தார்.
[27]
அமுது செய்தபின் பகலவன்
மேல்கடல் அணையக்
குமுத வாவியிற் குளிர்மதிக்
கதிரணை போதில்
இமய மங்கைதன் திருமுலை
அமுதுண்டார் இரவும்
தமது சீர்மனைத் தங்கிட
வேண்டுவ சமைத்தார்.
[28]
சீல மெய்த்திருத் தொண்டரோ
டமுதுசெய் தருளி
ஞாலம் உய்ந்திட நாயகி
யுடன்நம்பர் நண்ணும்
காலம் முற்பெற அழுதவர்
அழைத்திடக் கடிது
நீல நக்கனார் வந்தடி
பணிந்துமுன் நின்றார்.
[29]
நின்ற அன்பரை நீலகண்
டயாழ்ப் பாணர்க்
கின்று தங்கஓர் இடங்கொடுத்
தருளுவீர் என்ன
நன்றும் இன்புற்று நடுமனை
வேதியின் பாங்கர்ச்
சென்று மற்றவர்க் கிடங்கொடுத்
தனர்திரு மறையோர்.
[30]
ஆங்கு வேதியில் அறாதசெந்
தீவலஞ் சுழிவுற்
றோங்கி முன்னையில் ஒருபடித்
தன்றியே ஒளிரத்
தாங்கு நூலவர் மகிழ்வுறச்
சகோடயாழ்த் தலைவர்
பாங்கு பாணியா ருடன்அரு
ளாற்பள்ளி கொண்டார்.
[31]
கங்கு லிற்பள்ளி கொண்டபின்
கவுணியர் தலைவர்
அங்கு நின்றெழுந் தருளுவார்
அயவந்தி அமர்ந்த
திங்கள் சூடியை நீலநக்
கரைச்சிறப் பித்தே
பொங்கு செந்தமிழ்த் திருப்பதி
கத்தொடை புனைந்தார்.
[32]
பதிக நாண்மலர் கொண்டுதம்
பிரான்கழல் பரவி
அதிக நண்பினை நீலநக்
கருக்களித் தருளி
எதிர்தொ ழும்பதி களில்எழுந்
தருளினார் என்றும்
புதிய செந்தமிழ்ப் பழமறை
மொழிந்தபூ சுரனார்.
[33]
பிள்ளை யார்எழுந் தருளஅத்
தொண்டர்தாம் பின்பு
தள்ளும் அன்புடன் கேண்மையும்
தவிர்ப்பில எனினும்
வள்ள லார்திரு வருளினை
வலியமாட் டாமை
உள்ளம் அங்குடன் போக்கிமீண்
டொருவகை இருந்தார்.
[34]
மேவு நாளில்அவ் வேதியர்
முன்புபோல் விரும்புந்
தாவில் பூசனை முதற்செய்கை
தலைத்தலை சிறப்பச்
சேவின் மேலவர் மைந்தராந்
திருமறைச் சிறுவர்
பூவ டித்தலம் பொருந்திய
உணர்வொடும் பயின்றார்.
[35]
சண்பை யாளியார் தாமெழுந்
தருளும்எப் பதியும்
நண்பு மேம்பட நாளிடைச்
செலவிட்டு நண்ணி
வண்பெ ரும்புக ழவருடன்
பயின்றுவந் துறைந்தார்
திண்பெ ருந்தொண்ட ராகிய
திருநீல நக்கர்.
[36]
பெருகு காதலில் பின்நெடு
நாள்முறை பிறங்க
வருபெ ருந்தவ மறையவர்
வாழிசீ காழி
ஒருவர் தந்திருக் கல்லியா
ணத்தினில் உடனே
திரும ணத்திறஞ் சேவித்து
நம்பர்தாள் சேர்ந்தார்.
[37]
தருதொ ழில்திரு மறையவர்
சாத்தமங் கையினில்
வருமு தற்பெருந் திருநீல
நக்கர்தாள் வணங்கி
இருபி றப்புடை அந்தணர்
ஏறுயர்த் தவர்பால்
ஒருமை உய்த்துணர் நமிநந்தி
யார்தொழில் உரைப்பாம்.
[38]

Back to Top
சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
12.270   நமிநந்தி அடிகள் நாயனார்  
பண் -   (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
வையம் புரக்குந் தனிச்செங்கோல்
வளவர் பொன்னித் திருநாட்டுச்
செய்ய கமலத் தடம்பணையும்
செழுநீர்த் தடமும் புடையுடைத்தாய்ப்
பொய்தீர் வாய்மை அருமறைநூல்
புரிந்த சீலப் புகழதனால்
எய்தும் பெருமை எண்திசையும்
ஏறூர் ஏமப் பேறூரால்.
[1]
மாலை பயிலும் தோரணங்கள்
மருங்கு பயிலும் மணிமறுகு
வேலை பயிலும் புனல்பருகு
மேகம் பயிலும் மாடங்கள்
சோலை பயிலும் குளிர்ந்தஇருள்
சுரும்பு பயிலும் அரும்பூகம்
காலை பயிலும் வேதஒலி
கழுநீர் பயிலும் செழுநீர்ச்செய்.
[2]
பணையில் விளைந்த வெண்ணெல்லின்
பரப்பின் மீது படச்செய்ய
துணர்மென் கமலம் இடைஇடையே
சுடர்விட் டெழுந்து தோன்றுவன
புணர்வெண் புரிநூ லவர்வேள்விக்
களத்தில் புனைந்த வேதிகைமேல்
மணல்வெண் பரப்பின் இடைஇடையே
வளர்த்த செந்தீ மானுமால்.
[3]
பெருமை விளங்கும் அப்பதியில்
பேணும் நீற்றுச் சைவநெறி
ஒருமை வழிவாழ் அந்தணர்தம்
ஓங்கு குலத்தி னுள்வந்தார்
இருமை உலகும் ஈசர்கழல்
இறைஞ்சி ஏத்தப் பெற்றதவத்
தருமை புரிவார் நமிநந்தி
அடிகள் என்பா ராயினார்.
[4]
வாய்மை மறைநூல் சீலத்தால்
வளர்க்கும் செந்தீ எனத்தகுவார்
தூய்மைத் திருநீற் றடைவேமெய்ப்
பொருளென் றறியுந் துணிவினார்
சாம கண்டர் செய்யகழல்
வழிபட் டொழுகும் தன்மைநிலை
யாம இரவும் பகலும்உணர்
வொழியா இன்பம் எய்தினார்.
[5]
அவ்வூர் நின்றும் திருவாரூர்
அதனை அடைவார் அடியார்மேல்
வெவ்வூ றகற்றும் பெருமான்தன்
விரைசூழ் மலர்த்தாள் பணிவுறுவ
தெவ்வூ தியமும் எனக்கொள்ளும்
எண்ணம் உடையார் பலநாளும்
தெவ்வூர் எரித்த வரைச்சிலையார்
திருப்பா தங்கள் வணங்கினார்.
[6]
செம்பொற் புற்றின் மாணிக்கச்
செழுஞ்சோ தியைநேர் தொழுஞ்சீலம்
தம்பற் றாக நினைந்தணைந்து
தாழ்ந்து பணிந்து வாழ்ந்துபோந்
தம்பொற் புரிசைத் திருமுன்றில்
அணைவார் பாங்கோர் அரனெறியின்
நம்பர்க் கிடமாங் கோயிலினுள்
புக்கு வணங்க நண்ணினார்.
[7]
நண்ணி இறைஞ்சி அன்பினால்
நயப்புற் றெழுந்த காதலுடன்
அண்ண லாரைப் பணிந்தெழுவார்
அடுத்த நிலைமைக் குறிப்பினால்
பண்ணுந் தொண்டின் பாங்குபல
பயின்று பரவி விரவுவார்
எண்ணில் தீபம் ஏற்றுவதற்
கெடுத்த கருத்தின் இசைந்தெழுவார்.
[8]
எழுந்த பொழுது பகற்பொழுதங்
கிறங்கு மாலை எய்துதலும்
செழுந்தண் பதியி னிடையப்பாற்
செல்லிற் செல்லும் பொழுதென்ன
ஒழிந்தங் கணைந்தோர் மனையில்விளக்
குறுநெய் வேண்டி உள்புகலும்
அழிந்த நிலைமை அமணர்மனை
ஆயிற் றங்கண் அவருரைப்பார்.
[9]
கையில் விளங்கு கனலுடையார்
தமக்கு விளக்கு மிகைகாணும்
நெய்யிங் கில்லை விளக்கெரிப்பீ
ராகில் நீரை முகந்தெரித்தல்
செய்யும் என்று திருத்தொண்டர்க்
குரைத்தார் தெளியா தொருபொருளே
பொய்யும் மெய்யு மாம்என்னும்
பொருள்மேல் கொள்ளும் புரைநெறியார்.
[10]
அருகர் மதியா துரைத்தவுரை
ஆற்றா ராகி அப்பொழுதே
பெருக மனத்தில் வருத்தமுடன்
பெயர்ந்து போந்து பிறையணிந்த
முருகு விரியும் மலர்க்கொன்றை
முடியார் கோயில் முன்எய்தி
உருகும் அன்பர் பணிந்துவிழ
ஒருவாக் கெழுந்த துயர்விசும்பில்.
[11]
வந்த கவலை மாற்றும்இனி
மாறா விளக்குப் பணிமாற
இந்த மருங்கில் குளத்துநீர்
முகந்து கொடுவந் தேற்றுமென
அந்தி மதியம் அணிந்தபிரான்
அருளால் எழுந்த மொழிகேளாச்
சிந்தை மகிழ்ந்து நமிநந்தி
அடிகள் செய்வ தறிந்திலரால்.
[12]
சென்னி மிசைநீர் தரித்தபிரான்
அருளே சிந்தை செய்தெழுவார்
நன்னீர்ப் பொய்கை நடுப்புக்கு
நாதர் நாமம் நவின்றேத்தி
அந்நீர் முகந்து கொண்டேறி
அப்பர் கோயில் அடைந்தகலுள்
முந்நீர் உலகம் அதிசயிப்ப
முறுக்குந் திரிமேல் நீர்வார்த்தார்.
[13]
சோதி விளக்கொன் றேற்றுதலும்
சுடர்விட் டெழுந்த ததுநோக்கி
ஆதி முதல்வர் அரனெறியார்
கோயில் அடைய விளக்கேற்றி
ஏதம் நினைந்த அருகந்தர்
எதிரே முதிருங் களிப்பினுடன்
நாதர் அருளால் திருவிளக்கு
நீரால் எரித்தார் நாடறிய.
[14]
நிறையும் பரிசு திருவிளக்கு
விடியும் அளவும் நின்றெரியக்
குறையுந் தகளி களுக்கெல்லாம்
கொள்ள வேண்டும் நீர்வார்த்து
மறையின் பொருளை அர்ச்சிக்கும்
மனையின் நியதி வழுவாமல்
உறையும் பதியின் அவ்விரவே
அணைவார் பணிவுற் றொருப்பட்டார்.
[15]
இரவு சென்று தம்பதியில்
எய்தி மனைபுக் கென்றும்போல்
விரவி நியமத் தொழில்முறையே
விமலர் தம்மை அருச்சித்துப்
பரவி அமுது செய்தருளிப்
பள்ளி கொண்டு புலர்காலை
அரவம் அணிவார் பூசையமைத்
தாரூர் நகரின் மீண்டணைந்தார்.
[16]
வந்து வணங்கி அரனெறியார்
மகிழுங் கோயில் வலங்கொண்டு
சிந்தை மகிழப் பணிந்தெழுந்து
புறம்பும் உள்ளுந் திருப்பணிகள்
முந்த முயன்று பகலெல்லாம்
முறையே செய்து மறையவனார்
அந்தி அமையத் தரியவிளக்
கெங்கும் ஏற்றி அடிபணிவார்.
[17]
பண்டு போலப் பலநாளும்
பயிலும் பணிசெய் தவர்ஒழுகத்
தண்டி அடிக ளால்அமணர்
கலக்கம் விளைந்து சார்வில்அமண்
குண்டர் அழிய ஏழுலகும்
குலவும் பெருமை நிலவியதால்
அண்டர் பெருமான் தொண்டர்கழல்
அமரர் பணியும் அணியாரூர்.
[18]
நாத மறைதேர் நமிநந்தி
அடிக ளார்நற் தொண்டாகப்
பூத நாதர் புற்றிடங்கொள்
புனிதர்க் கமுது படிமுதலாம்
நீதி வளவன் தான்வேண்டும்
நிபந்தம் பலவும் அரியணையின்
மீது திகழ இருந்தமைத்தான்
வேதா கமநூல் விதிவிளங்க.
[19]
வென்றி விடையார் மதிச்சடையார்
வீதி விடங்கப் பெருமாள்தாம்
என்றுந் திருவா ரூர்ஆளும்
இயல்பின் முறைமைத் திருவிளையாட்
டொன்றுஞ் செயலும் பங்குனிஉத்
திரமாந் திருநாள் உயர்சிறப்பும்
நின்று விண்ணப் பஞ்செய்த
படிசெய் தருளும் நிலைபெற்றார்.
[20]
இன்ன பரிசு திருப்பணிகள்
பலவுஞ் செய்தே ஏழுலகும்
மன்னும் பெருமைத் திருவாரூர்
மன்னர் அடியார் வழிநிற்பார்
அன்ன வண்ணந் திருவிளையாட்
டாடி அருள எந்நாளும்
நன்மை பெருக நமிநந்தி
அடிகள் தொழுதார் நாம்உய்ய.
[21]
தேவர் பெருமான் எழுச்சிதிரு
மணலிக் கொருநாள் எழுந்தருள
யாவ ரென்னா துடன்சேவித்
தெல்லாக் குலத்தில் உள்ளோரும்
மேவ அன்பர் தாமுமுடன்
சேவித் தணைந்து விண்ணவர்தம்
காவ லாளர் ஓலக்கம்
அங்கே கண்டு களிப்புற்றார்.
[22]
பொழுது வைகச் சேவித்துப்
புனிதர் மீண்டுங் கோயில்புகத்
தொழுது தம்மூர் மருங்கணைந்து
தூய மனையுள் புகுதாதே
இழுதும் இருள்சேர் இரவுபுறங்
கடையில் துயில இல்லத்து
முழுதுந் தருமம் புரிமனையார்
வந்துள் புகுத மொழிகின்றார்.
[23]
திங்கள் முடியார் பூசனைகள்
முடித்துச் செய்யுங் கடன்முறையால்
அங்கி தனைவேட் டமுதுசெய்து
பள்ளி கொள்வீர் எனஅவர்க்குத்
தங்கள் பெருமான் திருமணலிக்
கெழுச்சி சேவித் துடன்நண்ண
எங்கும் எல்லா ரும்போத
இழிவு தொடக்கிற் றெனைஎன்று.
[24]
ஆத லாலே குளித்தடுத்த
தூய்மை செய்தே அகம்புகுந்து
வேத நாதர் பூசையினைத்
தொடங்க வேண்டும் அதற்குநீ
சீத நன்னீர் முதலான
கொண்டிங் கணைவாய் எனச்செப்பக்
காதல் மனையார் தாமும்அவை
கொணரும் அதற்குக் கடிதணைந்தார்.
[25]
ஆய பொழுது தம்பெருமான்
அருளா லேயோ மேனியினில்
ஏயும் அசைவின் அயர்வாலோ
அறியோம் இறையும் தாழாதே
மேய உறக்கம் வந்தணைய
விண்ணோர் பெருமான் கழல்நினைந்து
தூய அன்பர் துயில்கொண்டார்
துயிலும் பொழுது கனவின்கண்.
[26]
மேன்மை விளங்குந் திருவாரூர்
வீதி விடங்கப் பெருமாள்தாம்
மான அன்பர் பூசனைக்கு
வருவார் போல வந்தருளி
ஞான மறையோய் ஆரூரில்
பிறந்தார் எல்லாம் நங்கணங்கள்
ஆன பரிசு காண்பாய்என்
றருளிச் செய்தங் கெதிர்அகன்றார்.
[27]
ஆதி தேவர் எழுந்தருள
உணர்ந்தார் இரவர்ச் சனைசெய்யா
தேதம் நினைந்தேன் எனஅஞ்சி
எழுந்த படியே வழிபட்டு
மாத ரார்க்கும் புகுந்தபடி
மொழிந்து விடியல் விரைவோடு
நாத னார்தந் திருவாரூர்
புகுத எதிர்அந் நகர்காண்பார்.
[28]
தெய்வப் பெருமாள் திருவாரூர்ப்
பிறந்து வாழ்வார் எல்லாரும்
மைவைத் தனைய மணிகண்டர்
வடிவே யாகிப் பெருகொளியால்
மொய்வைத் தமர்ந்த மேனியராம்
பரிசு கண்டு முடிகுவித்த
கைவைத் தஞ்சி அவனிமிசை
விழுந்து பணிந்து களிசிறந்தார்.
[29]
படிவம் மாற்றிப் பழம்படியே
நிகழ்வுங் கண்டு பரமர்பால்
அடியேன் பிழையைப் பொறுத்தருள
வேண்டும் என்று பணிந்தருளால்
குடியும் திருவா ரூரகத்துப்
புகுந்து வாழ்வார் குவலயத்து
நெடிது பெருகுந் திருத்தொண்டு
நிகழச் செய்து நிலவுவார்.
[30]
நீறு புனைவார் அடியார்க்கு
நெடுநாள் நியதி யாகவே
வேறு வேறு வேண்டுவன
எல்லாஞ் செய்து மேவுதலால்
ஏறு சிறப்பின் மணிப்புற்றில்
இருந்தார் தொண்டர்க் காணியெனும்
பேறு திருநா வுக்கரசர்
விளம்பப் பெற்ற பெருமையினார்.
[31]
இன்ன வகையால் திருப்பணிகள்
எல்லா உலகும் தொழச்செய்து
நன்மை பெருகும் நமிநந்தி
அடிகள் நயமார் திருவீதிச்
சென்னி மதியும் திருநதியும்
அலைய வருவார் திருவாரூர்
மன்னர் பாத நீழல்மிகும்
வளர்பொற் சோதி மன்னினார்.
[32]
நாட்டார் அறிய முன்னாளில்
நன்னாள் உலந்த ஐம்படையின்
பூட்டார் மார்பிற் சிறியமறைப்
புதல்வன் தன்னைப் புக்கொளியூர்த்
தாள்தா மரைநீர் மடுவின்கண்
தனிமா முதலை வாய்நின்றும்
மீட்டார் கழல்கள் நினைவாரை
மீளா வழியின் மீட்பனவே.
[33]

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai nool